skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
9:34 PM
தடாகத்து
நீரலைகளில்
மிதந்தபடி பால் நிலா
உயிரினமே வாழ
வழியில்லை நிலவில்
இப்போதைக்கு
ஆய்ந்து சொல்கிறார்கள்
மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன
வெள்ளி மீன்கள்
Posted by
வருணன்
at
10:12 PM
உன்னை யாரென்றே நீ
எதிரிருக்கையில் உன் தாயோடு
அமரும் வரை தெரியாது
இப்போதும்...
முன்பின் பரிச்சயமில்லை
ஆயினும் விழிகள்
பரிச்சயமாகிக் கொள்கின்றன
சன்னலோர வேடிக்கைகளின்
ஊடே யதார்த்தமாய்
பார்ப்பது போல் உனைத்
தேடும் கண்கள்
நீயோ தாயின் பின்னாலிருந்து
உன் பார்வையை மட்டும்
படரவிடுகிறாய்
ஒருவர் செய்வதையே மற்றவரும்
செய்து கவனத்தைக்
கவர்வதிலேயே குறியாக
அருகிலிருக்கும் பெரியவரொருவர்
எல்லாம் வயசு என்பது போல்
குறுநகை புரிகிறார்
நம்மைப் பார்த்து
நீ என் தோழியுமில்லை
என்னவளுமில்லை
உனக்கும் நான் அப்படியே
இருப்பினும் எனக்கு நீ
பரிச்சயம் இப்போது
வார்த்தை பேசாது
நம் அமர்வுக்கு
வெறும் சாட்சிகளாய்
மட்டுமிருந்தோம்
இறுதிவரை.
Posted by
வருணன்
at
7:33 PM
சதை போதையில்
சிக்கிச் சிதைகின்றன
சில இச்சை இரவுகள்
நோய் வருத்திய
உடலசதியில்
மயங்கிக் கரைகின்றன
சில
கடந்த கால
நினைவுகளை அசைபோட
இம்சிக்கின்றன சில
தூண்டில் இரவுகள்
வரும் நாட்களைக் குறித்த
கேள்விக் கணைகள்
நெஞ்சில் தைக்க
விட்டத்தை வெறித்தபடி துயிலாது
துடிக்கின்றன பல இரவுகள்
அழியாத கோலங்களாய்
இருள் படர்ந்த இரவுகளோ
என்றும் போல் இயல்பாய்
எதிர்நோக்குகின்றன விடியல்களை.
Posted by
வருணன்
at
7:29 PM
இருள் போர்த்திய அறைக்குள்
தீக்குச்சி உரச
பரவியிருந்த இருளை
உண்டு சிரித்தது தீச்சுடர்
கணப்பொழுதில்
இருள் தீச்சுடரை
விழுங்கிச் செரித்து
மௌனமாய் பரவியது
மீண்டும்
ஒளியென்பது இருளுக்கு இடையே
விடப்படும் இடைவேளை.
Posted by
வருணன்
at
8:22 PM
வியாபாரம் அற்றுப்போன
நெருக்கடி நேரத்திலும்
அநாதைச் சிறுமியின்
பசியாற்றும்
பழக்காரக் கிழவி
துணைவியில்லா
தனிமை தருணங்களில்
அன்பாய் அன்னமிடும்
அடுத்த வீட்டுப் பெண்
பேருந்தில்
தன்னை உரசித் தொலைத்திருப்பினும்
அவன் தவறி விழுந்து
உயிர் மாய்கையில்
கண் கலங்கும்
பணி செல்லும் யுவதி
வசைபாடும் மாமியார்
நலமடைய விரதமிருக்கும்
மாட்டுப் பெண்கள்
இறந்து விட்ட
கணவனையே இன்னும்
நினைத்து பத்தினியாய் வாழும்
பல்லாயிரம் பெண்டிர்
வையத்தில்
முதுகில் சிறகுகள்
முளைக்காத தேவதைகள்
இன்றும் வாழ்ந்தபடி
பல இடங்களில்.
