சே III – களம் கண்ட மதக்களிறு

Friday, April 29, 2011

பெற்றோரை சரிக்கட்டியாயிற்று, மருத்துவப் பட்டத்தை பெற்றதன் மூலம். ஆனால் ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆம். சே மற்றுமொரு பயணத்திற்குத் தயரானார். ஜூலை 7, 1953 அன்று பயணம் துவங்கியது. பயணத்தின் முடிவில், கௌதமாலாவிற்கு செல்லும் முன்னர் சே தனது அத்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் [10.12.1953], யுனைட்டட் பழக் கம்பெனியின் (அது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்) செயல்பாடுகள் வாயிலாக ஏகாதிபத்திய முதலைகளைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும், இவர்களைப் போன்றவர்களை ஒழிக்கும் வரை தான் ஓயப் போவதில்லையெனவும் எழுதியிருந்தார். அனேகமாக தனது குடும்பத்தினரிடம், தனது நிலைப்பாடுகள் குறித்து பகிரங்கமாக அவர் தெரிவித்தது இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.




அம்மாத இறுதியில் அவர் கௌதமாலாவை அடைந்த போது அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன் நில சீர்திருத்தத்தில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அதன் மூலம் அவர் நாட்டின் பயிரிடப்படாத நிலங்கள் யாவும் பொதுவுடமையாக்கப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிலத்தின் பெரும் பகுதியை கைக்குள் வைத்திருந்த யுனைட்டட் பழக் கம்பெனி, இதனால் பலத்த அடி வாங்கியது. சே மகிழ்ச்சியானார். நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு ஆனந்தம். அங்கெயே தங்கி தன்னைக்- ஒரு புரட்சியாளனாக, போராளியாக- கூர் தீட்டிக் கொள்ளவும் தீர்மானித்தார்.

அங்குதான் -இடதுசாரி எண்ணமுடைய- அமெரிக்க எதிர்ப்பு புரட்சி கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பெரு நாட்டினரான ஹில்டா காடியாவை முதலில் சந்தித்தார். அவர்கள் வாயிலாகத்தான் சே அர்பென்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு அறிமுகமானார். மேலும் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நபராகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். சாண்டியாகோ நகரில் இருந்த “ மான்கடா இராணுவக் குடியிருப்பு தாக்கப்படது [ஜூலை26,1953]. இத்தாக்குதலின் போது சேவின் அசாத்திய துணிச்சலையும், திறமையையும் கண்டு சகாக்கள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். புரட்சிகர எண்ணம் இருப்பினும் ஒரு உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவர் எந்த அளவிற்கு யுத்த களத்தில் செயல்படுவார் என்ற நினைப்பு அவர்களிடையே இருந்தது. ஆனால் சேவின் வீரத்தைக் கண்டு அவர்கள் வாயடைத்துத் தான் போயினர். “ சே” எனும் அடைமொழி எர்னஸ்டோவோடு ஒட்டிக் கொண்டது அப்போது தான்.




ஒரு நாடு நல்ல முறையில் இருப்பது அமெரிக்காவுக்கு எப்படி பிடிக்கும்? அதுவும் தனது கம்பெனிகளை வெளியே துரத்தி தனது லாபத்தைக் குறைத்த ஒரு தேசத்தை... நல்லபடியாக அர்பென்ஸின் தலைமையிலான அரசுக்கு கம்யூனிஸ செக் நாட்டிலிருந்து வந்த இராணுவ தளவாடங்கள் குறித்து அறிந்ததுமே, சி.ஐ.ஏ- வுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
உடனே சகல உதவிகளையும் செய்து கார்லோஸ் அர்மாஸ் தலைமையில் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவியது. வழியின்றி அர்பென்ஸ் மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்தார். சேவோ அவருக்கு ஆதரவாக போராட ஆவலாயிருந்தார். அவ்வளவு நாள் அமேரிக்காவின் கவனத்தில் இல்லாத சே அதற்கு ஒரு புதிய தலைவலியானார். அமெரிக்காவுக்குத் தான் எதிரிகள் என்றாலே பிடிக்காதே. தனக்கு கட்டம் கட்டப்படுவதை அறிந்து கொண்ட அவர், சமயோசிதமாக அர்ஜெண்டின தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஹில்டா கைது செய்யப்பட்டார். [1955ல் சே ஹில்டாவை மணந்தார்]

இந்நிகழ்வின் மூலம் அமெரிக்கா சாதாரணமாக எடை போட்டிருந்த சேவை சரியாகப் புரிந்து கொண்டது. சேவும் அமேரிக்கா தனது நலனிற்காக எந்த அளவிற்கும் இறங்கும் எனும் நிசத்தையும் அவர் கண்கூடாகக் கண்டுகொண்டார்.






மெக்ஸிகொ வந்த சே, திருமணத்திற்கு முன் சிறிது காலம் தனது மருத்துவப் ப்ணியை செய்தார். ஒடுக்கப்பட்ட வறியவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை அவரது மனதை வெகுவாக பாதித்தது. சிறிது காலத்தில் ஜூன் 1955 வாக்கில், பழைய கௌதமாலா நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் வாயிலாக, சே ரால்ப் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவர் பிடலின் சகோதரர் (இன்று கியூப அதிபர் இவரே). அப்போது “ஜூலை26” என்ற புரட்சி இயக்கத்தை நடத்தி வந்தார். ஒரு இரவில் நிகழ்ந்தது பிடலுடனான சேவின் சந்திப்பு. நீண்டதொரு உரையாடலுக்குப் பின்னர், தனது எண்ண அலைவரிசை பிடலோடு மிகவும் ஒன்றிப் போவதை பார்த்து, தனது எஞ்சிய வாழ்க்கை பிடலுடன் தான் என முடிவே செய்து விட்டார்.



படங்கள் : 01. ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன்
02. ஹில்டாவுடன் தேனிலவில் சே
03. ரால்ப் காஸ்ட்ரோவுடன் சே.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தகவல் பகிர்வுகு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

ஒரு மாமனிதரின் வரலாறு நிகழ்வுகள்..

வருணன் said...

நன்றி ராஜேஸ்வரி... சரியாய் போயிற்று ! நான் உங்கள் வண்ணத்துப் பூச்சி பதிவை வாசித்துக் கொண்டிருந்த போது நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி... :)

வருகைக்கு நன்றி கருன்...

Prabu Krishna said...

ஒரு உன்னதமான போராளியின் வரலாறு. எப்போது படித்தாலும் சலிப்பது இல்லை.

Post a Comment