பந்தயப் புரவிகள் - பகுதி - I

Sunday, August 11, 2013








மனித மனம் நுட்மானது. பிடிக்குள் அடங்காதது. பல தருணங்களில் அதனை ஒரு காட்டு விலங்கை பழக்குவது போல பழக்க வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு உள்ளது. மனித மனத்தில் எழும் அக சிக்கல்கள் பெரும்பாலும் செயற்கையானதே. இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணிக் கொள்ளும் பாவனைகளில் இருந்தே பெரும்பாலான செயற்கைத்தனங்கள் தொடங்குகின்றன. தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனம் அதிலிருந்து தப்பிக் கொள்ள தன்னை மையப்படுத்திய ஒரு மாய உலகை புனைந்து கொள்கிறது. கசக்கும் உண்மையை விட இக்கனவுகளால் கட்டமைக்கப்பட்ட மாய வெளியே சிறந்ததென முடிவுக்கு வருகிறது.

சினிமா கலை தோன்றியது முதலே கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. வெறும் அசையும் பிம்பங்களை காட்சிபடுத்துவதில் துவங்கி பின்னர் கதைகள் சொல்லும் அதன் பயணம், தொழில்நுட்ப ரீதியிலும் கதை சொல்லும் முறைமைகளிலும் தொடர்ந்து பரிணமித்துக் கொண்டேதான் இருக்கிறது. சினிமா எனும் மாபெரும் கனவு தேசம் எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. அது ஒரு பிரம்மாண்ட களம். ஆனால் துளியும் இரக்கமற்றது. நமது பார்வைக்கு இக்களத்தின் உச்சத்தில் இருப்பவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே வருகிறது. அதாவது இப்பந்தய களத்தில் அப்போதைக்கு முன்னால் ஓடும் குதிரைகளின் மீது மட்டுமே எல்லோர் கவனமும்.  ஓடும் வரை மட்டுமே குதிரைகளைக் கொண்டாடிடும் உலகம். பந்தயத்தில் பின் தங்கும் குதிரைகள் யோசனைகளின்றி மறுதலிக்கப்படும். சினிமாவினால் வாழ்க்கை ஏணியின் உச்சத்தைத் தொட்டவர்களின் சரித்திரங்களை மட்டுமே நாம் அறிவோம். அல்லது அதனை மட்டுமே தெரிந்து கொள்ள நாம் பிரியப்படுகிறோம். கணக்கின்றி தோற்றவர் மத்தியில் வெல்பவரின் எண்ணிக்கை வெகு சொற்பமே திரையுலகில். வென்றவரின் வரலாறு மட்டுமே எழுதப்படுகின்றது என்ற போதிலும், கால வெள்ளத்தில், உச்சத்தில் இருக்கும் ஆளுமைகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கினால் அவர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கும் நேரமில்லை. மறுயோசனைகள் இன்றி அவர்கள் அங்கேயே கைவிடப்படுவர். அவர்களின் வளர்பிறை வாழ்க்கையின் அந்திமம் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்பிறையாகும் யார் பார்வைக்கும் வரமாலேயே.

ஒரு காலத்தில் உச்சத்திலிருக்கையில் செல்லுமிடமெல்லாம் கொண்டாடப்படும் ஆளுமையாய் வலம் வந்த திரை நட்சத்திரங்கள் தங்களது அந்திம காலத்தில் கடும் அக நெருக்கடிக்கும், மனச்சிதைவுக்கும் ஆட்படுகின்றனர். சினிமா மௌனப்பட யுகத்தில் இருந்து பேசும் பட யுகத்திற்கு நகர்ந்த போது அது மாபெரும் பாய்ச்சலாக இருந்தது. மௌனப்படங்களின் பெரு நட்சட்த்திரங்கள் பலர் இந்த மாற்றத்தால் ஏககால       த்தில் முகவரி இழந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் பேசும் படங்களுக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள இயலாதவர்களாய் இருந்தனர். பேசும் பட யுகம் ஏறக்குறைய மௌன யுகத்தின் நடிகர்களை முற்றாக ஓரங்கட்டிவிட்டு புதிய பல நட்சத்திரங்களை தந்தது. பெரு வேட்கையோடு கேளிக்கை மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு புதிய ஆளுமைகளை கண்டுபிடிப்பதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டது சினிமா உலகம்.