Posted by
வருணன்
at
6:27 PM
மரங்களினின்று இலைகள் உதிர்ந்து
பறைசாற்றுகின்றன
காலங்கள் மாறியதை
அருகிருந்த காற்றில் கலந்திருந்த
உன் வசீகரிக்கும் வாசனை
கரைந்தே போய்விட்டது முற்றிலுமாய்
நான் அமர்ந்திருக்கும் இருக்கையின்
கைப்பிடிகளை இறுகப் பற்றியபடி
பார்த்த வண்ணமிருக்கிறேன்
என் எதிர் இருக்கையை
நீ இடம் பெயர்ந்து
சென்ற பின்பும்.
Posted by
வருணன்
at
7:11 PM
குலமரம் செழிக்க நீர்தேடும்
வேராய் அந்நிய தேசம் படர்ந்தேன்
விலை பேசப்பட்டன என் சிறகுகள்
இப்போது
அயலான் என் சிறகுகளால்
காது குடைந்து சுகிக்கிறான்
அழகிய சீமாட்டிகள் தத்தமது
தொப்பிகளை அலங்கரித்துக் கொள்கின்றனர்
இறகுகள் ஒவ்வொன்றாய் பறிபோக
சிறகுகள் இழந்தேன்
கிடைத்த கூலியில் உயரமான மரங்களில்
கூடுகளமைத்தேன் என் குலப் பறவைகள்
களித்திருக்க
தூர தேசத்தில் சிறகுகளிழந்த நான்
மடிந்து போவேன் ஒரு நாள்
எம் கொடிகள் இங்கே தழைக்க.
Posted by
வருணன்
at
9:19 PM
காற்றினில் மிதந்தாடும்
காகிதங்கள் பறக்காதிருக்க
இரு முனைகளையும்
இறுகப் பிடிக்கின்றாய் உன்
சுண்டு விரலாலும்
சுட்டு விரலாலும்
உன் மென்விரல் கரைகளுக்கு
மத்தியில் அசைவாடுகின்றன இக்கணத்தில்
என் கவிதைகளும்,புனைவுகளும்
கூடவே நானும்.
Posted by
வருணன்
at
9:43 PM
கோவிலுக்குள் சென்று
கடமையெனக் கருதி
மந்திரங்கள் ஓதி
பிரகாரம் சுற்றி
வேண்டுதல் நிறைவேற்றும்
பொழுதெல்லாம் ஏதும்
தெரியவில்லை வித்தியாசமாய்
தான் சுயம் துறந்து
யாசித்துப் பெற்ற ஒரு கவளத்தில்
பாதியை தெருவோர நாய்க்கு
பங்கிட்டுக் கொடுத்த யாசகர்
மீது பார்வை படிந்தது தற்செயலாய்
தூரத்து கருவறையில்
சுடர்ந்த ஒளிக்கவிதை
காற்றினில் அசைவாடியது
அதன் அன்பெனும் சோதி
இளகிக் கிடந்த
இதயப் பள்ளத்தை
நிறைக்கத் தொடங்கியது
முதன் முறையாய் விழித்தது அகம்
எனக்குள் முழுதாய் நான்
மீண்டும் பிறந்தேன்.
Posted by
வருணன்
at
10:11 PM

முடிவில்லததொரு தொடர்பாடலைப்
பாடியபடி பிறை நிலாக்களை
நறுக்கி நறுக்கி நீயுன்
விரல்களின் உயரத்தைக் குறைத்தபடியிருக்கிறாய்
நானோ ஒரு மாளிகையின் பலகணியில்
பழகிய உதடுகளுடனும் பழகாத முத்தங்களுடனும்
நீ வருவாயென எதிர்பார்திருக்கும்
ஒவ்வொரு காத்திருப்பையும் சட்டமிட்டு என் மாளிகையின்
சுவர்களில் தொங்கவிட்டபடியிருக்கிறேன்
தூரத்தில் தெரியும் உன் நிழலுருவை வருந்தியழைக்கும்
என் அழைப்புகள்
தவழ்ந்து மேகமாகி உன் மேலே நிலைக்கின்றன
நீயோ மழையாய்ப் பொழியும் என் விண்ணப்பங்களில்
நனையாது கால்களைச் சுற்றிக் குழையும் செல்ல
நாயொன்றை வாரியணைத்து முத்தமிடுகிறாய்.
