சிந்தையால் கேள்
Friday, February 1, 2013
Posted by வருணன் at 9:14 PMஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?
ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.
இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.
கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.
விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!
நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…
கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !
விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.
உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !
தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…
பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (01-02-13)
மின்னிதழுக்கு நன்றி.
யாருமற்ற ஒரு தனியிரவு
Posted by வருணன் at 6:55 PMதுணையில்லா கணங்களின்
வர்ணங்களை வரிந்து கொண்டு
மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
அறை முழுமையும்
உறைந்த வெம்மையாய்
வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
யன்னலிடம் மன்றாடுகிறது
உள்ளே வர அனுமதி வேண்டி
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
தளராத பார்வையோ படர்கின்றது
அறை முழுவதும்
ஏழெழுபது முறையாக
படர்ந்த பார்வை படிகின்றது
ஓசையாய்ப் போன
கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
தீயின் நிழலில்.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (23-11-12)
இணைய இதழுக்கு நன்றி.
Subscribe to:
Posts (Atom)


