Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

இந்த அனுபவம் உங்களுடையதாகவும் இருக்கலாம்!

Tuesday, April 2, 2013









புத்தககடையில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்கிறேன். கழிந்த திசம்பர் மாதம் மதுரையில் ஒரு புத்தகக் கடையில்காலச் சுவடு பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும்எனும் வாசகத்தால் ஈர்க்கப் பட்டு உள்ளே ஆவலாய் சென்றேன். விளம்பரம் முற்றிலும் பொய்யில்லை. ஓரளவிற்கு வைத்திருந்தார்கள். இணையத்திலும் ஏனைய புத்தகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் வழியே நான் அறிய வந்த படைப்புகளை ஆர்வமுடன் தேடினேன். சில கிடைத்தன. அவை காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் வெளியான நூல்கள்.

பிரதிகள் ஒன்றிரண்டே இருந்தன. சில படைப்புகள் ஒரே ஒரு பிரதி மட்டும் இருந்தன, அதுவும் பிரிக்க முடியாதபடி சீல் செய்யப்பட்ட கண்ணாடி அட்டைகளுக்குள். என் கரங்களில் கரிச்சான் குஞ்சுவின்பசித்த மானுடம்இருந்தது. நான் அப்படைப்பை குறித்து அறிந்திருக்கிறேனே அன்றி வாசித்ததில்லை. நான் வாசிக்காமல் எந்த புத்தகத்தையும் வாங்கியது இல்லை. ஏனெனில் எவ்வளவு பெரிய படைபாளியாயினும் அவருடைய எழுத்து நடையும் எண்ண ஓட்டமும் நான் உள்ளே சென்று வரக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே படைப்பை உள்வாங்கிட முடியும். இல்லையேல் வாசிப்பு அர்த்தமற்றதாகிவிடும்.  

எனவே அந்த கண்ணாடி உறையை கிழிக்க முயன்றேன். உடனே அங்கு வேலை செய்யும் ஒரு இளைஞன் வேகமாய் ஓடி வந்து, ‘சார்! கவரை ஒடைக்கக் கூடாது.  நீங்க வாங்க போறீங்கன்னா மட்டும் ஒடைங்க’, என்றார்.

எனக்கு ஒரு வகையில் அது நிர்பத்திப்பாகவே பட்டது. வேறு ஏதேனும் உறையிடாத பிரதி இருக்கிறதாவெனப் பார்த்தால் அதுவும் இல்லை. நேரே கல்லாவில் உட்கார்ந்தவரிடம் சென்று விவரம் சொன்னேன். அவர், ‘ஆமா சார்! கவர் இல்லாம இருந்தா யாரும் வாங்க மாட்டாங்க ‘, என்றார். 

நான் வாசிக்காமல் எப்படி ஒரு புத்தகத்தை வாங்குவது என கேள்வியெழுப்ப அவரோ, “ சார் வரவுங்க அப்படி சீல் இல்லாத புத்தகத்த பார்த்துட்டு அதை வேண்டாம்னு சொல்லி கவர் பண்ணியிருக்க புத்தகமாத்தான் கேக்குறாங்க. கவர் கிழிஞ்சிருந்தா வேண்டாம்னு சொல்றாங்க. அப்புறம் அந்த புத்தகத்த யாரும் வாங்க மாட்டாங்க” என்றார். சீல் உடைந்த புத்தகங்கள் அழுக்காக இருக்கிற பட்சத்தில் மட்டுமே பெரும்பான்மையோர் வாங்க பறுப்பர். விற்பனைக்கு வைத்திருக்கும் புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது விற்பனையாளரின் கடமைதானே? இதுவே ஒரு திண்பண்டக் கடையில் இப்படி ஒரு பொருள் விற்பனைக்கு இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா? 

நானோ அவரிடம் ,” சார்! நான் என்ன வாழ்த்து அட்டையா வாங்கப் போறேன் வெறும் வெளி அட்டையைப் பார்த்து வாங்க? உள்ள பாத்தாத்தானே புத்தகத்தைப் பத்தி தெரியும். கவர் பண்ணாத பிரதி ஏதாவது இருந்தா குடுங்க பார்த்துட்டு பிடித்திருந்தா கண்டிப்பா நான் அதையே வாங்கிகுறேன்” , என என் தரப்பை எடுத்துச் சொன்னேன்.
அவரோ திருப்தியில்லாதவராய் ,” உங்கள மாதிரி ஒரு சிலர் தான் சார் வாங்குறாங்க. நீங்க வேணா போய் பாருங்க. எல்லா புக்கும் இப்ப இப்படி கவர் போட்டு தான் வருது ”, என ஒரு விகடன் பிரசுர புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.

