Showing posts with label அரும்பு. Show all posts
Showing posts with label அரும்பு. Show all posts

இன்றைக்கான குடிமக்கள்

Wednesday, March 13, 2013

எதிர்காலத்தைப் பொதி சுமக்கும்
பள்ளிக் குழந்தைகள்

அடிமை வாழ்வை அங்கலாய்க்கும்
இறந்த காலத்தில்
பெண்டிரில் பாதி
சமத்துவக் கனாக்களோடு மீதி
      
நாளைக்கான அதிகார வாட்களை
கூர்தீட்டியபடி ஆடவரில் பாதி
கையாலாகாமல் தம் குரல்வளைகளை
இசைவாக காட்டியபடி பயத்தில் மீதி

இருளிடம் தோற்று பகல் தன்னைக்
கையளித்த அந்தி வரையிலும்
தேடியாயிற்று

இன்றைக்கான குடிமக்கள் எவருமில்லை
நாடெங்கும் பிணங்கள் திரிய
இன்றுகள் எல்லாம் சாகின்றன
ஒவ்வொரு இரவும்
மீட்பாரின்றி.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட அரும்பு (மார்ச்’13)
மாத இதழுக்கு நன்றி.