சிந்தையால் கேள்

Friday, February 1, 2013






ஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?

ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.

இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.

கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.

விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!

நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…

கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !

விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.

உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !

தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…

பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (01-02-13)
மின்னிதழுக்கு நன்றி.

துயிலா கைபேசி

Wednesday, January 2, 2013





அகால வேளைகளில்
நானுப்பிய குறுஞ்செய்திகள்
காத்துக் கிடக்கின்றன
உன்னருகே உறங்கா
உன் கைபேசியினுள்…
நிறைமாத கர்ப்பிணியின்
பேறுகாலப் பரபரப்பையொத்த
மனநிலையுடன் மஞ்சத்தில்
புரண்டபடி நான்.

யாருமற்ற ஒரு தனியிரவு








துணையில்லா கணங்களின்
வர்ணங்களை வரிந்து கொண்டு
மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
அறை முழுமையும்
உறைந்த வெம்மையாய்
வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
யன்னலிடம் மன்றாடுகிறது
உள்ளே வர அனுமதி வேண்டி
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
தளராத பார்வையோ படர்கின்றது
அறை முழுவதும்
ஏழெழுபது முறையாக
படர்ந்த பார்வை படிகின்றது
ஓசையாய்ப் போன
கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
தீயின் நிழலில்.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை  (23-11-12)
இணைய இதழுக்கு நன்றி.