நான் அவரிடம் பொறுமையாக விளக்கினேன். அதாவது உறையிலிட்டு நூல்கள் அனுப்பப்படுவதே  பாதுகாப்பாக வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விடயத்தில் எனக்கு இன்னொமொரு ஐயம் உண்டு. அதாவது பதிப்பகத்தினர் வேண்டுமென்றே இது போல செய்கிறார்களோ? - வாசனை திரவிய குப்பிகளை  சீல் செய்து விற்பதைப் போல.) மேலும், “நீங்கள் காட்டும் விகடன் நூலகள் எல்லாம் ஏற்கனவே அப்பத்திரிக்கையில் வந்த கட்டுரைகள் போன்றவற்றின் தொகுப்பே. அதனால் அது உறையிடபட்டிருந்தாலும் பிரச்சனை இல்லை. உள்ளடக்கம் தான் எல்லோருக்கும் தெரிந்ததே”. என்றேன்.

எனது எந்த விளக்கமும் அவரை திருப்திப் படுத்தியதாக தெரியவில்லை. முடிவாக அவர் என்னிடம், “ நீங்க வேணும்னா பதிப்பகத்துக்கே போய் இது குறிச்சு  கேட்டுக்கோங்க” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
நானும் அவரிடம் அதற்கு மேல் வாதாடி பிரயோசனமில்லை என்பதை புரிந்து கொண்டு இரண்டே இரண்டு புத்தகங்களோடு வீடு திரும்பினேன். செல்லும் முன் அவரிடம், “ நல்ல எழுத்த வாசிக்கிறவுங்க குறையுறாங்க என வருத்தப்படுறீங்க. ஆனா வரும் சிலருக்கு தேர்ந்திடுக்கிறதுல இத்தனை சிக்கல் இருந்தா எப்படி?” என்று சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திருகாமல் வெளியேறினேன். ஆர்வத்தோடு எங்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மூன்று நான்கு வாடிக்கையாளர்கள் எப்பொதும் போல மௌனமாய் இருந்து விட்டனர்.

இணையப் பயன்பாடு - III

Tuesday, September 11, 2012



பார்த்திராத நண்பன்:

ஒத்த கருத்துள்ளவரை ஒருங்கிணைக்கிறது சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites). பேனா நண்பர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாறாகிப் போனார்கள். மாறி வரும் இயந்திர வாழ்வில் மனிதன் உறவிற்காய் ஏங்குகிறான். தூரங்கள் பிரிக்கும் மனித மனங்களை பசை போட்டு பிணைக்கின்றன சமூக வலை தளங்கள். இவற்றின் சுருக்கமான வரலாறை நாம் கீழ்கண்ட முகவரியில் வாசிக்கலாம்.

ஆனால் ஏனோ இதில் ஆர்குட் குறித்த தகவல் மட்டும் இல்லை.
வெறும் நண்பர்களைப் தொடர்பில் வைத்துக் கொள்ள எனும் நோக்குடன் முதலில் செயல்படத் துவங்கிய இத்தளங்கள், பின்னர் அவகளுக்கு இருக்கும் இன்ன பிற மகத்தான சாத்தியங்களை உணரத் துவங்கியுள்ளன. வாடிக்கையாளரைப் பிடிக்கும் மகத்தான வாய்ப்பை வழங்குகின்றன இத்தளங்கள். ஒவ்வொரு வணிக நிறுவனமும், தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதிலிருந்து, அவற்றை நுகர்வோர் மத்தியில் பிரபலப் படுத்துவது வரை துணை நிற்கின்றன இத்தளங்கள்.

இதுமட்டுமே இத்தளங்களினால் ஆகப் பெரிய நன்மையாக கருதப்பட்டது 2010 வரை. ஆனால் ஒரு சரித்திரத்தையே மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை இத்தளங்கள் என்பது எகிப்து தேசத்தில் 30 வருட சார்வாதிகாரத்தை எதிர்த்த மக்களை ஒன்றிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவை முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களே. அவ்வருடத்தில் எகிப்தில் பற்றிய மக்கள் எழுச்சித் தீ மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவிய போதும் இத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இது குறித்த தகவல்களை இங்கு வாசிக்கலாம்.


