எழுத்தோவியம்

Friday, December 31, 2010



உன்னருகே அமர்ந்துன்னை
வார்த்தைகளால்
வரைந்து கொண்டிருக்கிறேன்.
ஏனிப்படி பார்க்கின்றாயென
நீ எழுப்பா கேள்விக்கும்
பதில் தயார் நிலையில்
என் வசம்.
புருவமுயர்த்தி கண்கள் இடுக்கி
உதடு சுழித்து
யோசிக்கும் நாழிகையில்
உன் நாடிகளில் தாளமிடுமந்த
மென்விரல்களின் லயமும்
அனிச்சையாய் அவ்வப்போது
முன் வழிகிற சிகை திருத்தும்
லாவகமும்
பரிகசித்து பொய் கோபம் காட்டி
கழுத்துக் காம்பொடித்து
முகமலர் தாழ்த்தி
போவென சொல்லுமந்த நளினங்களும்
வசப்படுகின்றன வார்த்தைகளுக்குள்
கொஞ்சமேனும்.

இவையெல்லாம் அழகுதான்

Wednesday, December 29, 2010



செவிகள் செரிக்காத இசை
விழிகள் புசிக்காத கவிதை
நினைவுகள் தளும்பாத மனது
கனவுகள் கலையாத இரவு
இவையெல்லாம் அழகுதான்
கூடவே சேர்த்துக் கொள்ளலாம்
அறியாதவருக்காய் வழியும்
ஒரு துளி கண்ணீரையும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(27.12.10) இணைய தளத்திற்கு நன்றி

குழந்தைகளின் உலகங்கள்

Monday, December 20, 2010



குழந்தைகளின்
உலகங்கள் விசித்திரமானவை
அவர்கள் சொல்லும் கதைகளைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் வித்தியாசமானவை
நடவடிக்கைகள் வேண்டாத
அவர்களின் புகார்களைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் ஆச்சரியமானவை
காரணமற்ற பேரழுகைக்குப் பிந்தைய
அவர்களின் - கணப்பொழுதில் மலரும்-
ஆழ் அமைதியையும் அதைத் தொடரும்
குறும்புன்னகையைப் போலவே
குழந்தைகளின் உலகங்களை
நமக்கென்று ஒன்றாய் வைத்துக்கொள்ள
நகலெடுத்திட முடிவதேயில்லை
ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே.


இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(20.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

கேள்விகளால் வாழும் மரணம்

Monday, December 13, 2010



வாசல் இல்லாத வீடு
இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை
அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும்
படரும் இருட்டில் பதுங்கும் குரோதம்
ஷெல்லடித்தல் செத்துப் போனதாம்
துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம்
நம்பித் தொலைப்போம்
வழியேது?
இனியாகிலும் காக்கட்டும் சாக்கிய முனி
மாக்களிடமிருந்து
எம் பெண்டிரின் யோனிகளை
‘பிரபா... நீ என்னை தேடியிருப்பேனு தெரியும்...’
கசிகிறது பண்பலையில் பாடல்
இன்னா செய்தாரை ஒருத்தல்...
முடிவதில்லை எல்லா தருணங்களிலும்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (12.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

மடி வீழ்தல்

Thursday, December 9, 2010



பெண்ணால் அழிந்த ராஜ்ஜியங்கள்
குறித்த சரித்திர உண்மைகள் புரிகிறது
உன் மடி வீழ்தலின் போது
மர்மம் தளும்பும் உன் அக உலகங்களின்
தாழ் திறந்து கதைக்கிறாய்
ஓசைகளில்லா விழி மொழியில்.
என் பிரம்மச்சரியப் பயணத்தின்
வேகத் தடைகளை சுமந்தவாறு
பின்புறம் கைகளூன்றி அமர்ந்திருக்கிறாய் நீ.
காது மடல்களில் வெம்மைகூட்டும் உன்
நாசிகளைத் தொடர்ந்து
ஈரமான குளிர் நாவின் தீண்டல்கள்
சிருஷ்டிக்கின்றன என் பிரபஞ்சத்தில்
எண்ணவியலா நட்சத்திரங்களை
கணப்பொழுதில்.
இயற்பியல் விதிகளை உடைத்தெறிகிறாய்
பனி முத்தங்களால் என்னை
சூடேற்றும் ஒவ்வொரு முறையும்.
கடந்தமுறை தவறவிட்ட
சொர்க்கத்திற்கு வழி காட்டும்
நகக்குறி வரைபடங்களை
மீண்டும் வரையத் துவங்குகிறாய்.
நானோ சிறகு விரித்து
தயாராகிறேன்
இன்னுமொரு பெரும் பயணத்திற்கு.

அவனறியா பொழுதில்

Monday, December 6, 2010



அவனுக்கும் வனாந்தரத்திற்கும்
தீராத போட்டி
ஆக்கிரமிப்பதில்
பேராசை வாளெடுத்து
மூளை கூர்தீட்டி
ஆட்கொண்டான் வனம் முழுவதையும்
ஒரு மரமும்
ஒரு கிளையும்
ஒரு இலையும் தப்பவில்லை.
ஒரு புல் கூட...
தாக்குப் பிடிக்கத் திராணியற்றுப் போனாயென
பழிப்புக் காட்டி நகைத்தான்
மீதமிருந்த வனமதிர
எதிர்க்காதது போலிருந்த வனமோ
தன் மாய இருள் நிறைத்து
அரூபமான தன் கிளைகள் பரப்பி
வேர் பிடித்து
செழிக்க ஆரம்பித்திருந்தது
அவன் அகத்தே
அவனறியா கணம் தொட்டே.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

நறுமணமான பாடலொன்று

Wednesday, December 1, 2010



இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (28.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

முதன் முதலாய்...

