skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
2:31 PM
காலனுடைய
வாழ்வியல்
அன்றாடங்களினின்று
விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகவே
தோன்றுகிறது.
மகிழ்ந்திருக்கையில்
அன்னையின் அரவணைப்பில்
காதலியின் கதகதப்பில்
அடுத்தவரிடம் அன்பாய் குலாவையில்
காலன் இளமையுடன்
நோயில் ஓய்ந்திருக்கையில்
கவலை கொள்கையில்
எதற்காவது காத்திருக்கையில்
போர்த் தருணங்களில்
காலன் திடீரென
வயோதிகனாய்.
Posted by
வருணன்
at
10:04 PM
நெடுங்காலம் ஆகிவிட்டது
நானுறங்கி
உறங்கவே இல்லையென
பொருள் கொள்ள வேண்டாம்
உறக்கத்தினின்று
எழவே இல்லையென
பொருள் கொள்க.
திடீரென ஒரு நாள்
விழிக்கதவு திறந்தது
இல்லை... இல்லை...
உடலெங்கும் விழிகள்
இருக்குமா என்ன?
தேகத்துள் எனக்கே தெரியாது
ஒளிந்து கிடந்த
ஒரு கோடி தாள்கள்
ஒரு சேர திறந்தது போல்...
மறைந்து கிடந்த ஆன்மப் பறவை
மாபெரும் சிறகுகளை
தன் உடல் சிலிர்த்து விரித்து
எதை நோக்கியோ
எங்கோ பறக்கவாரம்பித்தது.
வானுயர்ந்த தருணத்திலே
ஏதேட்சையாய் கீழ்நோக்கினால்
எனைச் சுற்றியமர்ந்து
கண்ணீர் உகுக்கின்றார் சிலர்..!
இதுவரையில் இருந்தது
உறக்கத்திலா? மயக்கத்தில்லா?
யாமறியேன்.
Posted by
வருணன்
at
7:11 AM
எல்லையற்ற கருணை கமழும்
அகத்தே ஒரு பொழுதில்
வெறிகொண்டு தசை திண்ணத்
துடிக்கும் ஆறாத வேட்கையொன்று
பிறிதொரு பொழுதில்
எங்கோ நிகழும் ஏதோ ஒரு
கொடுமைக்காய் கசிந்துருகும்
மலர் மனது
இரவின் வெம்மையில் தகிக்கும்
தனிமை புணர்ந்தடங்கும்
வேட்கைகள் வளர்த்தெடுத்த
அரூபமான பெண்மையொன்றை
மிருகம் தணிந்து மனிதம் என்னுள்
மீண்டும் மலருமந்த தருணத்தில்
மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை
அடங்கும் வரை அசரீரியாய்
உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை
கேள்வி எல்லா தருணங்களிலும்.
Posted by
வருணன்
at
11:31 AM
ஆழமாய் சுவாசிப்பேன்
உன் முகவரியாகும் வாசனைகள்
நாசிக்கு பரிச்சயமாகையில்
உனக்கேயான பிரத்தியேக
மென்மையுடன் எக்கரங்கள்
வருடினாலும்
அனிச்சையாய் பற்றிக் கொள்வேன்
அவற்றை இறுக்கமாய்
வெறும் ஊனாய் மட்டுமே
இவன் மூளையிலமர்ந்துள்ளேனோ
என்றயங்கொள்ளாதே
ஊன் தாண்டியுன் சுயத்தைச்
சுகிக்கமுடியுமென்னால்
எங்கே முடிகின்றதென நீ
நினைக்கிறாயோ
அங்கிருந்து பிரவாகமெடுக்கிறது
உன் மீதான என் பிரியங்கள்.
Posted by
வருணன்
at
6:59 AM
1
வானத்தை விடவும்
பெரிய வானவில்
சாத்தியமா என்ன?
என்னை விடவும்
பெரிதாக எனக்குள்
நீதான் இருக்கிறாய் !
2
மேகத்தை விட மென்மயானதொன்று
நிலவின் ஒளியினும் குளுமையானதொன்று
மழைத் தூறலை விட மயக்கும்
இசை ஒன்று
தாயின் அன்பை விஞ்சும் அன்பொன்று
மழலையின் சிரிப்பை தாண்டிய
பரிசுத்தமொன்று
புல்நுனி பனித்துளியை விட
அழகானதொரு கவிதை
இவைகள் கூட சாத்தியப்படலாம்.
உன்னைவிடவும் மனதுக்கு
இதமான
இணக்கமான
ஒருத்தி...
ம்... !?
Posted by
வருணன்
at
7:09 AM
மதில்கள் அணைத்த மாடக்கூடங்கள்
ரோஜா இதழ்கள் மிதக்கும் குளியல் குளம்
முழுமதி நனைத்த புல்வெளி
அறுசுவையுணவு
தளும்பும் மதுவால்
தள்ளாடும் கோப்பைகள்
அணிகளும், பட்டுப் பீதாம்பரங்களும்,
பூப்பந்து விளையாட தோழியரும்...