மௌன யுகத்தின் ஒரு மகத்தான ஆளுமையாய் இருந்த  நோர்மா டெஸ்மோண்ட்எனும் நடிகையின் அந்திம காலத்தை பற்றியும், அவளது  வாழ்க்கையில் தற்செயாலாய் குறுக்கிடும் ஹாலிவுட் கனவுலகில் திரைக் காதாசிரியனாகிட கனாக் காணும் ஜோ கில்லிஸ்எனும் இளைஞனுடைய வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறது Sunset Blvd (1950) எனும் திரைப்படம். இத்திரைப்படத்தை பில்லி வைல்டர் ( Billy Wilder) இயக்கியிருந்தார்.

சன்செட் பொலிவார்ட் (Sunset Blvd) என்பது அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தெருவின் பெயர். (Boulevard எனும் சொல்லுக்கு அர்த்தம் ஒரு அகலமான தெரு என்பதாகும்.) ஹாலிவுட் திரைநட்சத்திரங்களின் வீடுகள் அங்கே அமைந்துள்ளதால் அது மிகப் பிரபலமான பகுதியாகவும், ஹாலிவுட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் விளங்கியது. இத்திரைப்படத்திலும் இன்னும் சில படங்களிலும் இவ்விடம் அப்படியே உள்ளபடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

Saturday, July 13, 2013









என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

நாள்தோறும் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் இணையப் படைப்புகளில் எப்பொதும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரு விடயம் திரைப்பட விமர்சனங்கள். விமர்சனங்கள் என எழுதப்படும் பல பிரதிகள் திரைப்படத்தின் கதையை வார்த்தையால் மறுபிரதியெடுக்கும் வேலையையே செய்கின்றன. படைப்பைக் குறித்த ஆழமான பார்வை அவற்றில் இருப்பது மிக அரிதான ஒன்று. 

இதற்கு ஒரு காரணம் வாசக மனநிலையாகக் கூட இருக்கலாம். நம்மில் பெரும்பாலனோர் வெளியான புதிய திரைப்பமொன்றை குறித்த பிரதிகளையே வாசிக்க முற்படுகிறோம். அதன் முழு நோக்கமும் கதையைத் தெரிந்து கொண்டு, அப்படைப்பை பார்க்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் பொருட்டே வாசிக்கப் படுகிறது. அதனால் ஒரு வேளை எழுதுபவரும் அந்தத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்ற விதத்தில் தனது பிரதியை படைக்கிறார்.

என் வாசிப்பில் பல சிறந்த படைப்புகளை கருத்தூன்றி அலசி, எழுதப்பட்ட அற்புதமான விமர்சனங்களையும் திரைப்பட அறிமுகக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவ்வலைப் பக்கங்களை மிகக் குறைந்த வாசகரே வாசிக்கின்றனர். மசாலா கலந்து எழுதப்படும் சனரஞ்சக எழுத்துக்களே அதிகம் விரும்பப்படுகின்றன.   

பொதுவாக நான் வாசித்த வரையிலும் குறும்பட மற்றும் சினிமா
விமர்சனங்களுக்கு என்று ஒரு விமர்சன வடிவம் உள்ளதை உணர்கிறேன். அவைகள் முறையே

01.   குறும்பட/திரைப்படத்தின் கதையை விவரித்தல்; அதன் வழியாக
வாசகர்களுக்கு அப்படைப்பை பார்த்ததை ஒத்த ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தல்.