Sunday, November 28, 2010



மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்

நதிகள் சேருமிடம் பலவாயினும்
கலப்பது கடலிலேதான்
என் வார்த்தைகள் பலாவாயினும்
கருப்பொருள் ஒன்றுதான்.

காதலென்பது எடுப்பதன்று
கொடுப்ப தென்றுணர்ந்தேன்.
கொடுத்தேன் என்னை...

நம் நேசம் கற்பித்தபடி
முழுமையாய் காதலிக்கத்
துவங்கியிருக்கிறேன் – என்
தாயை,தங்கையை,தந்தையை,
தமையனை, நண்பர்களை,
சக பயணியை, எதிர் வீட்டு நாய்குட்டியை...

மௌன ராகம்-VI

Thursday, November 25, 2010



நேற்றுகளில் மட்டுமே வாழ்ந்திருந்த
என்னை இன்றுகளுக்கு
இழுத்து வந்தவள் நீ
எனது நாளைகளில் நீ
இருக்கப்போவதில்லை எனும் யதார்த்தம்
தெரியும் எனக்கு...

நாளைகளைக் குறித்த
கவலைகளில்லை என்னிடம்
இன்று உன்னோடிருக்கிறேன்
அது போதும்.

நாம் சந்திக்கும்
இன்றுகளில் கூட சுதந்திரமாய்
உரையாட முடிவதில்லையென
வருத்தம் கொள்கிறாய்

எனது எண்ண அலைகளை
நீ உள்வாங்கிக் கொள்கிறாயென்பது
எனக்குத் தெரியும்

நீயனுப்பும் பதில்களை
மனக்கண்ணால் படித்துவிடுகிறேனென்பது
உனக்கும் தெரியும்

நம்மிடையேயான தொடர்புகள்
இவ்வாறிருக்க எதற்கு
வார்த்தைகளால் சமைத்த உரையாடல்கள்?

ஊன் தவிர்த்து உயிர் தேடும்
பேரன்பிற்கு தேவையில்லை ஒரு போதும்
ஒலியும்
ஒளியும்.

மௌன ராகம்-V

Thursday, November 18, 2010



அருகருகே அமர்ந்திருப்பினும்
பிறர் கவனம் நம் மீது
படியாதிருக்க பேசாதிருக்கின்றோம்.
மெல்ல நம்மிடையே மௌனம்
மொட்டவிழ்கிறது
ஒரு மென்மலர் போல...
மெல்ல மலர்ந்து அது மணம் கமழ்த்தும்
தருணத்தில், யாரோ வார்த்தையுதிர்த்து
அம்மலர்ட்ச்சியை மாய்க்கிறார்
அம்மலரை மீண்டுமெப்படி
மலர்த்துவதென்ற ஆழ்ந்த சிந்தனையில்
நாம் இக்கணத்தில்.

யாதும் நலம்

Tuesday, November 16, 2010



பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.

காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.

கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.

இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.

’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.

“ம்...
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (14.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

மௌன ராகம்-IV

Saturday, November 13, 2010



நாம் பேசாத வார்த்தைகளை
எல்லாம் என் மரங்களில்
தூளி கட்டி சேமிக்கிறேன்.
விடைபெறும் ஒவ்வொரு தருணத்திலும்
என் மரங்களில் ஏதெனும் ஒன்றில்
அந்நாளுக்குரிய ஒற்றை தூளி
ஏறியமர்கின்றது.
பருவமாற்றம் நிகழ்த்திய பெருங்காற்றில்
ஓர் அந்தியில் தூளிகளனைத்தும்
ஒரு சேர அறுந்து
காற்றில் சிதறுகின்றன வார்த்தைகள்
நாம் பரிமாறிட கூச்சப்பட்டு சேமித்த
வார்த்தைகள் அனைத் துமிப்போது
பெருமழையாய் பொழிகிறது எங்கும்
வெட்கம் மிச்சமிருக்க நாணியபடி
மறைவிடம் தேடி ஓடுகிறோம் இருவரும்
அப்பெருமழையில் நனையாதிருக்க
யாருமற்ற பெருவெளியை நனைத்துக்
கரைகின்றன அவை.

உள்ளொன்று வைத்து…

Wednesday, November 10, 2010



வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள்
முயல் குட்டி துள்ளுகிறது
தவழும் முகில் யானையாய்
துதிக்கை உயர்த்துகிறது.
பேருந்து நிலையச் சுவற்றின்
அழுக்குக் கறைகள்
கொம்பிலா ஆநிரையாகவும்
ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும்
ஆகின்றன.
சிந்திய சில துளி குளிர்பானம்
பெயர் தெரியா தூர தேசத்தின்
ஆரஞ்சு வண்ண வரைபடமாகிறது.
அரூபங்களில் கூட ரூபங்களை
பிரசவிக்கும் என் விழிகள்
கடவுளாகின்றன.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (07.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

மௌன ராகம்-III

Sunday, November 7, 2010



கவிதைகள் வார்த்தைகள்
ஏதுமின்றியும் எழுதி
வாசிக்கப்படலாம் !
வார்த்தைச் சட்டங்களுக்குள்
கவிதைகள் அடங்கிவிடுவதில்லை
எல்லா சந்தர்ப்பங்களிலும்

எதிரெதிரே அமர்ந்தவண்ணம்
விழிகள் துளைத்து நாமிருவரும்
உற்று நோக்குவதை என்னவென்று சொல்வாய்?