ஏவலாட்கள் அழைப்பிற்காய் தவங்கிடக்க
இன்னிசையூற்று எங்கும் வழியும்.
விடியலின் கதிர்கள் முகம் நனைக்க
சுயநினைவோடு எழுவாள்
உடலொட்டிய தெருப்புழுதியை
தட்டிவிட்டபடி- கனவுகள்
அவளை என்று மேமாற்றியதில்லை;
மகிழ்வூட்டுவதில்
பாரபட்சம் பாராதவை கனவுகள்.
Posted by
வருணன்
at
9:42 PM
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்கு அனுப்பாத கடிதத்தை
எவ்வளவு எழுதிய பிறகும்
சொல்வதற்கு ஏதோவொன்று
மிச்சமாய் இன்னும்…
முடித்திட முடிவு செய்யும்
ஒவ்வொரு கணத்திலும்
தொடுவானில் புள்ளி பிம்பமாய்
மினுக்கும் உன்னிடம்
சேர்ப்பிப்பது பற்றிய
என் ஐயங்களுக்கு
பதில் தேட முனையாது
எழுதியபடியே இருக்கிறேன்.
Posted by
வருணன்
at
10:38 AM
நாம் அமர்ந்திருக்கும்
அறையின் மின்விசிறியின்
மெல்லிய சுழற்சி
நம் மௌனத்தால்
அரவை இயந்திரத்தின்
ஒலிபோல் இம்சிக்கிறது
ஒளியை உமிழும்
குழல் விளக்கினைக்
காட்டிலும்
மேம்பட்ட பிராகாசத்தைக்
காண முடிகிறது
உன் விழிகளில்
கால் விரல்களால்
தரையில் கோலமிடுவதும்
கைகளை பிசைந்தபடியும்
அவ்வப்போது நகம் கடித்தபடியும்
கரைக்கின்றாய் காலத்தை
உன்னருகே
அமர்ந்தபடி நானுன்னை
உற்று பார்க்கிறேன்.
Posted by
வருணன்
at
6:43 AM
நிரந்தர உறக்கத்திற்கான
ஒத்திகையாகவும்
முன்தயாரிப்பாகவும்
ஒவ்வொரு இரவின்
நித்திரை.
Posted by
வருணன்
at
7:07 PM
வயல் வரப்பில் நடந்து
செல்பவனிடம்
ஏற்றிக் கட்டிய உள்பாவாடையுடன்
பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருக்கும்
பருவப் பெண் கபடமற்று கேட்கிறாள்
“ஏப்பண்ணே ஊர்ல இருந்து வந்த?
நல்லா இருக்கியா?”
அவளுக்குள் மனுஷி இருக்கிறாள்
மனிதம் வளர்கிறது.
“நல்லா இருக்கேன் தங்கச்சி”,
உதட்டளவில் வார்த்தை பேசி
மனதினுள் அவளவையங்களை
மேய்ந்து எச்சில் விடுகிறவனிடமும்
மனிதன் இருக்கிறான்...
மிருகம் வளர்கிறது.
Posted by
வருணன்
at
6:54 AM
கடவுளுக்கு தெரிந்திருக்கிறது
ஆடவரின் ஆணவமடக்க
சாட்டைகள் தேவையில்லை
சடைகளே போதுமென்பது
காமத்தை மெழுகாக்கி
ஊற்றினால் தானே
யாக்கைத் திரி செய்து
அதில் காதல் சுடரை
ஏற்ற முடிகிறது
இது ஏதெனத்
தெரிந்து கொள்வதில்
எத்துணை ஆர்வமும்
தேடலும் !
நிற,இன,மொழி பேதங்களைத்
தாண்டி யுகயுகமாய்
மனிதகுலத்தை சுண்டியிழுத்து
வசீகரிக்கிறது காமம்
வெறும் இனவிருத்திக்காய்
உருவானது
அழகழகாய் ஆட பல மாற்றி
வேடம் பல பூண்டு
ஒய்யாரமாய் நடை பயில்கிறது
சுரப்பிகளின் சூட்சுமமென
தெரிந்திடினும்
காளையரையும் பெண்டிரையும்
கட்டியாள்கிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும்
தென்றலாய் பூத்து
புயலாய் அடித்து
பதியன் போடுகிறது
அடுத்த தலைமுறைக்கான
விதைகளை.
ஒரு வேளை
காமத்தைத்தான் மனிதன்
நாகரிகத்தில் தொய்த்தெடுத்து
காதலென கொண்டாடுகிறானோ?
இருக்கலாம்... ஒரு வேளை
எதற்கும் என் காதலியிடம்
கேட்டுவிட்டுச் சொல்கிறேன் !