வேரற்ற மரம்

Monday, May 30, 2011




சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை
உனது இருபின்மையால் உணர்கிறேன்.
நிழல் போல வருவதாய்
நீ வாக்களித்திருந்த வரிகள்
எனது நாட்குறிப்பின் பக்கங்களில்
வரிகள் மட்டுமே அருகிருந்து
சொற்களை அர்த்தப்படுத்துகின்றன.
எனது வாழ்க்கை வனத்தில் இது
நட்புதிர்காலம்...
வெறுமை பூத்த கிளைகள் மட்டும்
காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி
அகத்தே மண்டிய நினைவின் புகையாய்
அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை
நமது நட்புறவின் குருதியை
நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி
புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி
புகைப்படங்களில் மட்டும் நீ
வேரற்ற மரமாய் மிதந்தலைகிறேன்
உனக்குப் பிரியமான இசையைக் கேட்கையிலும்
நீ ரசித்த உடைகளை உடுத்தும் போதும்
வாசிக்க எடுத்த புத்தகத்தில்
என்றோ பத்திரம் செய்த- நீயளித்த
மயிலிறகை விரல்களால் வருடும் போதும்...
இருக்கும் போது வரமான நட்பு
இல்லாத போது சாபமாகிறது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (29.05.11)
இணைய தளத்திற்கு நன்றி

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புதமான கவிதை...
யாதார்த்தம் மிளிர்கிறது..

Yaathoramani.blogspot.com said...

இருக்கும் போது வரமான நட்பு
இல்லாதபோது சாபமாகிறது...
அசத்தலான வரிகள்
உணர்வுபூர்வமான நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

jesheela said...

Arumaiyana varikal.vazhathukal

வருணன் said...

தோழர்கள் சௌந்தர், ரமணி மற்றும் தோழி ஷீலா அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களும் கனிவான நன்றிகளும்...

Post a Comment