
மூன்றாம் உலகின் பசி தீர்க்க
கருத்தரங்கில் கூடி விவாதித்து
பதினேழு வகை பதார்த்தங்களுடன்
மதிய உணவு முடித்துக் கொள்கிறீர்கள்.
ஐஸ் கட்டிகள் மிதக்க
ஸ்காட்ச் ததும்பும் கோப்பைகளை
கைகளில் ஏந்தியபடி
போர் நிறுத்தங்களின் அவசியங்களை
அவதானித்து அலசுகிறீர்கள்.
மறவாமல் சொல்லிக் கொள்வீர்கள்
‘சியர்ஸ்’ என்று
திரவத்தை விழுங்கும் முன்னர்.
வீடில்லா கூட்டத்தின் குறைகள் களைய
பன்னாட்டு உடன்படிக்கைகளடங்கிய
கோப்புகளில் கையெழுத்திட்டு மாற்றியபடி
நிழற்படமெடுக்க வசதியாய் சிரிக்கிறீர்கள்
குளிரூட்டப்பட்ட கூடங்களில்.
வெளியே பெருங்கூட்டம் கடவுளின்
கருணை கோரி வழிபட்டு கிடக்கிறது
உருகியுருகி
தோழர்களே காலியான கடையின் முன்
பொருள் வேண்டி நிற்பது புரியவில்லையா?
தொழக் குவிக்கும் கரங்களில்
சவுக்குகள் அமரட்டும்.
எங்கும் நிறையும் பரம்பொருள்
சர்வ நிச்சயமாய் இருப்பார்
சுண்டும் சவுக்கினுள்ளும்.
இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.
1 comment:
Its a hard core fact.....
Post a Comment