மழை நூல்

Thursday, January 26, 2012




தூறலூசி கோர்த்து
மழை நூல் தைத்த
ஈர உடையுடுத்தி மினுக்குகிறது
யாருமற்ற சாலை.
நகர மறுத்த வாகனம் விடுத்து
நடைபயின்றோம்.
தலை முதல் பாதம் வரை
நனைத்து நழுவுகிறது நீராய்
புகை மேகம்.
இறுகும் கைகளை பற்றிச் சுருளும்
சாரல் கொடியொன்று இறுக்குகிறது
கரங்களோடு இதயங்களையும்
முழுக்க நனைந்தும் முக்காடிட்டபடி
உடன் வருகிறாய்.
பொக்கிஷங்களைக் காக்கும் கர்வமின்றி
ஈரக் காற்றில் இழந்தாடிடும்
நீர் சொட்டுமுன் ஆடைகள்
வீடடைந்து உள்ளுறைந்து
உடை மாற்றி மஞ்சம் சேர்கிறோம்
நிமிடங்களில்
குளிர் நானேற்றிய வில்லினின்று
புறப்பட தயாராகின்றன
இரு காம அம்புகள்.
அமர்ந்துண்ணும் அவசியங்களற்று
படுத்தே உண்ணும்
பரவசப் பலகாரங்களாய்
துடிக்கும் நம் தேகங்கள் அருகருகே.

ஒரு நீள்கனவின் சாலை

Wednesday, January 11, 2012




இதுகாறும் அனுமதியாத தேவதை
அருகமர இடம் தருகிறாள்
தன் சிறகுகள் ஒடுக்கி
பேச நகைக்க வருட தீண்ட
அனுமதித்து சுகித்து சுகமளிக்கிறாள்.
விரல்கள் ஸ்பரிசித்த விரல்களிப்போது
மலைகள் ஏற எத்தணிக்கையில்
முகடுகள் தொடச் சொல்கிறாள் கண்கள் செருகி
மலைகளின் ரம்யத்தையும் மெதுமையையும்
வெம்மையையும் குளுமையையும் ஒரு சேர
வாசிக்கின்றன விரல்கள் வரிவரியாய்
மலைகள் குறித்த மிகப் பிரம்மாண்டமான
ஒரு ஈரக் கனவு உலரத் துவங்குகிறது
இறுக்கம் கூடும் விரல்களுக்கிடையே.
கொண்டையூசி வளைவுகளில் இளைப்பாறி
மென்நாணல்கள் மண்டிய புதர்களின்
புதிரவிழ்க்க விரியும் விரல்களை மட்டும்
விரைந்து பற்றி வேண்டாமென்கிறாள்
விழிமீன்களுள் விண்மீன்களையும்
இதழ்களில் ஆரஞ்சுச் சூரியனின்
இரு சுளைகளையும் ஏந்தியபடி.
பின்வாங்கிடும் விரல்களின் பயணமோ
மற்றுமொரு நீள்கனவின்
இருள் கவிந்த சாலைகளினின்று...