இது போலவே பெறுநிறுவனங்களின் பேராசையை எதிர்த்து செப்டம்பர் 17,2011ல் ஆரம்பித்தது வால் ஸ்டீர்ட்டை நிரப்புவோம்  எனும் மக்கள் எழுச்சிப் போராட்டம். இப்போராட்டம் சமூகத்தின் சமத்துவமின்மையையும், அதிகாரத்தின் வல்லாதிக்கத்தையும் எதிர்க்கும் மனிதர்களின் ஒட்டு மொத்த குரலாக ஏகாதிபத்திய அமெரிக்க அரசை ஆட்டி எடுத்து வருகின்றது. போராட்டக்காரர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், தமக்கு மேலும் ஆதரவு திரட்டவும் மிக அதிகமாக பயன்படுத்தி வருவது சமூக வலை தளங்களைத்தாம். சொல்லப் போனால் “Occupy Wall Street “ எனும் இவ்வியக்கம் முதலில் டுவிட்டர் தளத்தில் ஒரு சோதனை முயற்சியாகவே துவங்கியது. ஆனால் அது மாபெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. இது குறித்த செய்திகளை மேலும் வாசிக்க


என்ற முகவரியை சொடுக்கவும்.

மின்னாட்சி :

முடியாட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்னாட்சி கால் பதிக்கத் துவங்கியிருக்கிறது. மின்னாட்சி எனப்படும்               e-Governance எனப்படுவது அரசு இயந்திரம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனக்குள்ளேயும், தன் மக்களோடும், நிறுவனங்களோடும், ஏனைய அரசுகளோடும் கொள்ளும் தொடர்பு என வரையறுக்கப்படுகிறது. கணினிகளின் வரவு அரசின் பரிவர்த்தனைகளை ஓரளவு மாற்றியிருந்த போதிலும், இணையமே அதன் உண்மையான திறனை, முழுப் பரிமாணத்துடன் வெளிக்கொணர்கின்றது. மின்னாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பிரிட்டன். அவர்களுடைய மின்னாட்சி குறித்த கொள்கைளையும் அதன் நடைமுறைகளைக் குறித்தும், அதனால் அந்நாட்டில் ஆரோக்கியமான மாற்றங்களும், சாத்தியப்படும் முன்னேற்றேங்களும் பற்றிய ஒரு முழுமையான தகவலை கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி வாசிக்கலாம்.


மின்னாட்சி அரசின் இயங்குவதை அதிகமான வெளிப்படை தன்மையோடு இருப்பதை சாத்தியமாக்குகின்றது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் தேர்ந்த அரசு எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய உரிமையுள்ளவன். இவ்வுரிமையை மின்னாட்சி நிலைனாட்டுகிறது. இணையத் தொடர்புகள் வழியே சாத்தியப்படும் அரசில் எல்லா மட்டங்களிலும் தொடர்புகள் எளிமையாகின்றன. பிரிட்டன் அரசே தனது மக்களை வங்கி பரிவர்த்தனைகள், பல்வேறு கட்டணங்களை செலுத்துதல் என சகலத்தையும் இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்துகிறது. மேலும் 2020 க்குள் எல்லா பரிமாற்றங்களையும் இணையத்தின் வழியே நடத்த திட்டமிட்டுள்ளது. மின்னாட்சியின் வெளிப்படைத்தன்மை ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இந்தியாவில் மின்னாட்சி குறித்து நாம் அறிந்து கொள்ள கீழ்கண்ட ஆய்வறிக்கை உதவும் என நம்புகின்றேன்.




மின்வர்த்தகம்:

இணைய வழி நடைபெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் மின் வர்த்தகம் என்று அழைக்கப் படுகிறது. கடைகளைத் தேடி பொருட்களை பார்த்து வாங்கும் காலம் மெல்ல மலையேறத் துவங்கியுள்ளது. வேண்டிய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ எலியத்தில் ஒரு சில சொடுக்ககள் போதும். வேலை முடிந்தது. வர்த்தக விதிகளை மாற்றி எழுத வேண்டிய நிலையை உருவாக்கி வருகின்றது வளர்ந்து வரும் மின்வர்த்தகம்.

இதில் அப்படி என்னதான் சிறப்பு? பொதுவாக நாம் நடைமுறையில் சரக்குகளை நேரிடையாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதில்லை. மாறாக அது அதற்குரிய கடைகளில் இருந்தே வாங்குகின்றோம். ஆனால் மின்வர்த்தகத்தில் நாமே எந்த இடைத்தரகரும் இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்தே வாங்க முடிகின்றது. இது வாங்கும் பொருளின் விலையை கணிசமான அளவு குறைக்கும் என்பதே அதன் சிறப்பம்சம். கீழ்கண்ட இணைப்பில் உலக அளவில் மின்வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் இணைய தள நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.


