சினிமா எனும் ரசவாதம் -Cinema Paradiso

Thursday, January 16, 2014


திரையரங்குகளில் சினிமா பார்ப்பது ஒரு சமூக நிகழ்வு. எல்லா மனிதர்களையும் அவர்தம் பேதங்களை மறந்து, இருளில் ஒளிரும் திரையின் முன்னே சில மணி நேரங்கள் இருக்கச் செய்வது சினிமா நிகழ்த்தும் மாயம். நமது பால்யத்தின் நினைவறைகளில் நிச்சயம் நமக்கு பிரியமான ஒரு திரையரங்கைக் குறித்த அனுபவம் ஒளிந்திருக்கும்.

இளமையில் ஒரு இத்தாலிய கிராமத்தில், ஒரு சிறுவனுக்கு அவ்வூரின் திரையரங்கில் ஆப்பரேட்டராக பணியாற்றும் Alfredo நண்பராகிறார். திரைப்படங்கள் அவர்களது நட்பினை இறுகக் கட்டுகிறது. கைகூடாத காதலோடு பதின்வயதில், அவரது சொற்படி அவன் தன் ஊரை விட்டு ரோம் நகருக்குச் செல்கிறான். முப்பது வருடங்கள் கழித்து வாழ்வின் பகடை அவனை ஒரு திரைப்பட இயக்குனராக்கியிருக்கிறது, ஆல்பெரேதோவின் மரண செய்தி அவனை மீண்டும் அவனை சொந்த ஊருக்கு வரவழைக்கிறது. மரண செய்தியை சொன்ன அவனது தோழி அவர் யாரென வினவ அவனது மனம் பின்னோக்கி ஞாபக நதியில் நீந்தத் துவங்கிகிறது. 

அதன் வழியே நட்பும் காதலும், இழப்பும் வலியும் நம் கண் முன்னே விரிகிறது. ஆல்பரேதோவிற்கு பிறகு பராமரிக்க ஆளின்றி அத்திரையரங்கம் இடிக்கப்படுகிறது. திரை அரங்கங்களுக்கும் ஒரு சினிமா ரசிகனுக்கும் உள்ள ஆத்மார்த்தமான காதல் தளும்பும் பிணைப்பை சொன்ன ஆகச் சிறந்த படம் நான் பார்த்த வரையில் இதுதான். உங்களுக்கு சினிமாவின் மீது காதலிருப்பின் இது உங்கள் மனதை விட்டு அகலாது, என்றும்.

Movie : Cinema Paradiso (1988)
Language : Italian
Director : Giuseppe Tornatore

No comments:

Post a Comment