விழித்தெழு பூமியே !

Friday, March 30, 2012



யாமறிந்த பேரண்டத்தின்
ஒற்றை உயிர் துளியே!

நின் இல்லமெங்கும் அலங்கரிக்கிறாய்
இயற்கை வரைந்த சுவரொட்டிகளால்
மாண்பு தெரியாது
கிழித்தெறிகின்றன மானுட மாடுகள்

மூங்கில் புகுந்து இசை ஈனுமுன்
நற்காற்றை வன்புணர்கிறதெங்கள்
ஆலைகளுமிழும் கரிப் புகை

ஆர்டிக்கின் உறைகுளிரும்
சகாராவின் உருக்கும் வெம்மையும்
அமேசானின் அடர் ரகசியங்களும்
அத்தனையும் நலமிங்கே
அதனதனிடத்தில் உறைகையிலே

அழகிய பாடலிதை
அபசுரத்தில் பாடிடும்
மாசுபாட்டு மகவுகளை
வளர்த்தெடுக்கும்
மனுக்குல மங்கையவளை
உக்கிரமாய் எச்சரிக்கிறாய்
அவ்வப்போது
பருவநிலைப் பகடைகளை
எக்குத்தப்பாய் உருட்டி விட்டு

கண்ணிழந்து காதலிலுருகும்
பருவப் பேதையவள்
தாய் சொல் தட்டுவது போல்-நின்
எச்சரிக்கைப் பிரசுரங்களை
கிழித்தெறிகிறாளவள் வாசிக்காமலேயே

எமதூரின் மரங்களின் வேர்களனைத்தும்
தமது அடிமரப்பதிகளின் உயிர்குடிக்கக்
காத்திருக்கும் கோடரிகளிடம்
தாலிப் பிச்சை வேண்டி நிற்கின்றன

என்னை வாழவிடுவென
நீயெழுப்பும் ஓலமிங்கே
கரைகின்றது கற்பிழந்த காற்றினிலே
புவியே! புரிகின்ற மொழிகளில் பொறிகளை வை
இல்லையேல் நரப்பூனைகளின்
வாயில் நீயே எலியாவாய்.


குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கு (28.03.12)
மனமுவந்த நன்றி.

சொப்பனக் கூடு

Saturday, March 24, 2012




புதர்களும் மரங்களும் மண்டிய
அடர் கானகத்தினூடேயான எனது
நெடும்பயணத்தின் இடையே
களைப்புத் தீர கண்ணயர்ந்தேன்.
உறக்கத்தினூடே எதிர்பாரா தருணத்தில்
உடைந்த என் சொப்பணக்கூட்டினின்று- தேனடை
யுடைத்து தேன் துளி சிந்துதல் போல்- நாலாபுறாமும்
தெரித்து விழுகிறாய் நீ.
தன் கால்களால் கடத்திய மகரந்தங்களைப்
பரப்பிய வண்டின் திருப்தியுடன் மீண்டும்
கண்ணயர்ந்தேன்.

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விடம்

Monday, March 19, 2012




என் கனவுத் துவாரங்களின்
வழியே கைகளுயர்த்தி
தப்பிவிட எத்தணிக்கிறேன் நான்

வெளிப்பட்ட கைவிரல்கள்
படிக்கட்டுகளாய்...
ஒவ்வொன்றாய் மேலேறிய நீ
ஏதோ ஒன்றில் இளைப்பாறுகின்றாய்.

என்னுள்ளேயிருந்து வானம் பார்க்கிறேன்
மேலே பறக்கும் பட்சிகளின் மத்தியில்
படியிலமர்ந்திருக்கும் நீயோ அமைதியாய்
எனக்கும் மேலேயிருக்கும் ஆகாயம் வெறிக்கிறாய்.

கொஞ்சம் அமுதத்தையும்
கொஞ்சம் விடத்தையும்
மாறி மாறி ஊட்டுகின்றது
நம் பிரியம்
இருவருக்குமே !