நமது நாட்டிலும் மின்வர்த்தகம் பொது வர்த்தகத்துக்கு இணையான பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளது. இங்கே தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி இந்திய அளவில் சிறந்து விளங்கும் தளங்களின் பட்டியலைக் காணலாம்.


இதில் சந்தையில் இருக்கும் இந்நிறுவனங்களுக்கிடையே தொழில் போட்டி வேறு. அப்புறமென்ன? வருடம் முழுவதும் இத்தளங்களில் ஆடி தள்ளுபடி தான். வாடிக்கையாளர்களாகிய நமக்கு கொண்டாட்டம் தான். 


ஆறாம் அறிவு :  

Popular Science எனும் பிரபல அமெரிக்க அறிவியல் இதழ் 2009ல், சிறந்த கண்டுபிடிப்பு எனும் தலைப்பில் ஒரு போட்டி நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒரு இந்திய இளைஞர் உலகை தன் கண்டுபிடிப்பால் வாய் பிளக்க வைத்தார்.அவர் பிரனவ் மிஸ்திரி என்ற குஜராத்தி இளைஞர். அவரது ஆறாம் அறிவு தொழில்நுட்பம் அவருக்கு சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதை மட்டும் வாங்கித் தந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கால இணையப் பயன்பாட்டின் போக்கினை நிர்ணயிக்க வல்ல ஒரு வித்து இதனுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூல முன் மாதிரியில் (Prototype) வன்பொருளாக மொத்தம் இருப்பதே   ஒரு கையடக்க ப்ரொஜெக்டர், ஒரு கண்ணாடி மற்றும் ஒரு காமிரா; கூடவே பிரவின் தொழில்நுட்பத்தின் மூளையான அவ்ரது மென்பொருள். இதில் அப்படி என்னதான் இருக்கிறது? நமக்கும் இணையத்திற்குமான தொடர்பை மறுவரையறை செய்கிறது இது.
சுருங்கச் சொன்னால் நமது சுவாசத்தை போல இணையத்தினை நமது உடலின் ஒரு மெய்நிகர் அங்கமாகவே ஆக்கிட வல்லதே இந்த ஆறாம் அறிவு தொழில்நுட்பம். இதனைப் பற்றியும், இதன் சாத்தியங்களையும் நான் சொல்வதை விட அதன் பிரம்மா பிரனவே விளக்கினால் தான் நன்றாக இருக்கும் இல்லையா? அதனால் அவருக்கு வழிவிட்டு நான் அமைதி காப்பதே சிறந்தது.



முடிவுரை:

இணையத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? எனும் தலைப்பை வாசித்தவுடன் எப்படி கட்டுரையின் உள்ளடக்கத்தை அமைப்பது என ஒரு சிறு குழப்பம் இருந்தது. தனி மனித வாழ்வில் இணையப் பயன்பாடு பற்றிய பார்வையில் மட்டுமே முழு கட்டுரையும் அமைப்பதா அல்லது இணையம் எனும் பெருவிருட்சம் ஒட்டு மொத்த மனிதகுல மேம்பாட்டிற்கு கொண்டிருக்கும் சாத்தியங்கள் குறித்து அவதானிப்பதா எனும் குழப்பமே அது. இது போன்ற ஒரு தலைப்பில் இந்த இரண்டு கண்ணோட்டத்திலுமே கருப்பொருளை அமைக்கலாம். ஆகவே இவ்விரண்டு பார்வைகளையும் கலந்து எழுதுவது என்று முடிவு செய்து எழுதியுள்ளேன். இன்னோரு முக்கிய செய்தியையும் இங்கு சொல்லியாக வேண்டும். பல பல இணையப் பயன்பாடுகளை பற்றி எழுதவில்லை தான் வானத்தை முழுமையாய் ஒரு சன்னலின் வழியே அதன் முழு பரிமாணத்தோடும் காண்பது எப்படி சாத்தியமற்றதோ, அது போலவே இணையமெனும் பெருங்கடலை இந்த சிறு கட்டுரை கட்டுமரத்திலேயே சுற்றி வர முடியாது என்பது யதார்த்தம். இறுதியாக இன்னொரு கருத்து. இணையம் எனும் மாயச் சுரங்கம் நாம் கனவிலும் நினைத்திராத வைரங்களை தர வல்லதுதான். அதே வேளையில் அச்சுரங்கத்தில் எண்ணற்ற புதைகுழிகளும், திரும்ப முடியாது தொலைந்து போகக் கூடிய இடங்களும் ஏராளம் இங்கே.      

