பந்தயம்

Sunday, April 17, 2011

வாசிப்பு அனுபவத்தை குறித்து கடந்த பதிவில் நாம் அவதானித்தோம். ஒவ்வொரு முறையும் வாசிப்பைப் பற்றிய சிந்தனை எனது மனதை ஆக்கிரமிக்கும் போது, தவறாமல் கூடவே ஆண்டன் செகாவின் “The Bet” என்ற சிறுகதை நினைவுக்கு வரும்.


ஆண்டன் செகாவ் ( Anton Chekhov, 1860-1904) மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்களுள் ஒருவர். ஒரு மருத்துவராக இருந்த போதும்
படைப்பாக்க உந்துதலால் ஒரு சிறந்த நாடக ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் மிளிர்ந்தவர் செகாவ். தனது தாய்மொழியிலேயே எழுதி வந்த செகாவை, கான்ஸ்டன்ஸ் கார்னட் (Constance Garnet ) என்பாரது ஆங்கில மொழிபெயர்ப்பின் (1916-1922) வ்ழியாக உலகம் கண்டு கொண்டது. இன்றளவும் இலக்கிய உலகில் சிறுகதை வடிவில் ஒப்புமை கூறமுடியாத அளவிற்கு செகாவின் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது. உலகின் சகல மொழிகளிலுமாக சேர்த்துப் பார்க்கையில் ஆண்டன் செக்காவ் எனும் இலக்கிய ஆளுமை, ஆகச் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவராகவே இருக்கிறார்.

இனி கதை.




ஒரு வங்கி அதிகாரி தனது சகாக்களுக்கு ஒரு இலையுதிர்கால மாலையில் அளித்த விருந்தினைக் குறித்து அவர் அசை போடுவதில் ஆரம்பிக்கிறது கதையின் துவக்கப் புள்ளி. அந்த அந்திப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டவர்களில் பலர் பத்திரிக்கையாளர்களாகவும், அறிவு ஜீவுகளாகவும் இருந்தபடியால் பலவற்றை பற்றிய விவாதங்களும் கருத்துக்களும் அந்த சபையில் துவங்குகிறது. அவர்கள் முன்னர் ஒரு விவாதப் பொருளை வைக்கிறார் அதிகாரி. அது மரண தண்டனையை குறித்தது. பலரும் தங்களது கருத்தை அதற்கு எதிராகவே பதிவு செய்கின்றனர். சிலரோ, உலகெங்கும் மரண தண்டனையானது, ஆயுள் முழுமைக்குமான சிறை தண்டனையாக மாற்றியமைக்கப்பட வேண்டுமெனும் கருதுகின்றனர். ஆனால் இவருடைய வாதமோ முற்றிலும் இவர்களது கோணத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. அவர் அணு அணுவாக ஒருவனை அன்றாடம் கொல்லும் ஆயுள் தண்டனையைக் காட்டிலும் உடனடியாக ஒருவனைக் ஒரு முறை கொல்லும் மரண தண்டனை சிறந்ததே என வாதிடுகிறார்.

இன்னும் சிலரோ, இரண்டுமே நியாயமற்றவை எனவும், ஒரு மனித உயிரை வாங்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்கின்றனர். அக்கூட்டத்தில் 25 வயதான ஒரு இளம் வழக்கறிஞனும் இருக்கிறான். இவனது கருத்தை கூறும் முறை வந்ததும் அவன், இரண்டுமே மோசமானதே; ஆயினும் இதில் ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தம் ஏற்படின் தான் சிறை வாசத்தை ஏற்பேன் என்கிறான். சாவதை விடவும் எந்த நிலையாயினும் வாழ்வதென்பது சிறந்ததே என்பது அவனது கருத்தாக இருக்கிறது.

இக்கூற்று முற்றிலும் உண்மையற்றது என்று எதிர்க்கும் அதிகாரி சபையினர் முன்னிலையில் ஒரு பந்தயத்திற்கு அவனை அழைப்பு விடுக்கிறார். அதன் படி ஒரு வேளை இவன் 5 வருடங்கள் கடுமையான சிறை தண்டனையை அனுபவித்தால் தான் அவன் இழந்த வருடங்களுக்கு ஈடாக இரண்டு மில்லியன் பணம் தருவதாகவும் அறிவிக்கிறார். அவனோ அதிகாரி சொல்வது மெய்யானால் தன் 5 வருடங்கள் அல்ல 15 வருடங்கள் தனிமைச் சிறையில் இருக்கத் தயார் என்கிறான்.
அவரும் ஒப்புக்கொள்கிறார். அதிகாரி பணத்தையும், இளைஞன் மீண்டும் பெறமுடியாத தனது 15 வருட வாழ்க்கையயும் பந்தயமாக வைக்கின்றனர்.