02. அக்கதை ஒரு காட்சி ஊடகத்தின் வழியே சொல்லப்பட்டுள்ளதால் அதன் காட்சி வடிவமைப்பு, பிண்ணனி இசையின் பங்கு, காமிரா கோணங்கள், கதாப்பாத்திர உருவாக்கம் மற்றும் அதன் வழியாக இயக்குனரின் கதையாடல் என்பன போன்ற விடயங்களை விவரித்தல்.

03. பொதுப்பார்வையில் கடந்து போக வாய்ப்பிருக்கக்கூடிய காட்சிகளின்
நுண்மைகளை வாசகருக்கு எடுத்துக்காட்டி அதன் வழியே திரைப்படங்கள்
பார்ப்பது குறித்தான சில புரிதலகளை உருவாக்கல்.

04. கதையோட்டத்தில் இடபெற்றிருக்கும் கருத்தியலை தர்க்க ரீதியாகவோ,
தத்துவ ரீதியிலோ, அழகியல் பார்வை வழியோ, குறிப்பிட்ட- படைப்பை பொறுத்த வரையில் பொருந்தி வரக்கூடிய-  இன்னம் ஏனைய வழிகளிலோ அப்படைப்பின் வழி இயக்குனர் இந்த சமூகத்தோடு நிகழ்த்தும் உரையாடலை எடுத்துக் காட்டி அப்படைப்பை முறையாக நோக்கமானது வாசிக்கும் வாசகர்களை கண்டடைவதற்கான சாத்தியங்களை உருவாக்குதல்.

05. அந்த படைப்பு குறித்த ஏனைய தகவல்கள், பின்புலங்கள், இயக்குனர்
குறித்த குறிப்புகள், அவரது பிற படைப்பை குறித்த தகவல்கள் என்பன போன்ற கட்டுரையின் மையமாக எடுத்துக் கொள்ளப்பட்ட படைப்பின் இதர தகவல்களை தருதல்

06. இவைகளின் வழியே ஒரு கலைப் படைப்பை அதன் சகல பரிமாணங்களுடன் (இயன்ற அளவிற்கு) புரிந்து கொண்டு அதன் முழுமையான அனுபவத்தை வாசகர் பெற்று கொள்ள வகை செய்தல்.



விடியலுக்கு தயாராவோம்

Saturday, July 6, 2013





 எந்த ஒரு கலையும், கலைப் படைப்பும்- அதன் வழியாக கலைஞனும்- நிலைக்க அதனை ரசிப்பவர்கள் முக்கியமான காரண கர்த்தாவாகின்றனர். கலையின் சிரஞ்சீவிதம் சாத்தியப்பட அக்கலையை முறையாய் புரிந்து கொள்வதே முதற் படியாகிறது. புதிதாய் தோன்றும் எக்கலைக்கும் கவர்ச்சி அதிகமே. அது புதிது எனும் கவர்ச்சியே அது. புதிதாய் இருக்கின்ற யாதொன்றின் மீதும் ஈர்ப்பு அதிகமாவது இயல்பே. ஆனால் அக்கலை நம்மிடையே நீடித்து நிலைத்து நம் வாழ்வியலோடு கலக்க அத்துவக்கக் கவர்ச்சி மட்டுமே போதுமானாதாய் இருப்பதில்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்படாத யாதொரு கலையும் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்படும்.

இவ்விடத்தில் நான் முறையாக புரிந்து கொள்ளுதல் எனும் பதத்தை பயன்படுத்தியிருப்பது காரணத்தோடுத்தான். ஒரு கலையோ, கலை வடிவமோ அழிவது வருத்ததிற்கு உரியதே. எனினும் அதைக் காட்டிலும் அக்கலை தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது இன்னும் அபாயகரமானது. அழிந்து போன ஒரு கலை ஒரு சமுதாயத்திற்கு இழப்பு தான். ஆனால் அதனைக் காட்டிலும் வீடியம் மிக்க அபாயகரமான எதிர்விழைவை அக்கலையை தவறாகப் புரிந்து கொள்வது உருவாக்கும். அது அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அதன் கலாச்சார, நாகரிக கருத்தாக்கங்களையும் விழுமியங்களையும் பாதிக்கக் கூடிய வல்லமை படைத்தது.

