சே எனும் விதை- I

Saturday, April 23, 2011



ஒரு மனிதன் தலைவனாக மாறுவது எல்லா சமூகங்களிலும் இயல்பாக நடக்கின்ற ஒன்று. ஆனால் ஒரு மனிதன் ஒரு உணர்வாக மாறுகிற தருணம் மகத்தானது. ஒரு மனிதனே புரட்சி எனும் சொல்லின், அந்த மனோநிலையின் குறியீடாக மாறியிருக்கும் கதையிது.

தேசப் பற்றாளார்களை நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தமது மக்களுக்காக, தமது தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தந்துள்ளார்கள். நமது பாரதம் உட்பட அனைத்து தேசத்திலும் அதற்கு உதாரண புருஷர்களை நம்மால் எடுத்துக் காட்டிட முடியும். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களுக்காக உழைத்து, ஏகாதிபத்தியத்தை தன் கடைசி மூச்சு வரை எதிர்த்து, அனைத்துலக மக்களின் சமத்துவத்திற்காக தனதுயிரை இத்தரணியில் விதைத்துச் சென்றவன் ஒருவன் உண்டு. அவனது கதை இது.

“ சே!” என்னும் ஒற்றைச் சொல் இன்று ஒரு ஓரெழுத்து மந்திரமாயிருக்கிறது.




அர்ஜெண்டினாவின் ரொசாரொயோ நகரில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி , குவாரா லின்ஞ் மற்றும் செலியா டி லா செர்னா ஒய் லோசா தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார், எர்னஸ்டோ குவாரா ( இப்பெயரோடு டி லா செர்னா எனவும் சேர்த்து அழைக்கப்படுகிறார்). அவருடைய தகப்பனார் ஸ்பானிய-ஐரிஷ் பூர்வீகம் உடையவர். தாயும் தனித்துவமான பாரம்பரியம் மிக்க ஒரு மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்தவர் தான். பணத்துக்குக் குறைவில்லை. மற்றவரிடமிருந்து தனித்துவமானவர் செலியா. மேட்டுக்குடியில் பிறந்த போதும், அவர் ஒரு இடது சாரி நம்பிக்கைகள் மிக்க ஒரு சோசியலிஸ்டாக, மதஎதிர்ப்புணர்வுள்ள ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். சேவின் பல்வேறு கருத்தியல்களும், பார்வைகளும் உருவாவதில் செலியாவின் பங்கு மகத்தானது. சேவின் தந்தை துவங்கிய தொழில்கள் பலவற்றில் சோபிக்க முடியாமல் நஷ்டத்திலேயே முடிந்தது. எனினும் செலியாவிடம் இருந்த அவரது குடும்ப சொத்து அக்குடும்பத்தின் ஜீவனத்திற்கு ஆனது.



சே எனும் பெயர் எர்னஸ்ட்டோவிற்கு இடையில் தான் ஒட்டிக் கொண்டது. குவாரா எனும் குடும்பப் பெயரொடு இணைத்து ’எர்னஸ்டோ குவாரா’ என்பதே அவரது இயற்பெயர். நமது ஊரில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சகா என்று அழைத்துக் கொள்வார்களே, அது போல அர்த்தம் தொனிக்கும் ஒரு பேச்சு வழக்குச் சொல்லே ’சே’ .

வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் சே. அவர் குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அவரை ஒரு சாராசரி லத்தீன் அமெரிக்கனுக்கு இருக்கும் அறிவாளித்தனத்தையும் மிஞ்சிய அறீவுஜீவி சே என வர்ணிக்கிறது. இளமையிலிருந்தே புத்தகங்களாலே நிறைந்த வீட்டில் இருந்து, ஒரு முற்போக்குவாதியான தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததால் இதில் ஆச்சரியங்கள் பெரிதும் இல்லை என்றே கொள்ளலாம்.


துறுதுறு குழந்தையாக இருந்த ’சே’வை அவருடைய இரண்டாவது வயதில் தாக்கிய தீவிர ஆஸ்மா அவரை முடக்கி ஒரு ஓரமாய் சுருட்டிப் போட்டது. தனது வாழ்வின் கடைசிக் கணம் வரைக்கும் பிடிக்காத தோழனாய், அழையா விருந்தினனாய் ஆஸ்மா தன்னுடனே தங்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் தனது தாய் அளித்த நம்பிக்கையினாலும் அவரது கனிவான ஆதரவினாலும், அதனை அப்பாலகன் எதிர்கொண்டான்.
நோயின் தாக்கம் காரணமாக சேவால் எல்லா குழந்தைகளைப் போல தொடர்ச்சியாக பள்ளி செல்ல முடியவில்லை. ஆனால் அவரது தாய் அதனை ஈடு செய்தார். 1930ல் அர்ஜெண்டின தேசத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நாட்டின் அரசியல் நிலை சிக்கலான சூழ்நிலைக்குள்ளானது. சேவின் பள்ளிப் பருவம் முழுவதும் அந்த சூழல் அப்படியேதான் இருந்தது. ஆஸ்மாவை எதிர்த்து போராடி போராடி அசாதாரணமான மன வலிமையை வளர்த்துக் கொண்ட சே, பின்னாட்களில் அதனயே தனது ஆளுமையின் ஒரு மகத்தான கூறாகக் கொண்டார்.




பள்ளிப் படிப்பை முடிக்கிற தருவாயில் சேவின் பாட்டி மரணமடைந்தார். எதிர் காலம் குறித்து பெரிதும் முடிவுகள் ஏதும் எடுக்காத சே மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் அவரது தாயார் மார்பகப் புற்று நோயால் அவதியுற்றதும் இன்னொரு முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகிறது. அவருடைய குடும்பமும் அவ்வேளையில், தலைநகர் பியூனஸ் அயர்ஸிற்கு குடிபெயர்ந்திருந்தது.

சேவின் கல்லூரி வாழ்க்கை அடுத்த பதிவில்...

படங்கள் உதவி: 1. http://www.hey-che.com/quotes-from-che-guevara.html
2. விக்கிபீடியா இணையதளம் [ படத்தில் இடது ஓரத்தில் சே]
3. விக்கிபீடியா இணையதளம் [ 22 வயதில் சே]


3 comments:

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
சே யின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாக
அழகாகச் சொல்லிபோகிறீர்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

jesheela said...

thagnkal pathivin mulam niraiya visayangakal therinthukolla mutikirathu.thotarnthu elutha vazhathukal.

வருணன் said...

நன்றி ரமணி...

நன்றி ஷீலா...

தங்கள் எதிர் வினைகளுக்கு மனமார்ந்த நன்றிகள். காலந் தாழ்த்தி நன்றி சொல்வதற்கு மன்னிக்க... :)

Post a Comment