பணம் படைத்த அதிகாரியோ, தனக்கு இப்பந்தயப் பணம் ஒன்றுமே இல்லையுனவும், ஆனால் அவனுக்கோ அவனது பணயம் வைத்திருப்பது திரும்பப் பெறவியலாத இளமைக் காலமெனவும் கோடிட்டுக் காட்டுகிறார். பந்தய காலத்தில் அவன் எப்போது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் எனவும், ஆனால் அவன் அவ்வாறு வெளியேறினால் அதுவரை அவன் இழந்த காலம் அவனுக்கு வீணானதே என்றும் தெளிவு படுத்துகிறார். அவனோ எதற்கும் பின் வாங்குவதாக இல்லை. நவம்பர் 14,1870 நள்ளிரவினின்று போட்டி துவங்குகிறது.

அதிகாரியின் தோட்டமொன்றில் இருக்கும் தங்குமிடத்தில், ஒற்றை அறையில் அவன் கடுமையான காவலுக்கிடையே தனது காலத்தைக் கழிக்க வேண்டும். அறையில் வேறு மனிதர்களோ, மனிதக் குரலோ கூட அனுமதிக்கப்பட மாட்டா. தினசரிகளும் கிடையாது. இருப்பினும் இசை கேட்கவும், புத்தகம் வாசிக்கவும் அவனுக்கு அனுமதி உண்டு. பிரியப்படின் கடிதங்கள் எழுதலாம். ஒயின் அருந்தவும் புகைப்பதற்கும் கூட அனுமதி உண்டு. வெளியுலகத் தொடர்பிற்கு ஒரே வழி ஒரு சன்னல் மட்டுமே. அதன் வழியாகவே அவனுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும், உணவு உட்பட. இவையாவும் நிபந்தனைகளாக அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பந்தயம் ஆரம்பமாகிறது.

முதல் வருடத்தில்- அவன் எழுதிய குறிப்புகளின் படி அவன் கடுமையாக தனது தனிமையால் அவதிப்படுவதும் மன அழுத்தத்தினால் அல்லலுறுவதும் அதிகாரிக்கு தெரிய வருகிறது. இரவும் பகலும் சதா காலமும் அவனது அறையினின்று பியானொ இசை வழிந்து கொண்டெயிருந்தது. அவன் ஒயினை மறுக்கிறான். ஒயின் தனது ஆசையை கிளர்த்துவதாகவும், ஒரு சிறைவாசிக்கு ஆசையே முதல் எதிரி எனவும் சொல்கிறான். புகையோ அடைந்து கிடக்கும் அறையின் காற்றைக் கெடுத்து விடுவதால் அதையும் ஒதுக்குகிறான். முதல் வருடத்தில் அவனுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இலகுவான வாசிப்பிற்கு ஏதுவான நாவல்களும் கதைப் புத்தகங்களுமே.

இரண்டாம் வருடம் பியானோ இசை ஊமையானது. வாசிப்பிற்கு அவன் தேர்ந்த நாவல்களையே வேண்டுகிறான். ஐந்தாம் வருடம் பியானோ இசை மீண்டும் வழியத் துவங்குகிறது. அவன் ஒயின் கேட்கிறான்.வெளியிலிருந்து பார்பவர்களுக்கோ அவன் ஒன்றுமே செய்யாது உண்பதும், உறங்குவதும், தனிமையில் தனக்குத் தானே கோபமாக பேசிகொள்வதுமே காணக் கிடைக்கிறது. இரவு முழுவதும் அவன் எதையோ எழுதிக் கொண்டேயிருப்பதும், விடியும் தருணத்தில் அவ்வளவையும் கிழித்தெறிவதும் வாடிக்கையாகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அவன் அழுவதும் கேட்கிறது.

ஆறாம் வருடத்தின் இரண்டாம் பாதியில் அவன் அதிஆர்வத்துடன் மொழிகளையும், தத்துவத்தையும், வரலாறையும் கற்கத் துவங்குகிறான். அவனது வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரி 600-க்கும் அதிகமான புத்தகங்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது. அக்காலகட்டத்தில் அவன் அதிகாரிக்கு எழுதிய ஒரு கடிதத்தில்,
‘எனது அன்பிற்குரிய சிறை அதிகாரியே, நான் இவ்வரிகளை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அந்தந்த மொழி தெரிந்தவரிடம் காண்பித்து நான் என்ன எழுதியிருக்கிறேனென புரிந்து கொள்ளுங்கள். நான் எழுதியவற்றுள் ஒரு குறையைக் கூட அவர்களில் யாரும் சுட்டிக் காட்ட இயலாது. எல்லா கால கட்டத்திலும், அறிவுஜீவிகள் வெவ்வேறு தேசத்தவராய் வெவ்வேறு மொழிகள் பேசியிருப்பினும் அவர்களின் உள்ளத்தில்
எரியும் தீ ஒன்றே. நான் இப்போது எத்தகைய உலகம் சாராத மகிழ்வில் திளைக்கிறேனோ,அதனை நீங்கள் உணர்ந்தால் தான் எனது ஆன்மா உணர்வதை உங்களால் புரிந்து கொள்ள இயலும்.’

