உமிழ்ந்த தனிமையின் எச்சம்

Monday, May 27, 2013








வெறுமையுடுத்திய அறையினுள்ளே
கிடக்கின்றான் தனிமையைத் தின்றபடி
குருட்டுக் கிழவனாய் நகரும் காலம்
உண்டதில் பகுதியை உமிழத் தெரித்தது
இரவு வானைக் கிழித்த
பல்முனை மின்னல் ஊசி மீது
கணத்தில்
இலைகளற்ற மின்னற் கிளையே பூக்க
ஒளி வழிந்தோர் கிளையின் இலை தழுவ
விருட்சமானது அம்மரம்.
துடித்தெழுந்த கிளை மனையின் குடித்தனப் பறவை
அதிர்ந்து பறக்க
தனிமையதன் சிறகானது.
பறக்கும் திசையெங்கும் சிறகுதிர்த்த தனிமை வானமானது.
தன் விரக்தியில் சமைத்து விட்டெறிந்ததன் எச்சம்
தனியோர் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண்டதால்
தான் பிரம்மனானதன் ரகசியம் விளங்காது
இன்னமும் கிடக்கிறான் தனிமையைத் தின்றபடி
அதே அறையில். 

குறிப்பு: இக்கவிதை இம்மாத (மே’13) கணையாழி இதழில் 
வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment