skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
10:32 AM
எனக்கு அருகிலேயே நீயிருந்தும்
உன்னை சந்திக்கமுடியாத சூழலில்
ஏதோ சொல்லவியலா காரணத்தால்
தன் கூட்டை அண்டாத பறவையின்
நிம்மதியின்மையை ஒத்த ஒன்று
பற்றிக் கொள்ளும் இருதயத்தை
கூடவே வந்து சேரும்
ஈன்ற குட்டியை மறுகணமே பிரிந்திடும்
தாய் நாயின் வருத்தங்களை ஒத்ததொரு
வெறுமை.
Posted by
வருணன்
at
12:19 PM
பிரவாகமெடுக்கும் எனது
உணர்ச்ச்சித் துளிகளுக்கிடையே
நனைந்து விடாது சர்வ ஜாக்கிரதையாய்
என்னுள் வருகிறாய் என்னை மீட்டெடுக்க
எதனனின்று மீட்கப்போகிறாய் என்னை?
ஒரு வாழ்க்கையிலேயே
கோடி வாழ்க்கை வாழும் நான்
ஒன்றிலிருந்து மீண்டு என்னுமொன்றிற்கு
ஒவ்வொரு அந்தியிலும்
அடங்கும் ஆதவனின் பொற்கரங்கள்
என்னை உட்புகுந்த வாழ்வோடு அள்ளும்
மீட்டெடுக்க முயலாதே
உனக்கெங்கே புரியப்போகிறதென்
கற்பிதங்கள்
சில வேளைகளில்
எனக்கே புரியாத போது...
Posted by
வருணன்
at
10:26 AM
புலால் உண்ணாத
புலன்கள் யாசித்தேன்
செத்துப்போ
என்றான் இறைவன்.
Posted by
வருணன்
at
10:07 PM
கசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்
இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே
கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .
Posted by
வருணன்
at
10:58 PM
என் கவிதைகள்
உன்னிலிருந்து தான்
ஜனித்துக் கொண்டிருந்தன.
இப்போதுன் மௌனத்தினின்றும்
அருகிலிருக்கும் தூரத்தினின்றும்
அனுபவித்துணராத உன் ஸ்பரிசங்களினின்றும்
நிச்சயிக்கப்பட்ட விடுபடல்களினின்றும்
முன்தயாரிப்புள்ள விலகல்களினின்றும்
மற்றவரறியா உன் தயக்கங்களினின்றும் ...
Posted by
வருணன்
at
5:54 PM
என்னை வெளியேறச் சொல்லும்
நம் சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள்
இருக்க சொல்லி யாசிக்கும்
உன் விழிகள்
என் முடிவுகளும் நிலைப்பாடுகளும்
இதில் எதை சார்திருத்தல் வேண்டும் ?
Posted by
வருணன்
at
6:46 PM
ஸர்ப்பமொன்று பாலை மணலில்
ஊர்ந்து உழுத தடம் போல
கலைந்து கிடக்கிறது செந்நிற மேகம்
திட்டுத் திட்டாய்
பந்தயத்தில் கடைசியாய் வழிகின்ற
துளியை அந்தரத்திலேயே உறிஞ்சுகிறது
தூக்கணாங் குருவியொன்று
இலைகளுதிர்த்த மொட்டை மரமொன்று
பூத்து குலுங்குகிறது நீர்த்துளிகளால்
அவ்வப்போது சில பூக்களையுதிர்த்தபடி
புணர்தலுக்கு முந்தைய முத்தத்தையிடுகின்றது
சேற்றைச் சேரும் நீர்த்துளியொன்று
புணர்தலுக்கு பிந்தைய முத்தத்தையிடும்
நீரையுள்வாங்கிய சேறு .
Posted by
வருணன்
at
8:09 PM
உனக்கு முன்னே எனக்கு அறிமுகமானது
உன் பெயர்தான் என்றேன்
கண்கள் கூர்தீட்டி உதடுகள் சுழித்து
அதன்பின் நான்தானே என்றாய்
இல்லை யில்லை உன் கூந்தற்கொடியேறிய
மல்லிகையின் மணமென்றேன்
கைகளுக்கிடையில் கன்ன மேடுகள்
தாங்கி பிறகாவது நானா என்றாய்
அப்பொது மில்லை உன்னை வெயில் வருடி
தரையில் வரைந்த நிழற்படமென்றேன்
பொய்ச் சோம்பல் முறித்து காதுமடல் வருடியபடி
கேட்கிறாய் ;பிறகாவது நானா?
ம்... பிறகு நீதான் என்றென்
கண்களால் ஆயுதம் செய்யும்
சூத்திரமறிந்த நீ புரியாதது போல
பிறகாவது நானாவெனச் சிணுங்கிய
ஒவ்வொரு முறையும் என்னை
இழக்கவாரம்பித்திருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.