குழப்பம்

Friday, June 11, 2010





என்னை வெளியேறச் சொல்லும்
நம் சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள்
இருக்க சொல்லி யாசிக்கும்
உன் விழிகள்
என் முடிவுகளும் நிலைப்பாடுகளும்
இதில் எதை சார்திருத்தல் வேண்டும் ?

மழை ஓய்ந்தது

Saturday, June 5, 2010




ஸர்ப்பமொன்று பாலை மணலில்
ஊர்ந்து உழுத தடம் போல
கலைந்து கிடக்கிறது செந்நிற மேகம்
திட்டுத் திட்டாய்

பந்தயத்தில் கடைசியாய் வழிகின்ற
துளியை அந்தரத்திலேயே உறிஞ்சுகிறது
தூக்கணாங் குருவியொன்று

இலைகளுதிர்த்த மொட்டை மரமொன்று
பூத்து குலுங்குகிறது நீர்த்துளிகளால்
அவ்வப்போது சில பூக்களையுதிர்த்தபடி

புணர்தலுக்கு முந்தைய முத்தத்தையிடுகின்றது
சேற்றைச் சேரும் நீர்த்துளியொன்று
புணர்தலுக்கு பிந்தைய முத்தத்தையிடும்
நீரையுள்வாங்கிய சேறு .

அடுத்தது நானோ?

Wednesday, June 2, 2010





உனக்கு முன்னே எனக்கு அறிமுகமானது
உன் பெயர்தான் என்றேன்

கண்கள் கூர்தீட்டி உதடுகள் சுழித்து
அதன்பின் நான்தானே என்றாய்

இல்லை யில்லை உன் கூந்தற்கொடியேறிய
மல்லிகையின் மணமென்றேன்

கைகளுக்கிடையில் கன்ன மேடுகள்
தாங்கி பிறகாவது நானா என்றாய்

அப்பொது மில்லை உன்னை வெயில் வருடி
தரையில் வரைந்த நிழற்படமென்றேன்

பொய்ச் சோம்பல் முறித்து காதுமடல் வருடியபடி
கேட்கிறாய் ;பிறகாவது நானா?

ம்... பிறகு நீதான் என்றென்

கண்களால் ஆயுதம் செய்யும்
சூத்திரமறிந்த நீ புரியாதது போல
பிறகாவது நானாவெனச் சிணுங்கிய
ஒவ்வொரு முறையும் என்னை
இழக்கவாரம்பித்திருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.