இப்படித்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் எனும் வாதத்தோடு மோசமான திரைப்படங்கள் நம்மிடையே உலா வருகின்றனவா அல்லது வேறு காரணங்கள் இதன் பிண்ணனியில் உள்ளதா? நல்ல சினிமாவின் வரவு , ரசிகனின் புரிதல் மற்றும் கலாரசனை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன? ஒரு நல்ல சினிமா ரசிகனின் புரிதலை ஆழப்படுத்தி அவனை மேன்மேலும்
பண்படுத்துகிறதா அல்லது நல்ல சினிமா என்பது விசாலப்பட்ட பார்வையுடைய , அறிவார்ந்த , அதிரசனை கொண்ட  ஒரு ரசிகக் குழுவினிடையே மட்டுமே தன் இருப்பிற்கான சாத்தியப்பாட்டை கண்டு கொள்ள முடிகிறதா?

மேற்கண்ட இரு வகையான சிந்தனை ஓட்டங்களில் எது உண்மையானதென ஆரய்ந்தால் ஒரு வகையில் இரண்டுமே சரிதான், அதற்கேயுண்டான் சூழல் கனிகிறபோது. சினிமா ஒரு கலை வடிவம். கொழுதுபோக்கும் கூட. இதனை ஒட்டியே நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். முதலாலித்துவ பார்வையில் இது ஒரு லாமம் ஈட்டிட்ட சாத்தியங்கள் நிறைந்த இன்னுமொரு தொழிற்துறை.

ஒரு கலையானது எப்போது ஒரு தொழிற்துறையாய் பரிணமிக்கிறதோ அப்போதே அது தனது கலாப்பூட்வமான இயல்புகளை முழுமையாய் தக்க வைத்துக் கொள்வது இயலாத ஒன்றாகிறது. அது சமரசங்களுக்கு உட்படுகிறது. அதன் மற்ற அம்சங்கள் ஓரங்கட்டப்பட்டு பொழுதுபோக்கு எனும் ஒற்றை அம்சமெ பிராதானப்படுத்தப்படுகிறது. ஏனெனில் வியாபாரச் சந்தைக்கு வரும் கலை பொழுது போக்குக்காகவே பெரும்பான்மையானோர்களால் நுகரப்படுகிறது.

ஒரு சிறந்த வியாபாரி சமுதாயத்தில் நிலவுகிற தேவையை பூர்த்தி செய்கின்ற விதத்தில் மட்டும் வர்த்தகம் செய்ய மாட்டான். மாறாக இல்லாத ஒரு தேவையை தனது தந்திரத்தால் உருவாக்கம் செய்து அதன் வாயிலாக ஒரு புதிய சந்தையை உண்டாக்கி பொருள் ஈட்டுவான். தொழில்மயமாகிப் போன சினிமாவிலும் இதுவே நடந்தேறுகிறது. இதுவே ரசிகர்களால் இவையிவையே ரசிக்கப்படும் என கற்பித்துக் கொண்ட உற்பத்திகளே நம்மிடையே அதிகமாய் கடை பரப்பப்படுகின்றன. இதற்கு வெகுசன ரசனை என ஒரு முத்திரையும் குத்தி விடுகின்றனர். உண்மையில் ஒரு உன்னதப் படைப்பானது முறையாக சேர்க்கப்படும் பொழுது அப்படைப்பு ரசிகனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் தூண்டு கோலாக அமையும். அதே வேளையில் இன்னொமொரு கோணத்தில் மேம்பட்ட ரசிப்புத் தன்மை கொண்ட ஒரு ரசிகர் கூட்டம் படைப்பை அடுத்த நிலைக்கு உந்தித் தள்ளி அதனை இன்னும் மேம்பட்டதொரு நிலையை அடைந்திட ஒரு ஆக்கப்பூர்வமான நிர்பந்தத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனிக்க தவற கூடாது. அறுபதுகளில் பிரான்சில் “புதிய அலை சினிமா (FERNCH NEW WAVE) அப்படித்தான் கருக்கொண்டு வளர்ந்தது.

