இவையெல்லாம் அழகுதான்

Wednesday, December 29, 2010



செவிகள் செரிக்காத இசை
விழிகள் புசிக்காத கவிதை
நினைவுகள் தளும்பாத மனது
கனவுகள் கலையாத இரவு
இவையெல்லாம் அழகுதான்
கூடவே சேர்த்துக் கொள்ளலாம்
அறியாதவருக்காய் வழியும்
ஒரு துளி கண்ணீரையும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(27.12.10) இணைய தளத்திற்கு நன்றி

குழந்தைகளின் உலகங்கள்

Monday, December 20, 2010



குழந்தைகளின்
உலகங்கள் விசித்திரமானவை
அவர்கள் சொல்லும் கதைகளைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் வித்தியாசமானவை
நடவடிக்கைகள் வேண்டாத
அவர்களின் புகார்களைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் ஆச்சரியமானவை
காரணமற்ற பேரழுகைக்குப் பிந்தைய
அவர்களின் - கணப்பொழுதில் மலரும்-
ஆழ் அமைதியையும் அதைத் தொடரும்
குறும்புன்னகையைப் போலவே
குழந்தைகளின் உலகங்களை
நமக்கென்று ஒன்றாய் வைத்துக்கொள்ள
நகலெடுத்திட முடிவதேயில்லை
ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே.


இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(20.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

கேள்விகளால் வாழும் மரணம்

Monday, December 13, 2010



வாசல் இல்லாத வீடு
இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை
அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும்
படரும் இருட்டில் பதுங்கும் குரோதம்
ஷெல்லடித்தல் செத்துப் போனதாம்
துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம்
நம்பித் தொலைப்போம்
வழியேது?
இனியாகிலும் காக்கட்டும் சாக்கிய முனி
மாக்களிடமிருந்து
எம் பெண்டிரின் யோனிகளை
‘பிரபா... நீ என்னை தேடியிருப்பேனு தெரியும்...’
கசிகிறது பண்பலையில் பாடல்
இன்னா செய்தாரை ஒருத்தல்...
முடிவதில்லை எல்லா தருணங்களிலும்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (12.12.10) இணைய தளத்திற்கு நன்றி.