மௌன ராகம்-II

Wednesday, November 3, 2010



வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும்
இடையேயான தூரம் எவ்வளவு?

கதை பேசாது விடை தேடி
நாமிருவரும் எதிரெதிரே

தூரத்துத் தெருவிளக்கும், சில
சில்வண்டுகளும் சாட்சிகளாய்

பனியாய் உருகும் நேரம் நம்மிடையே...

வார்தைகளற்று விழியால் புசிப்பதைத் தவிர
வேறேதும் செய்யவில்லை இருவருமே

பட்டாம்பூச்சியாய் படபடக்குமுன்
விழிகள் பார்க்கையில்
விட்டிலாய் துடிக்கும் மனது
பேசிவிட...

கண்டோம் இறுதியில்
வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
தூரங்கள் நம் கர்வத்தால்
அளக்கப்படுகிறதென்பதை...

தெரிந்தும் நாம் பேசவில்லை.

என்னிதழ் பூட்டினைத் திறந்திட
இதொ நெருங்கி வருகிறது
உன் சாவி !

நிழல் வேண்டும் காலம்

Monday, November 1, 2010



ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(31.10.10) இணைய தளத்திற்கு நன்றி

வெயில்

Thursday, October 28, 2010



நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வறண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10) இணைய தளத்திற்கு நன்றி.

தந்தையாதல்

Tuesday, October 26, 2010




அகால வேளைகளில்
தொந்தி சரிய அயர்ந்துறங்கும்
துணைவியினுள்ளே துள்ளல்
காணும் கணங்களில்
அவளை துயிலெழுப்பாமல்
வருடும் நடுங்கும் விரல்கள்.

தாயாகும் பூரிப்பினிடையே
பயங்கள் மிதக்கும்
மிரட்சிக் கண்களுருளும்
முகத்தை ஆதரவாய்
வருடும் கரங்கள்

வேறெப்போதிலும் தராத
பயத்தின் வர்ணங்களை
வரிந்து கொள்ளும்
மருத்துவமனையின் வெண்மை

குறுக்கும் நெடுக்குமாய்
ஆஸ்பத்திரி செவிலிகள்
பயணிப்பர் தடதடக்குமென்
இதயத் தண்டவாளத்தின் மேலே
பதிலேதும் சொல்லாமல்

எப்போதுமில்லாமல்
மனம் அரற்றியபடி
ஏங்கிக் கிடக்கும்
ஒற்றை அலறலுக்கும்
அதைத் தொடரும் அழுகுரலுக்கும்.

தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே
மங்கையின்
தலைப் பிரசவத்தைப் போல.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10)இணைய இதழுக்கு நன்றி

மௌன ராகம் - I

Sunday, October 24, 2010



கடற்கரையில் அமர்ந்திருக்கும்
என்னருகேயிருந்து
முடிவின்றி நீள்கின்றதுன்
பாதச் சுவடுகள்,
உன்னிலிருந்து கிளை பரப்பிய
ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும்
அதன் விதைகள் குறித்து
என்னுள் எழும் கேள்விகளைப் போல.
உலகப் பெருங்கவியாயினும்
உன்னைப் பற்றியெனின்
ஒரு ஆச்சரியக் குறியைத் தவிர
வேறேதும் எழுதப் போவதில்லை;
அதுவே என்னைக் குறித்தென்றால்
அந்த குறியின் நிமிர்ந்த தலை வளைத்து
கொக்கியாக்கி எனைக் கண்டு நகைப்பான்
என்றேன் – இதில்
எது உன்னை கோபத்திலாழ்த்தியது ?

மனப்பெட்டி

Thursday, October 21, 2010



பழைய பொருட்களால் சூல் கொண்ட
மரப்பெட்டி போல்
நினைவுகள் தேக்கிக் கிடக்கிறதென்
மனப்பெட்டி.

எதிர்வீட்டு பாலுவின் பச்சைப் பம்பரம்
முன்னா வீட்டில் பார்த்த பொம்மைப் படம்
பூப்போட்ட சிவப்புச் சட்டை
தாத்தா கதைகளில் வரும் ஈனாப் பூச்சிகள்
நம்மைத் துரத்தும்முன் ஓடிவிடலாம்
என் வயது பத்து.

பயம் படியென்ன விலை
வாழ்க்கையே திருவிழாவாய்...
அப்பக்கம் பாராதிருங்கள்
என் இச்சைகளின் எச்சங்களங்கே
மண்டிக்கிடக்கின்றன.
வயது பதினெட்டு.

கரைந்து போன கனவுலகம்
திணறடிக்கும்
யதார்த்த உலகின் இயலாமைகள்
அதோ கொடிகளில் காயுமென்
நம்பிக்கைச் சட்டைகள்...
முப்பத்தியைந்து.