பத்தாம் வருடத்திற்குப் பிறகு இருக்கையினின்று அசையாது விவிலியம் மட்டுமே வாசிக்கலானான். அதிகாரிக்கோ கடந்த வருடங்களில் 600 புத்தகங்களை வாசித்து விட்ட இவன் வாசிக்குமளவிற்கு அந்த சிறிய விவிலியப் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆச்சரியம். விவிலியத்தை தொடர்ந்து அவன் மதங்களின் வரலாற்றையும், இறையியலையும் வாசித்தான். கடைசி இரு வருடங்களில் அவனது வாசிப்பு இன்னமும் புதிரான வகையில் மாறியது. சகலத்தையும் வாசித்திடும் பெரு வேட்கையோடு அவன் இருந்ததாகவே தெரிந்தது. அவனது வாசிப்பு, கைகளில் கிடைக்கிற தக்கைகளை ஒன்றொன்றாக பிடித்தபடி எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வெறியோடிருக்கும் கவிழ்ந்த கப்பலொன்றிலிருந்து தப்பிய ஒருவனது மனோநிலையை ஒத்திருந்தது.

மறுநாள் இரவோடு முடிவுக்கு வருகிறது 15 வருடப் பந்தயம். அதிகாரி முன்னிருந்த நிலையில் இல்லை இப்பொது. தனி வாழ்க்கையில் ஏற்பட்ட நட்டம் என மனிதர் நொடித்துப் போயிருந்தார் இப்போது. இப்பந்தயப் பணத்தை செலுத்துவதன் மூலம் அவர் திவாலாகும் நிலையை அடைவது நிச்சயம். தன்னைத் தான் நொந்தபடி புலம்பிக் கொண்டுதான் நடந்த அனைத்தையும் அசை போட்டபடியிருக்கிறார் இப்போது.

வழக்கறிஞனுக்கு இப்போது 40 வயது. கண்டிப்பாக அவன் ஜெயிக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்வாய் வாழ்வான். நானோ பிச்சைக்காரன் போல... என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் அவரை கவலையில் ஆழ்த்துகிறது. அவன் என்னதான் செய்கிறான் இப்பொது எனத் தெரிந்து கொள்கிற ஆர்வம் அவருக்கு மிகுதியாகிறது. இத்தனை வருடங்களில் முதன் முறையாக அவனது அறையை நோக்கிப் பயணிக்கின்றன அவரது கால்கள்.

அந்த மழையிரவில் உணர்வு வயப்பட்ட அந்த வயதான அதிகாரி அவனது அறையை நெருங்குகிறார். முதல் முறையாக அவனது சன்னல் வழியாய் உள்ளே பார்க்கிறார். மெல்லிய மெழுகுதிரி ஒளியில், அவன் இவருக்கு முதுகைக் காட்டிய வண்ணம் இருக்கையில் அமர்ந்திருப்பது தெரிகிறது. மேசையில் படபடக்கின்றன திறந்த புத்தகங்களின் பக்கங்கள். அவனிடம் துளி அசைவில்லை, இவர் பார்த்த ஐந்து நிமிடங்களாக. இத்தனை வருட வாழ்க்கை இவ்வாறு சலனமற்று இருக்க அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். திறக்காத அறையை சாவியால் திறக்கிறார். பெரும் ஒலியெழுப்பித் திறக்கும் அறைக் கதவின் ஓசைக்குக் கூட அவனிடம் அசைவில்லை. மெல்ல அருகில் செல்ல அவர் அவனைப் பார்க்கிறார். கன்னங்கள் ஒட்டி, ஏதோ எலும்புக் கூட்டினை போல அமர்ந்தபடியே உறங்கி இருக்கிறான். மேசையில் படபடக்கும் ஒரு கடிதம் இவரது கவனத்தை ஈர்க்கிறது.

