மழை ஓய்ந்தது

Saturday, June 5, 2010




ஸர்ப்பமொன்று பாலை மணலில்
ஊர்ந்து உழுத தடம் போல
கலைந்து கிடக்கிறது செந்நிற மேகம்
திட்டுத் திட்டாய்

பந்தயத்தில் கடைசியாய் வழிகின்ற
துளியை அந்தரத்திலேயே உறிஞ்சுகிறது
தூக்கணாங் குருவியொன்று

இலைகளுதிர்த்த மொட்டை மரமொன்று
பூத்து குலுங்குகிறது நீர்த்துளிகளால்
அவ்வப்போது சில பூக்களையுதிர்த்தபடி

புணர்தலுக்கு முந்தைய முத்தத்தையிடுகின்றது
சேற்றைச் சேரும் நீர்த்துளியொன்று
புணர்தலுக்கு பிந்தைய முத்தத்தையிடும்
நீரையுள்வாங்கிய சேறு .

No comments:

Post a Comment