இரட்டை வானவில்

Saturday, May 29, 2010



ஒவ்வொரு நாளின் இருப்பிற்கும்
இறப்பிற்கும் இடையேயான
அந்திப் பொழுதுகளில்
பூத்து நடைபயில்வாய்
கடற்கரை மணலில்

அன்றைய பொழுதில்
என்னிடம் கூட சொல்லாமல்
கரை மணலில் உன் காற்தடமெழுதும்
கவிதைகளை வாசித்து வருமாறு
சிறகுகள் கட்டி வானத்தினின்று
கோடி கோடியாய் மழைத் துளிகளை
அனுப்பி வைத்தனர் தேவதைகள்
திடீரென...

தேவதை இளவரசிகளிட்ட வேலையை
செவ்வனெ செய்ய இறங்கி வந்த
சேவகர்கள் யாவரும் சாரல்களாகி- சிலர்
உன்மீது விழுந்து வழிகின்றனர்
சிறகுகள் முறிந்தும் குழைந்து சிரித்து
நனைக்கின்றனர் உன்னை முழுவதுமாய்

வேறு பலரோ உன் காற்தட கவிதைகள்
யாவற்றையும் கரைத்து தேவபாஷைகளில்
மொழிபெயர்த்து தம் எஜமானிகளுக்கு
அனுப்புகின்றனர் அவசர அவசரமாய்

நனைந்த உனக்கு
வாசித்த தேவதைகள்
வானவிற் குடையை பரிசளிக்கின்றனர்

தூரத்தில் நான் பார்த்திருக்க
இரட்டை வானவில்
விண்ணிலொன்றும்
மண்ணிலொன்றுமாய்.

1 comment:

R. Gopi said...

நல்லா இருக்கு.

\\காற்தடமெழுதும்\\

கால்தடமா அல்லது காற்றடமா. நிச்சயம் காற்தடம் கிடையாது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை ஆனால்.

Post a Comment