அக்கடிதத்தில்,
“ நாளையுடன் எனது சுதந்திரம் இன்னிடமே திரும்பவும் கிடைக்க இருக்கிறது. இவ்வறையை விட்டு நான் வெளிச்சத்தைக் காணச் செல்லும் முன்னர் சில வார்த்தைகள். இவ்வாழ்க்கையும், இச்சுதந்திரமும், நீங்கள் எனக்களித்த எல்லா புத்தகங்களில் இருக்கும் எல்லா நல்ல விசயங்களும் ஒன்றுமே இல்லை. இப்பதினைந்து வருட வாழ்க்கையில் நான் உலக வாழ்வை ஊன்றிப் படித்தேன். நான் உலகையும் மனிதரையும் கண்ணார காணவில்லையே தவிர, புத்தகங்களில் நான் மனம் கமழும் ஒயினை அருந்தினேன், பாடல்கள் பாடினேன், காடுகளில் வேட்டையாடினேன், பெண்களோடு கூடியிருந்தேன்...

கவிஞர்களும் அறிவாளிகளும் உருவாக்கிய மேகத்தைப் போல மென்மையான கவிதைகளையும், கதைகளையும், அவர்களே எனது காதில் இரவுகளில் சொல்லி, எனது மனதை ஆட்கொண்டனர். புத்தங்களில் நான் மலையேறினேன். இயற்கையின் எழில் முழுமையையும் தரிசித்தேன். உங்கள் புத்தகத்தின் வழியாக நான்
முடிவிலாத பள்ளங்களுக்குள் குதித்திருக்கிறேன். புதுமைகள் செய்து, நகரங்களை எரித்து, புது மதங்களை போதித்து, ராஜ்ஜியக்களைப் பிடித்திருக்கிறேன்.

ஆனால் இது எல்லாவற்றையும் நான் புறந்தள்ளுகிறேன். இவ்வுலகம், இந்த ஞானம் அனைத்தும் மாயை, கானல் நீரைப் போல. நீங்கள் ஞானியாக, சிறந்தவராக இருக்கலாம். ஆனால் மரணம் அனைத்தையும் துடைத்தெறியும். உங்களது வரலாறு, வளம்,முடிவிலா அறிவுஜீவித்தனம் எல்லாவற்றையும் இவ்வுலகுடனேயே உறையச் செய்திடும்.

நான் அனைத்தையும் மறுதலித்தது குறித்து தங்களுக்கு புரிய வைத்திட, ஒரு காலத்தில் சொர்க்கமாக நான் கனவு கண்டிருந்த இந்த இரண்டு மில்லியன் பணத்தை மறுதலிக்கிறேன். அதனைப் பெறும் தகுதியை இழக்கும் பொருட்டு, குறிக்கப்பட்ட நேரத்திற்கு 5 மணி நேரம் முன்னதாக நான் வெளியேறி விடுவேன் . . .”

அதிகாரி அக்கடிதத்தை மீண்டும் மேசையிலேயே வைத்து விட்டு, அழுதபடி அவனது தலையில் மித்தமிட்டு வெளி வருகின்றார். அக்கணத்தில் அவர் பங்குச் சந்தையில் இழந்த பணமோ, இதர செல்வங்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர் படுக்கையில் வீழ்ந்தும் நீண்ட நேரம் பொங்கும் உணர்வுகளும், கண்ணீரும் அவரை உறங்க அனுமதிக்கவில்லை.

மறுநாள் வெளுரிய முகத்துடன் ஓடிவந்த காவலாளி, சிறையிலிருந்தவன் சன்னலின் வழியாக தப்பித்து போனதாக கூறுகிறான். அதிகாரியோ குழப்பங்களுக்கும், வீண் பேச்சுகளுக்கும் இடமளிக்கா வண்ணம், பணத்தை அவன் மறுதலித்திருந்த அவனது கடிதத்தை தனது பெட்டகத்தில் பத்திரப்படுத்துகிறார்.



இக்கதையினை இசைக்கோர்வையுடன் கூடிய படங்களாகக் கீழே காணலாம்.

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஓப்பனிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு

Yaathoramani.blogspot.com said...

முழுக்கதையைப் படித்த உணர்வு
உங்கள் கதைச் சுருக்கம் படிக்கக் கிடைத்தது
தரமான பதிவு
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு ம்ம்ம் அசத்துங்க...

jesheela said...

nalla muyarchi vazhalthukal.

வருணன் said...

நன்றி சி.பி., ரமணி, மனோ, ஜெஷீலா... தங்கள் அனைவரின் வருகையும் பின்னூடங்களும் எனக்கு உற்சாகமளிக்கின்றன. மனமார்ந்த நன்றிகள்.

மனோ, தாயகம் திரும்பும் தங்களை அனத்துப் பதிவர்கள் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்.

RAJBABU said...

அருமையான பதிவு

Post a Comment