கடவுளும், கலியுக இந்தியாவும்

Tuesday, August 28, 2012


தசவதாரங்களைத் தாண்டி
தானெடுத்த அவதாரமொன்றில்
பிறந்தார் இறை மத்தியத்தரக்
குடும்பமொன்றில் புத்திரனாய்

பந்தய வாழ்க்கையில்
வாடகை சுவர்களுக்குள்
அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே
சீராய் வளர்ந்தான்.
         ****

டொனேஷன் படிப்பாயினும்
கருத்தாய் பயின்று
முதல்வனாய் பவனி

அந்தோ பரிதாபம்!
‘கோட்டாக் கூறு போட்டதில்
திசை மறந்த பந்தாய்
கிடைத்த கல்லூரியில் தொடர்ந்தது
இத்திருநிறைச் செல்வனின்
பயணம்.

         ****

படித்த மிதப்பில் தந்தையின்
நிலத்தில் கால் பதியாது
இறுமாந்திருந்தான்.
சொல்லிச் சலித்த தந்தையின் ஆவி
சொல்லாது ஒரு நாள் ஆகாயம் கிளம்பிட
அயர்ந்தமர்ந்தான்.

தகப்பனின் பெயருக்கு நினைவு நாளில்
அர்ச்சனை செய்ய சிறப்பு வரிசையில்
இருபது ரூபாயில் தன்னையே
கொஞ்சம் பிரசாதமாக வாங்கி வந்தான்.

            ****

துவங்கிற்று வேலை தேடும் வனவாசம்.
பதினான்காண்டுகள் காத்திருக்கச் சொல்லவில்லை
கருணை பொங்கும் கலியுகம்.
வனவாசம் துறந்து வேலை தேடல்
கையூட்டுப் பல்லக்கில் நாடடைய
தயார் நிலையில்.

கொடுக்க ஏதுமின்றி அமர்ந்தழுது
தேசத்தைப் பழித்து
குற்றம் சொன்னான் இறைவன்.

பெருங்குரலெழுப்பி அரற்றிய அவனை
“சுற்றியிருக்கும் செவிகளில் விழுவதற்கு
உன்னுடையதொன்றும்
மேற்தட்டு குரலன்று’, எனும்
பேருண்மையை போதித்தார்
ஏட்டறிவற்ற ஒரு கிழவர் பட்டறிவோடு.

வேண்டிக் கொண்டான் இறைவன்
தன்னையே !
இன்னுமொரு சுதந்திரம் வாய்த்திட.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (26-08-12)
இணைய இதழுக்கு நன்றி. 

சொல்லாத சங்கதி

Friday, August 24, 2012


நமக்குள்ளே உறைந்திருக்கும்
நமக்கான அன்பினை
அகழ்ந்தெடுக்க விழிகளையே
உளிகளாக்கினொம் நாம்.
நாம் மிதித்து நடந்த
சாலையோர சருகுகளிடமோ
அருகே அமைதியாய் வழிந்த
ஓடையிடமோ
ஒரு வார்த்தை கூட பகிரவில்லை
நாம் இதனைப் பற்றி.

பட உதவிக்கு நன்றி: 
http://jewelimage.ca/blog/wp-content/uploads/2009/05/th251.jpg

இரவு- II

Sunday, August 19, 2012


 04.
சிந்தனை வடிந்த
இரவொன்றில்
காற்றில் படபடக்கிறது
வயிறு நிறைந்த காகிதமொன்று
மூடிய எழுதுகோலுக்கும்,
கவிழ்க்கப்பட்ட மூக்குக் கண்ணாடிக்கும்
அடியினில்...

எரிந்து கொண்டேயிருக்கிறது
மேசை விளக்கு
படுக்கையில் நான்
அணைந்த பிறகும்.

05.
 
உனக்கும் எனக்குமிடையேயான
விழி வழி தொடர்பில்
நகரும் பகல்
வார்த்தைகளால் பரிமாறிட முடியாததாய்
மௌனத்தில் கரைகின்றது அன்பு
மொழிகள் மரித்த மௌனத்தின் மேட்டில்
வெளிச்சத்தை அடைகாத்து
இருள் போர்த்தி உறங்க ஆரம்பிக்கிறது
நம் இரவு.     
குறிப்பு: இக்கவிதைகளை வெளியிட்ட வல்லமைக்கு(08-08-12)
நன்றி.



இரவு- I

Monday, August 13, 2012

01.

காலத்தச்சன் விரல்களுக்கிடையில்
பற்றிய தூரிகையில்
ஒரு அடர்கனவின்
நிழல் தொட்டு
வரைய ஆரம்பித்த
அந்தியின் படம்
இரவானது.
 
02.

ஒவ்வொரு கணமும்
ஒரு வாழ்க்கை
ஒவ்வொரு கனவும்
ஒரு விதை
ஒவ்வொரு இரவும்
ஒரு கவிதை.



 
03.

ஒரு இரவினைப் புரிதல்
அத்துணை எளிதானது.
யாருடைய உதவியை நாடவோ,
எப்புத்தகத்தையும் துணைக்கு
வருமாறு கோர வேண்டிய
அவசியங்கள் இல்லை..
ஒரு நங்கையைக் காட்டிலும்
இரவினைப் புரிதல் எளிதானது.
விரவும் இருட்டில் ஏதும் செய்யாது
ஏதும் நினையாது
சும்மா இருப்பதே போதுமானது.

குறிப்பு: இக்கவிதைகளை வெளியிட்ட 
வல்லமை ( 08-08-12) இணைய தளத்திற்கு
நன்றி.

முடிவென்பதெல்லாம் முடிவல்ல

Tuesday, August 7, 2012









கைகளில் ஏந்திய
கொசுக்கள் கொல்லும்
மட்டையுடன் நிற்கிறோம்
பின் மாலைகள்தோறும்
தைமூரின் படையினை
எதிர்கொள்ளக் காத்திருக்கும்
முகமது ஷா துக்ளக்கின்
முனைப்புடன்.
உயரப் பறந்து தப்பிக்கும்
போர் விமானங்களை போல
உயிர் பயத்தில் ஓடுமவைகளை
மட்டையை வளைத்து,
மடித்துச் சுழற்றி லாவகமாய்
தகனமாக்குகிறோம் கம்பிகளுக்கிடையே
எல்லாம் முடிந்ததென
இறுமாந்து அயரும்
நடுநிசியில் தத்துவம் பயின்ற
ஒற்றைக் கொசு
டார்வினியம் போதிக்கிறது
காதுகளுக்குள் ரீங்காரமாய்.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட  உயிரோசை ( 06.08.12) 
இணைய  இதழுக்கு நன்றி. 
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5847