பிரிவோம் சந்திப்போம்

Wednesday, March 23, 2011



தூரத்தில் புள்ளியாய் நம்மில்லம்
தெரிய ஆரம்பித்ததுமே, இராணுவ
மிடுக்கு நடை விடைபெற்றென்னுள்
தூங்கும் குழந்தை துள்ளியோடும்.

திறந்த கதவின் நிலை பற்றி
சிலையாய் சமைந்து நிற்பாய்- உன்
விழிகளில் வழியும் சேமித்த காதலுடன்.

என்னைக் கண்டதும் ஒரு கணம்
குழைந்து, பின் மலர்ந்து
குதித்தோடி வருவாய்.

வளைகரங்களை என்
கழுத்தில் மலையாக்கி- தந்தையைக்
கண்ட சிறுமி போல தாவியேறுவாய்.

என் கைக் கிளைகள் உன்னிடைக்
கொடி பற்றும்.
உச்சி முகர்ந்து நீ தரும்
முத்தத்தின் முடிவில் என் புருவங்களில்
பட்டுத் தெறிக்குமுன் ஒரு துளி கண்ணீர்.

உன்னோடிருக்கும் சில நாட்கள்
வாழும் போதே சொர்க்கமாய்...

பகலவன் பக்கமிருக்கும் பகற் பொழுதுகளில்
வகை வகையாய் பரிமாறுவாய்
வாழையிலையில்.

நிலா நடை பயிலும் முன்னிரவில்
உன்னையே பரிமாறுவாய்
மஞ்ச இலையில்

நாம் களித்திருப்பது சகியாது
வருமந்த அழைப்புத் தந்தி
பட்டாளத்தினின்று...

மீண்டுமொருமுறை உன் – கண்ணீர்
சுனைகளாய்ப் போன- கண்களைக்
காணச் சகியாது
உன் இதழ் பதித்த முத்தத்துடன்
விடைபெறுவேன்.

என்னை உன்னிடத்தே விடுத்து
உன்னை என்னோடு
எடுத்துச் சென்றபடி.


எத்தேசத்தவராயினும் குடிமக்கள் நிம்மதியாய் வாழ, தம் நிம்மதி தொலைக்கும்
இராணுவ வீரர் கணக்கற்றோர். தம் இணையைப் பிரிந்து நமக்காய் எல்லையில்
சேவையாற்றும் எனது ஒவ்வொரு சகோதரனுக்கும் இவ்வரிகள் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment