இரவை வென்ற விழிகள்

Monday, September 26, 2011




துஞ்சாத கண்களும்
துயிலாத இரவும்
உருட்டிய பகடையில்
விழுந்தது முதல் தாயம்

ஆட்டத்தை துவங்கியது இரவு.

உறங்காத இரவிற்குள்
சலனமின்றி உறங்கிய
கனவு ஏணிகள் வழியாய்
அசுரப் பாய்ச்சலில் நகர்வு.

எதிர்வந்த அரவங்களின்
வாய்தனில் அகப்படாமல்
தாண்டித் தாண்டி
தொடர்ந்தன கண்கள்

மூன்றாம் யாமத்தைத் தாண்டியும்
வெற்றி தோல்வியின்றி
தொடர்ந்த உருட்டல்களில்
எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு
இறுதியாய்
வைகறையின் வாயில் சிக்குண்டது.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(25.09.11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

நான் நிறையாத என் குறிப்பேடு

Friday, September 23, 2011




திறந்தபடியே
இன்னமுமென் குறிப்பேடு

காற்றினில் அலைகின்றது அருகிருக்கும்
அகல் விளக்கின் திரிக் குழாயினில்
ஒட்டிக் கொண்டிருக்கும் துளி சுடர்

தலை சாய்த்து ஓய்ந்திருக்கிறது
மைப்புட்டியிலுள்ள மயிற்பீலீ

என்னைக் குறிப்பெடுக்க எத்தனித்து
இறுதியில் பக்கம் முழுமையும்
நிறைந்த உன்னை
தாடை தாங்கும் கைகளுடன்
இமைக்காமல் பார்த்தபடி நானிருக்க
படபடக்கும் தாள்களின்
வெற்று பக்கங்களோ
எனைப் பார்த்து நகைக்கின்றன.

உன் சாணக்கியம்

Monday, September 19, 2011




வார்த்தைகளால் என்னை விஞ்சிட
முடியாதென்றுனக்கு
தெரிந்ததாலோ என்னாவோ
உன் கயல்விழிகளின்
ஒற்றைப் பார்வையிலென்னை
மௌனியாக்குகிறாய்
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும்
உறைந்த என் மௌனத்தின்
வெடிப்புகளினின்று கசிந்து
வழிந்தபடி என் காதல் மட்டும்...
வார்த்தைகளற்றுப் போன நம் உலகில்
பிறகெப்படிப் பிறந்திடும்
வெற்றிகளும் தோல்விகளும்?