தரவுகள் மற்றும் உதவிய நூல்கள் :

- கட்டுரையினூடேயே ஆங்காங்கே எனக்கு உதவிய தரவுகள், இணைய தளங்கள் என அனைத்தைப் பற்றியும் தங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். குறிப்பாக விக்கிபீடியா தளம் பல செய்திகளைப் பெறுவதில் பேருதவியாக இருந்தது.

- ‘The World is Flat- A Brief History of the Globalized World in 21st Century, By Thomas Friedman, 2005, Penguin Publications.  

இணையப் பயன்பாடு - II

Monday, September 10, 2012





மின்னஞ்சல் :

தகவல் பரிமாற்றங்களில் அதிமுக்கியமான ஒரு வகை கடிதப் போக்குவரத்து. இந்த அஞ்சல் இணையத்தின் கைவண்ணத்தால் மின் அஞ்சல் ஆனது. இப்பொது உலகின் எந்த மூலைக்கும் எதனை வேண்டுமாயினும் ( கோப்புகள், படங்கள், துண்டு படக்காட்சிகள், ஒலி என கடிதத்தோடு இணைத்தும்) கணப்பொழுதில் அனுப்பலாம், பெறலாம். அதுவும் இலவசமாக. இத்துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் ஹாட் மெயில், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகிய மூன்றுமே. இக்கட்டுரையையே நான் வல்லமைக்கு மின்னஞ்சல் தான் செய்தேன்.

வெறும் கடிதப் பரிவர்த்தனையோடு இச்சேவைகள் நின்று விடுவதில்லை. ஒரே நேரத்தில் ஒருவருடனோ அல்லது பலருடனோ உரையாடும் வசதியை, ஏன், ஒரு வெப் காமிரா இருந்தால் வீடியோ மூலம் உரையாடுகின்ற வசதியையும் அளிக்கின்றன. இது பயண காலத்தையும் அதனால் ஏற்படும் மிக அதிக பொருட்செலவையும் முற்றிலும் தேவையற்தாக்குகின்றன. இதனால் ஒரு முதுகலை கல்லூரி மாணவர் வேறு கண்டத்திலுள்ள ஒரு பேராசிரியரின் கீழ் தனது ஆராய்ச்சியை செய்ய முடியும், அவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காமலேயே. இவ்வசதியை  பயன்படுத்தி இணையத்தில் ஆன்லைன் தனிப்பயிற்சி (Online Tuition) இணையதளங்கள் சக்கை போடு போடுகின்றன.

கற்றல் விளையாட்டு :

கற்கிற ஆர்வமும், கற்றுக் கொள்ள நேரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு இணையம் ஒரு கேட்டதை வரமாய் தரும் கடவுள்;அதுவும் தவமேதும் செய்யாமலேயே!  சில வருடங்களுக்கு முன்னர் ஒரு துறையை பற்றி கற்றுக் கொள்ள நாம் அது சார்ந்த கட்டுரைகளாக மட்டுமே வாசிக்கக் கிடைத்தது.

இதற்கு பல இணைய தளங்கள் பற்றி ஒருவருக்கு தெரிய வேண்டும். அது கூட தேடல் பொறியின் தயவால் எளிதானது தான். ஆனால் பெரும்பாலும் நமக்கு ஒரு துறை குறித்த புத்தங்களே முதலில் தெரியும். யாரையாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து கேட்டால் நிச்சயம் அந்நபர் இதற்கு இன்னார் எழுதிய இன்ன பெயர் கொண்ட புத்தகத்தை வாசியுங்கள் என்று தானே சிபாரிசு செய்வார். ஒரு வேளை அப்புத்தகத்தினை-அது உலகில் எந்த மூலையிலுள்ள நூலகமாக இருப்பினும்- அதன் மென்பதிப்பு வடிவில் (Soft Copy )  வாசிக்க முடிந்தால், அதுவும் காசில்லாமல்? இந்நினைப்பே புத்தக ஆர்வலர்களை வாய் பிளக்க வைத்துவிடும். இக்கனவினை உண்மையாக்கும் முயற்சியை கூகுள் பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி விட்டது, தனது கூகுள் நூலகம் திட்டத்தின் மூலமாக. அக்டோபர் 2004ல்,பிராங்ஃபொர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்தது. மேலும் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் நூலகங்களின் புத்தகங்களை இணையத்தில் அனைவரும் வாசிக்கும் விதமாக வரிக்கண்ணோட்டம் (Scanning) செய்ய அக்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு அப்பணியை இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றது கூகுள். மார்ச் 2012 வரையிலும் ஏறக்குறைய 2 கோடி புத்தகங்கள் வரிகண்ணோட்டமிடப்பட்டுள்ளன.