சற்றே பொறுங்கள்
கதைத்ததில் மறந்தே போனேன்.
எனக்கு இன்சுலின் குத்த வரும்
செவிலியின் வருகையை...
அறுபது.

கனவு கலைப்பு

Monday, October 18, 2010



கருக்கலைப்புகள் குறித்து
கவலை கொள்ளும் நெஞ்சங்கள்
அவதானிப்பதில்லை
அதனை விஞ்சும்
கனவு கலைப்புகள் குறித்து

மருத்துவனாக மனக்கோட்டை கட்டியவன்
மாதக்கணக்கு எழுதுகிறான்.
கவிஞனாய் கனவில் சஞ்சரித்தவன்
கடைகளில் வேலை செய்கிறான்.
இராணுவ வீரனாக ஆசைப்பட்டவன்
நாளை அடியாளாய் திரியலாம்...
யார் கண்டது?!

விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்.

நான், நீ, காமம்

Friday, October 15, 2010



உன்னையும் என்னையும்
இணைக்கும் பசை

நீட்சியுரும் யாமத்திலும்
தொடர்ந்திடும் ஒரே விளையாட்டு

ஒரே உடல்தான் எனக்கு
அது போலவே உனக்கும்...

ஆயினும் ஒவ்வொரு முறையும்
புதிய கதவுகளை திறந்தபடியே

உன்னையும் என்னையும்
மெத்தையில் சமைத்து
நமக்கு நாமே பரிமாறி
உண்டு களிக்கிறோம்.

விருந்தும் நாமே
விருந்தினரும் நாமே...
அதிசயம் தான் !

உன்னுடல் வழியே
உன்னுயிர் சேரும் நான்
என்னுடல் வழியே
என் சுயம் சேரும் நீ

காமம்
நம்மைப் பிணைக்கும்
மாயச் சங்கிலி.

தவறிய முகவரி

Wednesday, October 13, 2010



முப்பதடி உயரத்தினின்று
குதித்து காலொடிந்து
நான் கிடக்க
படம் பார்த்து வெளிவரும்
ரசிகன் குதூகலிக்கிறான்
மைக் ஏந்திய
தொலைக்காட்சி யுவதியிடம்
“தலவர் ஸ்டண்ட்ல பின்னிட்டார்!”

விடுபடும் அத்தருணங்களில்

Sunday, October 10, 2010



வெறும் வார்த்தையாய் மட்டுமறிந்த
பிரிவை வலியாய் உணர்ந்ததுன்னை
வழியனுப்பும் போதுதான்.
புகைவண்டியின் சன்னலோர இருக்கையில்
அமர்ந்தபடி உன் கயல்விழிகளால்
என்னிடம் கதைப்பாய்
நானோ சமைந்த சிலையாய்
உன்னருகே வெளியில் நிற்பேன்,
உன் பிஞ்சு விரல்கள் பற்றியபடி...

புறப்படும் தருணத்தில் மெல்ல மெல்ல
விடுபடும் பற்றியிருந்த நம் விரல்கள்.
உன் உள்ளங்கைகளின் வெம்மையை
என்னிடம் விடுத்து
என் விரல்கள் வழியே உயிரை மட்டும்
உருவிச் செல்வாய் உன்னோடு.

பார்வையினின்று என்னுருவம் மறையும் வரை
எட்டி எட்டிப் பார்த்தபடி இருக்குமுன்
வாடிய முகத்தின் பிம்பம்
என் விழிநீர் வழி காண்கையில்
நீச்சலடித்துக் கொண்டிருக்கும்.

சக பயணிகளின் இருப்பால் உதடு கடித்து
அழுகையைக் கரைப்பாய் உனக்குள்ளேயே...
நானோ நடைபாதை இருளில்
என் கண்ணீரைத் தொலைப்பேன்.

பிரிதொரு நாளில் உன் வரவை
எதிர்நோக்கிய என் காத்திருக்கும் தருணம்
மனக்கடலில் தரை தட்டும்...
அது மலர்த்திடும் புன்னகையை
இதழ்களில் ஒட்டி வீடடைவேன்.


தருணங்கள்: சில கணங்களும் கடந்து போன தருணங்களும் நமது நினைவு அறைகளில் என்றென்றும் வாசம் செய்பவை.
அவற்றை வார்த்தைப் பெட்டிகளில் பத்திரப் படுத்த வேண்டுமென்ற ஒரு பேராவலின் விளைவே இவ்வரிகள். இதனை கவிதை என்ற வகைப்பாட்டியலுக்குள் கொண்டு வர முடியாது. வசன நடையில் உள்ளதால் வசன கவிதை என்று வகைப் படுத்தலாம். ஆனால் சில நுட்பமான உணர்வுகள் ததும்பும் ஒரு தருணத்தை இது காட்சிப் படுத்துவதால் இதனை “காட்சிக் கவிதை” என்றழைக்க விரும்புகிறேன்.

பசி

Friday, October 8, 2010



1


இலட்சிய வேட்கையையும்
சாதிக்கும் தாகத்தையும்
பல அவயங்களில்
விஞ்சி நிற்கிறது
பாழாய் போன
பசி !




