அவனது அன்றாடம்

Friday, June 10, 2011



ஒரே உடுப்பு
ஒரு அழுக்கு மூட்டை
இவனை தரிசிக்காமல்
கடவுளைப் பார்ப்பது இயலாதது.
உண்டு பார்த்தாரில்லை
கொஞ்சம் தேநீர்
சில விள்ளல் பிரசாதம்
பணமிருந்தால் மாலையில் கஞ்சா
அல்லது பீடி
பிரகாரம் நோக்கி மறந்தும்
திரும்பியதில்லை விழிகள்.
ஆட்கள் கடக்கையில் ’சாமி’என்பான்.
அதிக சில்லரை தருபவரிடம் சிரிப்பான்
நிகோடின் பற்கள் தெரிய.

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

Tuesday, June 7, 2011




அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள
உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை
வெண்புகை குடை விரித்த
மலைச் சிகரத்தினுச்சியில்
காற்றில் தவழ்ந்த பெயரோ
நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி
அடர் பச்சை ஊசியிலை மரங்களின்
இலைகளின் கைகுலுக்கி
நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.
மலையின் மடியில் வீசிய
நெற்பயிரின் தலை கோதி
நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி
கரைகின்றது காற்றில்
இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட
இனியெனக்குச் சொந்தமில்லை.
அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்பட்டது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.06.11)
இணைய தளத்திற்கு நன்றி

பரிமாற்றங்களின் முடிவிலியில்

Saturday, June 4, 2011





பேரண்டத்தின் பெருமௌனத்தினூடே
மோதிக் கொண்டோம் நாமிருவரும்
மோதலின் மீட்சியில்
உன்னுடையவைகள் எல்லாம்
என்னுடையவைகளாகவும்
எனதுடையவைகளெல்லாம்
உனதுடையவைகளாகவும்...
உனது பிடிவாதம் எனதானது
எனது கர்வம் உனதானது
உனது கருணை எனதானது
எனது பொறுமை உனதானது
உனது கோபம் எனதானது
எனது காமம் உனதானது
உனது காதல் எனதானது
எனது வாஞ்சை உனதானது
பரிமாற்றங்களின் முடிவிலியில்
நீ சூரியனானாய்
நான் சந்திரனானேன்.