நம்மிடையே தொன்றுதொட்டு பல கலைகள் இருந்து வருகின்றன. ஓவியம், இசை, நாடகம், நடனம், நாடிப்புற கலைகள் இப்படி பல. பெரும்பாலும் இவை நம் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்து விட்டவை. மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியோடு கூடவே இக்கலைகளும் தம்மைப் புதுப்பித்த வன்ணம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுள்ளன. இன்றும் இவை ஒரு படைப்பாளியின் சிந்தனை மேம்பாட்டால். பார்வையாளனின் ரசனை வளர்ச்சியால் புதிய பரிமாணாங்களைக் கண்டு கொண்டு தான் இருக்கின்றன. பெரும்பாலான இக்கலைகளின் கலை வரலாறு நமக்கு தெரியாத அளவிற்கு அவை தொன்மையானவையாய் இருக்கின்றன.

ஒரு கலையின் வரலாறு நமக்கு அதன் ஆதிப் புள்ளியிலிருந்து தெரியுமென்றால் அது சினிமாவாக மட்டுமே இருக்க முடியும். அதன் பிறப்பிலிருந்து, அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் இன்று வரலாறு. ஆனால் வருந்தத்தக்க செய்தி நாம் சினிமாவை ஒரு கலையாக அங்கீகரிக்கத் தயங்குவது தான். இருப்பினும் இந்நிலைக்கு மக்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப் படவில்லை என்பதே உண்மை. பாடமே நடத்தாமல் கேள்வி கேட்டு, பதிலளிக்கத் திணறும் மாணவனைப் பார்த்து ,நீ முட்டாள்என் சொல்வது முறையல்லவே.

தற்கால சூழலில் நமக்கு கல்வியே கலைகளை அறிமுகம் செய்கிறது. இலகியத்தையும், இன்னும் பிற கலைகளையும் நமக்கு பள்ளிப் பருவத்திலேயே நமக்கு அறுமுகம் செய்திடும் பாடத்திட்டம், சினிமாவை பட்டும் புறக்கணிக்கிறது. இளைய தலைமுறையினர் வைதவறிப் போவதற்கு தலையாய காரணங்களுள் ஒன்றாக சுட்டப்படுவது சினிமா. எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து சொல்லி தரும் பெற்றோர் கூட முறையாக சினிமா குறித்த முறையான அறிமுகத்தை, புரிதலை குஅந்தைகளிடம் உருவாக்கிட முனைவதில்லை. பின்னர் வேறு வழிகளில் தவறான அறிமுகம் கிடைக்கப் பெற்று வழிதவறும் இளைய சமுதாயம் குறித்து புலம்பிப் பிரயோசனமில்லை. பெற்றோருக்கே இது குறித்து ஞானம் இல்லாத போது அவர்களையும் கடிந்து கொள்வதில் அர்த்தமில்லை.

நீண்ட நாட்களாகவே என்னை ஆட்கொண்ட சினிமா கலை குறித்து  இயன்ற அளவிற்கு உயிர்ப்போடு  எழுத வேண்டும் என்ற நீண்ட நா கனவினை நினைவாக்கிப் பார்க்கும் ஆசை இப்போது புறக்கணிக்கமுடியாத அளவிற்கு ஆக்கிரமித்துக் கொண்டு உந்துகிறது. நான் கற்றுக் கொண்ட சினிமா குறித்து அனுபவப் பாடங்களை வரும் நாட்களில் பகிர நினைத்துள்ளேன்.

புதையல்கள் எப்போதும் மனிதனைத் தேடுவதில்லை. மாறாக மனிதனே புதியலைத் தேடுகிறான். தேவையுள்ளவரே தேடுதலைத் துவக்க வேண்டும். தேடத் துவங்குவோம்.