2


இந்த ஏழையின் மீது இரங்கி
இறை கேட்டான்,
’என்ன வேண்டுமானலும்
கேள் தருகிறேன்’, என்று.
ஒன்றே கேட்டேன்
‘பசி வேண்டா‘.
சிலகண மௌனத்துக்குப் பின்
மன்னித்துவிடு என்பது போல்
பார்த்து
ஈரத்துணி தந்தான் இறைவன்.

3


நான் இயங்க வேண்டிய
தளங்கள் வேறு
பயணிக்க வேண்டிய திசைகள் வேறு

இதயெல்லாம் விடுத்து
தெரிந்தே செல்கிறேன்
எனக்கு ஒவ்வாதவொரு திசையில்

இயங்கிக் கொண்டிருக்கிறேன்
முற்றிலும் மாறுபட்டதொரு தளத்தில்
ஒன்றே ஒன்றிற்காய்...

வயிறு .

என் கனவுகள் எனக்கு நிஜம்

Tuesday, October 5, 2010



கோடி கோடி இரவுகள் கழிகின்றன
என் ஒற்றை இரவில்
உலக மாந்தரனைவரின் கனவுகளனைத்தையும்
தனியொருவனாய் காண்கிறேன்.
பீரங்கி வாயினுள் மலர்க் கொத்து
தெரித்து விழும் துப்பாக்கி ரவைகள் பூக்களாய்
சித்தனைப் போல் பாடல்கள்
பாடிக் களிக்கின்றேன்- இனி
சிந்தும் செந்துளி இயற்கைக்கு
அபிஷேகமாய்
புரட்சி விதை விழுந்து
விருட்சமாய் கிளர்ந்தெழும்
வெள்ளைப் பூக்களை தன்னகத்தே
பூத்தபடி...
வெண்புறாக்களதில் வாசம் செய்யும்.
நிசத்தின் பிம்பம் பிரதிபலிக்காத
கண்ணாடி மதில்கள் என் கனவுகள்
மாயை இவையென நீ கூறுவது
கேட்கத்தான் செய்கிறது.
போகட்டும் விடு, என்னை இப்படியே...
என் கனவுகள் எனக்கு நிஜம்.

மூலம்

Friday, October 1, 2010



எனது தன்னம்பிக்கை
உன் நெற்றிக்குக் கீழ்
ஆரம்பித்து
உன் பாதத்தில்
முடிவடைகிறது.

விதிவிலக்கு

Wednesday, September 29, 2010



காலனுடைய
வாழ்வியல்
அன்றாடங்களினின்று
விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகவே
தோன்றுகிறது.

மகிழ்ந்திருக்கையில்
அன்னையின் அரவணைப்பில்
காதலியின் கதகதப்பில்
அடுத்தவரிடம் அன்பாய் குலாவையில்
காலன் இளமையுடன்

நோயில் ஓய்ந்திருக்கையில்
கவலை கொள்கையில்
எதற்காவது காத்திருக்கையில்
போர்த் தருணங்களில்
காலன் திடீரென
வயோதிகனாய்.

புறப்பாடு

Thursday, September 23, 2010



நெடுங்காலம் ஆகிவிட்டது
நானுறங்கி
உறங்கவே இல்லையென
பொருள் கொள்ள வேண்டாம்
உறக்கத்தினின்று
எழவே இல்லையென
பொருள் கொள்க.

திடீரென ஒரு நாள்
விழிக்கதவு திறந்தது
இல்லை... இல்லை...
உடலெங்கும் விழிகள்
இருக்குமா என்ன?

தேகத்துள் எனக்கே தெரியாது
ஒளிந்து கிடந்த
ஒரு கோடி தாள்கள்
ஒரு சேர திறந்தது போல்...

மறைந்து கிடந்த ஆன்மப் பறவை
மாபெரும் சிறகுகளை
தன் உடல் சிலிர்த்து விரித்து
எதை நோக்கியோ
எங்கோ பறக்கவாரம்பித்தது.

வானுயர்ந்த தருணத்திலே
ஏதேட்சையாய் கீழ்நோக்கினால்
எனைச் சுற்றியமர்ந்து
கண்ணீர் உகுக்கின்றார் சிலர்..!

இதுவரையில் இருந்தது
உறக்கத்திலா? மயக்கத்தில்லா?
யாமறியேன்.

நான் யார்?

Tuesday, September 21, 2010



எல்லையற்ற கருணை கமழும்
அகத்தே ஒரு பொழுதில்
வெறிகொண்டு தசை திண்ணத்
துடிக்கும் ஆறாத வேட்கையொன்று
பிறிதொரு பொழுதில்
எங்கோ நிகழும் ஏதோ ஒரு
கொடுமைக்காய் கசிந்துருகும்
மலர் மனது
இரவின் வெம்மையில் தகிக்கும்
தனிமை புணர்ந்தடங்கும்
வேட்கைகள் வளர்த்தெடுத்த
அரூபமான பெண்மையொன்றை
மிருகம் தணிந்து மனிதம் என்னுள்
மீண்டும் மலருமந்த தருணத்தில்
மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை
அடங்கும் வரை அசரீரியாய்
உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை
கேள்வி எல்லா தருணங்களிலும்.