கற்கும் பாடத்தின் புரிதல் ஆழப்பட வாசிப்புடன் சேர்த்து  அதனுடன் தொடர்புடைய படக் காட்சிகளை பார்ப்பது சிறந்தது. அதற்கு தான் யூ-டியூப். இன்று உலகின் அதி முக்கிய, புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என அனைத்து கல்வி சார்ந்த நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்தியேகமான அதிகாரப்பூர்வ தடங்களை (Official Channels) வைத்திருக்கின்றன. இன்றைய சூழலில் ஒரு இந்திய பேராசிரியரின் வகுப்பில் நாம் இங்கிலாந்தில் இருந்தபடியே பங்கு கொள்வது சாத்தியம்.

எனது தோழரின் தேடலில் அவருக்கு கிடைத்தவற்றை தங்களோடு பகிர்கின்றேன்.



யாவரும் கலைஞராக... : 

2005ல் காதலர் தினத்தன்று உலகிற்கு கிடைத்த ஒரு சிறப்பு பரிசு யூ-டியூப் எனும் வீடியோ பகிரும் தளம். PayPal  நிறுவனத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆரம்பித்தது இத்தளம். இத்தளத்தில் பயனர் கணக்கு (User Account) ஒன்றை துவக்கி யார் வேண்டுமாயினும் வீடியோ படக் காட்சிகளை பதிவேற்றலாம். அது அந்த நபரே கூட எடுத்த குறும்படமாக இருக்கலாம். படைக்கிற ஆவலும் திரைப்படமெடுக்கும் கனவும் உடையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தங்களின் படங்களுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் கிடைப்பது என்றால் சும்மாவா?! அதுவும் படைப்பு குறித்த அவர்களுடைய எதிர்வினையை பின்னூட்டமாக தெரிந்து கொள்ளும் வசதியும் கூடவே இருந்தால்.... !

வாசிப்பு ஒரு மனிதனைப் பண்படுத்தும். வாசிக்க ஆரம்பிக்கும் பலர் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை சீக்கிரமே கண்டுகொள்வர். ஆனால் அப்படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ள ஒரு தக்க மேடை அவசியம். முன்னெல்லாம் இதற்கு ஒரே வழி பத்திரிக்கைகள் தான். ஆனால் படைப்புகள் வெளியீட்டிற்கு தேர்வாகும் என்பது நிச்சயமில்லை. எல்லாரையும் படைப்பாளிகளாக்குகிறது வலையுலகம்.

1999ல் Pyra Labs எனும் நிறுவனத்தால் துவக்கப்பட்ட போதும், 2003ல் பிளாகர் (Blogger)  தளத்தை கூகுள் வாங்கிய பிறகுதான் அது பிரபலமடைய ஆரம்பித்தது. அதற்கு முதன்மையான காரணம் கூகுளுக்கு கைமாறிய பிறகே அத்தளத்தின்  சேவைகள் அனைத்தும்  இலவசமாக வழங்கப்பட்டன. வலைப்பூக்கள் என அழகு தமிழில் அழைக்கப்படும் இவை தேடல் உள்ள யாரும் படைப்பாளியாகவோ அல்லது இதழியல் துறையில் தடம் பதிக்கவும் கதவுகள் திறக்கிறது. தமிழ் உள்பட ஐம்பது மொழிகளில் இத்தளத்தில் தமக்கென யார் வேண்டுமானாலும் ஒரு வலை பக்கம் துவங்கலாம். ஒவ்வொரு தனி மனிதனின் அபிப்ராயங்களுக்கும், சமூக நிலை  குறித்த அவரது நிலைப்பாடுகளுக்கும், இங்கு இடமுண்டு. தணிக்கை கிடையாது என்பதே இதன் மாபெரும் பலம். கருத்து சுதந்திரம் முறையாக பயன்படுத்தப் படும்பொழுது வலைப்பூ மாபெரும் சிந்தனை எழுச்சியை உருவாக்க வல்ல களமாக மாறும்.