பகலும் இரவும், இரவும் பகலும் கடந்திட்ட பின்னரும்
சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
உன்னுடைய தொடர் பாடல்.
Posted by
வருணன்
at
7:58 AM
மண்ணை நனைத்து ஓய்ந்து விட்ட
மழையின் தூரல் மிச்சமிருந்த
நடுநிசி
குளிர் பரிசைக்
கொண்டாடியபடி ஊரெ
கனவுகளின் தேசத்தில்
நித்திரையுடன் ஊடல் கொண்டு
நான் மட்டும் மஞ்சத்தில்
புரண்ட வண்ணம்
மனச்சமவெளியில்
தெரித்து விழுந்த
வார்த்தை துணுக்குகளை
சேகரித்தபடி
வார்த்தை நரம்பெடுத்துப்
பின்னிய சிந்தனை வலையில்
சிக்கித் தவித்தது
ஞாபக சிலந்தி
பிரசவிக்க வேண்டிய அவசரம்
இமை விரித்து
வெளிச்சம் செய்து
வேகவேகமாய் சரணடைந்தேன்
காகிதப் படுக்கையில்
பேனா மருத்துவர்
பிரசவம் பார்க்க கையூட்டு
கேட்கவில்லை நல்லவேளையாய்
சுகப்பிரசவம்.
Posted by
வருணன்
at
7:01 PM
நானுனக்கு பரிசளித்த தேவதையை
உடனெடுத்துச் செல்வாயா என்ற
என் ஐயத்தை
வார்த்தைப் புறாக்கள் வாயிலாக
தூது அனுப்பினேன்
இல்லையென்ற பதிலைக் கட்டி
திருப்பியனுப்பினாய்
அதன் பிஞ்சு கால்களில்
நீ கண்ணுராது உன்
வரவேற்பறையை அலங்கரித்திடும்
அத்தேவதையின் பிம்பம்
என் மன வீட்டின் இருளினுள்
அசைவாடிக் கொண்டிருக்கிறது
தொட்டு வருடிய உன் சில நொடி
ஸ்பரிசத்தின் சிலாகிப்புகளை
அசைபோட்டபடி...
Posted by
வருணன்
at
6:39 PM
என் கவிதைகளின் அர்த்தங்களை
அதன் வார்த்தை கோர்வைக்குள்
தேடாதே
பல அவயங்களில் அவையுனக்கு
வெறுமையாய்த் தெரியலாம்
அர்த்தமற்றது போல்
சில பொழுதுகளில்
நான் சொல்ல எத்தனிப்பவை
கால வெளிக்கு
வெளியே வாசம் செய்பவை.
Posted by
வருணன்
at
11:00 AM
உனக்காய் என்னுள் உதித்த வார்த்தைகளையெல்லாம்
இரகசிய பெட்டகங்களில் சேமிக்கின்றேன்
நீயோ உன் மௌனத்திற்குள்
ஆழக் குழிதோண்டி சேமிக்கின்றாய்
எனக்கான வார்த்தைகளை
வார்த்தைகள் பெருத்து என் பெட்டகங்களின்
விரிசல்களினூடே கசிகின்றன - உன்
மௌன நிலத்தில் மண்டிய வார்த்தைகளோ
சிருஷ்டிக்கின்றன ஒரு விசித்திர கானகத்தை
உடைந்து சிதறட்டுமென் சுவர்கள்
வெந்து தணியட்டும் உன் காடு.