முடிந்ததாய் நினைத்திட்ட இடத்தினின்று

Sunday, September 19, 2010



ஆழமாய் சுவாசிப்பேன்
உன் முகவரியாகும் வாசனைகள்
நாசிக்கு பரிச்சயமாகையில்
உனக்கேயான பிரத்தியேக
மென்மையுடன் எக்கரங்கள்
வருடினாலும்
அனிச்சையாய் பற்றிக் கொள்வேன்
அவற்றை இறுக்கமாய்
வெறும் ஊனாய் மட்டுமே
இவன் மூளையிலமர்ந்துள்ளேனோ
என்றயங்கொள்ளாதே
ஊன் தாண்டியுன் சுயத்தைச்
சுகிக்கமுடியுமென்னால்
எங்கே முடிகின்றதென நீ
நினைக்கிறாயோ
அங்கிருந்து பிரவாகமெடுக்கிறது
உன் மீதான என் பிரியங்கள்.

சாத்தியமோ !

Friday, September 17, 2010



1
வானத்தை விடவும்
பெரிய வானவில்
சாத்தியமா என்ன?
என்னை விடவும்
பெரிதாக எனக்குள்
நீதான் இருக்கிறாய் !

2

மேகத்தை விட மென்மயானதொன்று
நிலவின் ஒளியினும் குளுமையானதொன்று
மழைத் தூறலை விட மயக்கும்
இசை ஒன்று
தாயின் அன்பை விஞ்சும் அன்பொன்று
மழலையின் சிரிப்பை தாண்டிய
பரிசுத்தமொன்று
புல்நுனி பனித்துளியை விட
அழகானதொரு கவிதை
இவைகள் கூட சாத்தியப்படலாம்.
உன்னைவிடவும் மனதுக்கு
இதமான
இணக்கமான
ஒருத்தி...
ம்... !?

இளவரசி

Wednesday, September 15, 2010



மதில்கள் அணைத்த மாடக்கூடங்கள்
ரோஜா இதழ்கள் மிதக்கும் குளியல் குளம்
முழுமதி நனைத்த புல்வெளி
அறுசுவையுணவு
தளும்பும் மதுவால்
தள்ளாடும் கோப்பைகள்
அணிகளும், பட்டுப் பீதாம்பரங்களும்,
பூப்பந்து விளையாட தோழியரும்...
ஏவலாட்கள் அழைப்பிற்காய் தவங்கிடக்க
இன்னிசையூற்று எங்கும் வழியும்.
விடியலின் கதிர்கள் முகம் நனைக்க
சுயநினைவோடு எழுவாள்
உடலொட்டிய தெருப்புழுதியை
தட்டிவிட்டபடி- கனவுகள்
அவளை என்று மேமாற்றியதில்லை;
மகிழ்வூட்டுவதில்
பாரபட்சம் பாராதவை கனவுகள்.

முடிவற்றதொரு கடிதம்

Monday, September 13, 2010



எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்கு அனுப்பாத கடிதத்தை
எவ்வளவு எழுதிய பிறகும்
சொல்வதற்கு ஏதோவொன்று
மிச்சமாய் இன்னும்…
முடித்திட முடிவு செய்யும்
ஒவ்வொரு கணத்திலும்
தொடுவானில் புள்ளி பிம்பமாய்
மினுக்கும் உன்னிடம்
சேர்ப்பிப்பது பற்றிய
என் ஐயங்களுக்கு
பதில் தேட முனையாது
எழுதியபடியே இருக்கிறேன்.

சாட்சி

Saturday, September 11, 2010



நாம் அமர்ந்திருக்கும்
அறையின் மின்விசிறியின்
மெல்லிய சுழற்சி
நம் மௌனத்தால்
அரவை இயந்திரத்தின்
ஒலிபோல் இம்சிக்கிறது

ஒளியை உமிழும்
குழல் விளக்கினைக்
காட்டிலும்
மேம்பட்ட பிராகாசத்தைக்
காண முடிகிறது
உன் விழிகளில்

கால் விரல்களால்
தரையில் கோலமிடுவதும்
கைகளை பிசைந்தபடியும்
அவ்வப்போது நகம் கடித்தபடியும்
கரைக்கின்றாய் காலத்தை

உன்னருகே
அமர்ந்தபடி நானுன்னை
உற்று பார்க்கிறேன்.

ஒத்திகை

Wednesday, September 8, 2010



நிரந்தர உறக்கத்திற்கான
ஒத்திகையாகவும்
முன்தயாரிப்பாகவும்
ஒவ்வொரு இரவின்
நித்திரை.

இருப்பது, வளர்வது

Sunday, September 5, 2010




வயல் வரப்பில் நடந்து
செல்பவனிடம்
ஏற்றிக் கட்டிய உள்பாவாடையுடன்
பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருக்கும்
பருவப் பெண் கபடமற்று கேட்கிறாள்
“ஏப்பண்ணே ஊர்ல இருந்து வந்த?
நல்லா இருக்கியா?”
அவளுக்குள் மனுஷி இருக்கிறாள்
மனிதம் வளர்கிறது.
“நல்லா இருக்கேன் தங்கச்சி”,
உதட்டளவில் வார்த்தை பேசி
மனதினுள் அவளவையங்களை
மேய்ந்து எச்சில் விடுகிறவனிடமும்
மனிதன் இருக்கிறான்...
மிருகம் வளர்கிறது.

