Showing posts with label உயிர் எழுத்து. Show all posts
Showing posts with label உயிர் எழுத்து. Show all posts

முடிவும் பிறகும்

Wednesday, February 23, 2011



கட்டுப்பாடுகளின் மலைமுகட்டின் விளிம்பில்
செய்வதறியாது திகைப்பிலென் பெருங்காமம்
கைகள் முறிபட்ட கடிகாரமொன்று
காலம் நிறுத்தி அருகே ஓய்ந்திருக்கிறது.
காலில் கட்டப்பட்ட சல்லாபப் பாறை
நற்கற்பிதங்கள் மோதி எதிரொலித்து
அதிரச் செய்கிறது மலையை
நம்பிக்கையின் கடைசித் துளி
சொட்டுகிறது நாவில்
நாசிகளில் தீய்ந்த நெடியேற்றி
அபிப்பிராயக் கயிறு
மூர்க்கமாய் பின்னிழுக்கிறது
மனக்களிரின் திமிறும் கால்களை
காமம் வடிந்த கணப்பொழுதில்
சருகான உடம்பு உதிர்கிறது முகட்டினின்று
கீழிருக்கும் பச்சை அடர்வனத்தில் முடியும்
அந்தரச் சாலை வழியே
வானெழுகிறது முகிலோடு காதல் கொண்ட
வெள்ளொளி ஒன்று.



இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

சவுக்கினுள் உறையும் இறை

Monday, February 21, 2011



மூன்றாம் உலகின் பசி தீர்க்க
கருத்தரங்கில் கூடி விவாதித்து
பதினேழு வகை பதார்த்தங்களுடன்
மதிய உணவு முடித்துக் கொள்கிறீர்கள்.
ஐஸ் கட்டிகள் மிதக்க
ஸ்காட்ச் ததும்பும் கோப்பைகளை
கைகளில் ஏந்தியபடி
போர் நிறுத்தங்களின் அவசியங்களை
அவதானித்து அலசுகிறீர்கள்.
மறவாமல் சொல்லிக் கொள்வீர்கள்
‘சியர்ஸ்’ என்று
திரவத்தை விழுங்கும் முன்னர்.
வீடில்லா கூட்டத்தின் குறைகள் களைய
பன்னாட்டு உடன்படிக்கைகளடங்கிய
கோப்புகளில் கையெழுத்திட்டு மாற்றியபடி
நிழற்படமெடுக்க வசதியாய் சிரிக்கிறீர்கள்
குளிரூட்டப்பட்ட கூடங்களில்.
வெளியே பெருங்கூட்டம் கடவுளின்
கருணை கோரி வழிபட்டு கிடக்கிறது
உருகியுருகி
தோழர்களே காலியான கடையின் முன்
பொருள் வேண்டி நிற்பது புரியவில்லையா?
தொழக் குவிக்கும் கரங்களில்
சவுக்குகள் அமரட்டும்.
எங்கும் நிறையும் பரம்பொருள்
சர்வ நிச்சயமாய் இருப்பார்
சுண்டும் சவுக்கினுள்ளும்.

இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

இலக்கற்றுத் திரிதல்

Thursday, February 17, 2011



காய்ந்த சருகுகள்
இலக்கற்று திரிகின்றன
வீசும் காற்றின் இசை கோவைக்கேற்ப
முன்னேறி பின்னேறி
கவிழ்ந்துருண்டு கரணம் அடித்து
எதிர்வரும் சிறுமணற் பள்ளங்களை
லாவகமாய் கடந்தேறி
ஒன்று மற்றொன்றைத் துரத்தி
அணி சேர்ந்து ஒன்றுமற்ற மையத்தை
சுற்றி களிப்பாட்டம் ஆடி
இலக்கின்றியே திரிகின்றன...


இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.