நிழல் வேண்டும் காலம்

Monday, November 1, 2010



ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(31.10.10) இணைய தளத்திற்கு நன்றி

7 comments:

Raja said...

நல்ல கவிதை...வாழ்த்துக்கள் நண்பா...

இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!
- படுக்கை நன்கணியார்

Anonymous said...

அருமை வருணன்..

//புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென//

செம.. ரொம்ப ரசிச்சேன்...

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கவிதை.... வளமான வார்த்தைகளுடன் செறிவான நிறைவான கவிதை
தொடரட்டும் உங்களின் கவிதைப் பணி

வருணன் said...

நன்றி றாஜா. கனத்த இருதயத்துடன் இக்கவிதையை எழுதினேன். இன்றோ வாசித்த உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ரணப்பட்ட மனதிற்கு மயில் பீலியால் வருடப்படும் மருந்தாய்...

வருணன் said...

நண்பர்களே பாலா, கோபி நன்றிகள் பல...

வருணன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நீலகண்டன்( அன்பரே, தங்களது பெயரிலேயே எனக்கு ஒரு தோழன் உண்டு).

Raja said...

வருணன்...என் மின்னஞ்சல் கிடைத்ததா?

Post a Comment