மன்மதலீலை

Friday, September 3, 2010



கடவுளுக்கு தெரிந்திருக்கிறது
ஆடவரின் ஆணவமடக்க
சாட்டைகள் தேவையில்லை
சடைகளே போதுமென்பது

காமத்தை மெழுகாக்கி
ஊற்றினால் தானே
யாக்கைத் திரி செய்து
அதில் காதல் சுடரை
ஏற்ற முடிகிறது

இது ஏதெனத்
தெரிந்து கொள்வதில்
எத்துணை ஆர்வமும்
தேடலும் !

நிற,இன,மொழி பேதங்களைத்
தாண்டி யுகயுகமாய்
மனிதகுலத்தை சுண்டியிழுத்து
வசீகரிக்கிறது காமம்

வெறும் இனவிருத்திக்காய்
உருவானது
அழகழகாய் ஆட பல மாற்றி
வேடம் பல பூண்டு
ஒய்யாரமாய் நடை பயில்கிறது

சுரப்பிகளின் சூட்சுமமென
தெரிந்திடினும்
காளையரையும் பெண்டிரையும்
கட்டியாள்கிறது.

ஒவ்வொருவர் வாழ்விலும்
தென்றலாய் பூத்து
புயலாய் அடித்து
பதியன் போடுகிறது
அடுத்த தலைமுறைக்கான
விதைகளை.

ஒரு வேளை
காமத்தைத்தான் மனிதன்
நாகரிகத்தில் தொய்த்தெடுத்து
காதலென கொண்டாடுகிறானோ?

இருக்கலாம்... ஒரு வேளை
எதற்கும் என் காதலியிடம்
கேட்டுவிட்டுச் சொல்கிறேன் !

பொய்களைப் பழிக்காதீர்

Tuesday, August 31, 2010

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
கலைனயம் மிக்கவை

உண்மயைப் போல
இயந்திரத்தனமாய்
ஒருபோதுமவை இருப்பதில்லை

உண்மைகள்
ஒரு நாளும் ஒத்திகைகள்
பார்த்துக் கொள்வதில்லை

உண்மைகள் விறைப்பானவை
பொய்கள் காற்றின் திசையில்
லாவகமாய் வளையும் நாணல்கள்

உண்மை எதுவென
நாமுணர ஏதுவாகிறது
பொய்களால்தான்

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
முன்தயாரிப்புள்ளவை.


இக்கவிதையை வெளியிட்ட இளமை விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
http://youthful.vikatan.com/youth/NYouth/varunanpoem300810.asp

எப்படியேனும்...

Monday, August 30, 2010



ஐயங்களாய்
ஆற்றாமையாய்
கருணையாய்
கோபமாய்
மறுதலிப்பாய்
உன் வார்த்தைகள்

வார்த்தைகளால் வார்க்கவியலா
உணர்வுகளின் வெளிப்பாடாய்
ஆழ்மனதின் கேவலாய்
கெஞ்சலாய்
குழப்பமாய்
யாசிப்பாய்
உன் பார்வைகள்

ஒவ்வொரு சந்திப்புகளிலும்
எப்படியேனும் என் மீது
படிந்துவிடுகின்றாய்
வார்த்தைகளாகவோ
பார்வைளாகவோ

வெறும் சாட்சியாய் நான்.

உள்ளும் புறமும்

Saturday, August 28, 2010



என் கர்வக் கேணியில்
குளித்தெழும் நானென்னும் ஆணவம்
பீடம் ஏறியமர்ந்து
அடிபணிய நிர்பந்திக்கும்
உன் பெண்மையை.

பதியின் வாக்குக்குப்
பணிந்து நடவென்றே சொல்லும்
நீ கேட்ட கற்பிதங்கள்.
ஆயினும் உன் சுயமுன்னை
சிந்திக்கவே சொல்லும்.

எல்லாம் முடிந்த பின்னே

Thursday, August 26, 2010



யாருமே தனக்கில்லையென
வீதி வழி நடப்பவனுக்கு
அவனுக்குத் தெரியாமலேயே
துணையாய் வரும்
தெருக்கள் வழிநெடுகிலும்.
ஊரடங்கும் சாமத்தில்
அண்ட இடம் கிடைத்ததும் உடன்வந்த
தெருக்களை உதறிவிட்டு உட்செல்லும்
அவனது புறக்கணிப்பால் செய்வதறியாது
திகைத்து நிற்கும் தெருவினைப்
பார்த்து ஆதரவாய் கண்சிமிட்டுகின்றன
தெருவிளக்குகள் யாரில்லையெனினும்
துணையாய் தாமிருப்பதாய் சொல்வதுபோல்.

கவலைக் குழந்தைகள்

Tuesday, August 24, 2010



நம் பந்தத்தின் விளைவாய்
இமை மூடா இரவுகளோடு
வாசம் செய்கிறேன் நான்

உன்னைப் பற்றிய
குழப்பங்களால் அலைகிறது மனம்
ஓய இடம் தேடி

வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!

பழையன கழிதல்

Sunday, August 22, 2010



வர்ணிக்க முடியாததொரு வலி
தைத்திடவியலா மன கிழிசல்கள்
அவ்வப்போது பூத்திட்ட சிறு புன்னகைகள்
பாவங்கள் செய்யவிருந்த தருணங்கள்
பெறத் தகுதியில்லாத போதும்
கிடைத்திட்ட சில பாராட்டுக்களும்
பல குற்றச்சாட்டுகளும்
வெப்பமாய் பணியினூடே வெளிவரும்
அயற்ச்சிப் பெருமூச்சுகள்
மேற்சொன்னதும்
இன்னும் சொல்லாத பிறவும்
கடந்து வந்து இன்றைய நாளின்
முகப்பில் நின்றபடி
கிழித்து எறிகிறேன் அன்றைய தேதியை
என் கரங்களால் – அந்த நாளின்
அனைத்து சாராம்சங்களுடன்.

துளிர்க்கும் முடிவுகள்

Friday, August 20, 2010



கவிதையொன்று
முடிந்த இடத்தினின்று
மீண்டும் எழுதப்படுகிறது

முடிந்ததாய் எண்ணிய
பொழுதில் வழிய ஆரம்பிக்கிறது
மனதை உருக்கிய இசையொன்று

பொய்த்ததாய் நினைத்திருந்த
ஆகாயத்தினின்று மண் சேர்கிறது
ஒரு சிறு தூறல்

போனதாய் நினைத்திருந்த
காதலி மீண்டும்
பேச துவங்கியிருக்கிறாள்.

போகட்டும் விடு

Wednesday, August 18, 2010



பகலுக்கு ஒளியூட்டும்
ஆதவன் அணைகையில்
இரவுக்கு தெம்பூட்டும்
பால் நிலா
தகிக்கும் வெயிலுக்கு
மாற்றாய் நிழலும் கிட்டும்
ரணங்கள் தரும் வையமே
மருந்தும் தரும்
கவலை கொள்ளாய் மனமே!
சன்னல்கள் அடைபட்டால்
போகட்டும்
கதவுகள் திறக்கும்.

இடப்பெயர்ச்சி

Monday, August 16, 2010



பிரிதொரு நாளில் நிகழ்ந்த
துயரத்தை துவட்டி எறிகிறேன்.
நெகிழ்ந்து போனதொரு நெருங்கிய
பந்தத்தினை சலனமின்றி பார்த்தபடி
சற்றுமுன் அடைந்த ஒரு நன்மையின்
நிழலில் ஓய்வெடுக்கிறேன்.
கடவுள்கள் வசிக்கும்
கருவறை தரிசனங்கள் அவ்வப்போது
ரணங்களை வீட்டு
வரவேற்பறையில் அலங்காரமாய்
வைத்தபடி மீளாத் துயரினின்றும்
மீண்டு செல்கிறேன்
கதவுகள் சன்னல்கள் எல்லாம்
மூடிக்கொண்டாலும்
சாவித் துவாரங்கள் வழியாகவாவது
இடம் பெயர்ந்து சென்ற வண்ணமிருக்கிறேன்.

நான் நகரும் நகரம்

Saturday, August 14, 2010



அதிகாலை துயில் எழுந்து
அவசரக் குளியல்
அரைகுறை உணவு
ஆலாய் பறந்து அலுவலகம்
செல்லும் தடத்தில் போக்குவரத்து
நெரிசல் வாங்கும் பாதி சீவனை
மேலதிகாரியின் வசவுகள்
வாங்கும் மீதி சீவனை
அரட்டையுடன் உட்செல்லும்
மதிய உணவு
ஐந்தடிக்கக் காத்திருந்து
மீண்டும் கட்டப்படும்
கால்களில் சக்கரம்
யதார்த்தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும்
நகரத்துக்குள் தகுதிக்கு மீறிய அவாக்களுடன்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
என்னையும் என் பரிசுத்தத்தையும்.

விட்டம் பார்த்தல்

Friday, August 13, 2010



என் அறையின் கூரை
நினைவுகள் சேமிக்கும்
வெளிப்படையான ரகசிய இடம்

எண்ணற்ற முறை பார்த்துக் கொள்வேன்
விட்டத்தை
வேலைப் பளுவினிடையேயும்

உடனிருப்போர் நான் யோசிப்பதாய்
எண்ணிக் கொள்வர்
நானோ விட்டத்து ரகசியங்களை
அசைபோட்டபடி

நான் என் விட்டம் பார்க்கிறேன்
நினைவுகள் தேக்கிய என் அறையின்
விட்டம் என்னைப் பார்க்கின்றது.

கால்களின் மொழி

Wednesday, August 11, 2010



உன் கால்விரல் தூரிகையால்
என்னதான் ஓவியம்
தீட்டுகிறாய் என் கால்களில்?
வரைவது எதுவெனத் தெரியாத
போதிலும் என்னையே நானுனக்கு
வண்ணமாய் உருக்கித் தருகிறேன்

என் செவிகளுக்கு மட்டுமே
கேட்கிறது எப்பொதாவது
இடறிடும் கொலுசுகளினின்று
எழும் மெல்லிசை

ஒரு வகையில் இது கூட
போர்க்களம் தான்
அங்கே வாள்கள்
இங்கெ நம் கால்கள்

ஒருவர் பின் ஒருவர்
மௌனமாய் நாம்
அமர்ந்திருப்பினும்
கால்கள் மட்டும் பேசிக்கொண்டே...

அவ்வப்போது நீ ஓய்கையில்
பொறுமையாய்
காத்திருக்கும் என் பாதங்கள்
வார்த்தைகளற்ற மொழியாலான நம்
பிரிதொரு சந்திப்பிற்காய்.

உன்னோடிருத்தல்

Monday, August 9, 2010



நீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்

அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்

யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்

தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்

உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.