சே VI- அரசியல் வாழ்க்கை

Saturday, May 14, 2011

பிடலின் படைகளோடு சேர்ந்து சே மாபெரும் யுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும் அதனை ருசிக்க முடியாமல் அவரது ஆஸ்மா அவரை வாட்டியது. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சகாக்கள் கேட்டுக் கொண்டனர். பிடலும் சேவிற்கு ஓய்வு தேவை என வலியுறுத்தினார். முடிவில் டராரா நகரில் அவர் தங்க சம்மதித்தார்.





பெயருக்குத்தான் ஓய்வு. எர்னஸ்டோவால் சும்மா இருக்கவே முடியவில்லை. பொழுதை வெட்டியாகக் கழிப்பதாகவே அவருக்குப் பட்டது. அதனால் அவர் புதியதாக மலர்ந்துள்ள கியூப தேசத்தின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நலப்பணிகள், அவசியமாக கொணரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் போன்றவற்றிற்கான திட்டங்களை வகுப்பதில் தனது காலத்தைச் செலவழித்தார். இக்கால கட்டத்தில் தான் சே தனது புகழ் பெற்ற புத்தகமான “கொரில்லப் போர்முறை” யை எழுதத் துவங்கினார்.

1958 பிப்ரவரியில் சேவுக்கு, போரில் அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு கியூப தேசத்துக் குடியுரிமை வழங்கப்பட்டது. தனது முதல் மனைவியிடம் சே தான் ஜூலை 26 இயக்கத்தின் ஒரு பெண் போராளியின் [அலைடா மார்ச்] மீது காதல் வயப்பட்டதை தெரிவித்தார். இருவரும் பரஸ்பர விருப்பத்துடன் பிரிந்தனர். ஜூன்2,1959ல், சே அலைடாவை மணந்தார்.

புதிய அரசுக்கு பிடிபட்ட படிஸ்டா படையினரை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். வழக்கம் போல போர் குற்றவாளிகளை எடுத்த மாத்திரத்தில் கொன்று விடாமல் அவர்களை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நடந்ததைப் போல சட்டத்தின் முன் நிறுத்தி பின்னர் முடிவெடுக்கலாம் என்ற கருத்தை மக்களுக்குப் புரிய வைத்து செயல் படுத்த ஆரம்பித்தது கியூப அரசின் நீதித்துறை. போர்க் கைதிகளின் மனுக்களைப் பரிசீலிக்கும் முக்கிய பொறுப்பு சேவிற்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 55-164 பேர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டிருக்கலாம் என தெரிகிறது.
[ஆய்வாளர்கள் சற்று தங்களுக்குள் எண்ணிக்கை குறித்து வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்றனர்.] அவருடன் இருந்தவர்கள், சே தன்னால் முடிந்த வரை அவர்களில் பலரை மன்னிக்கவே பெரு முயற்சி செய்தார் என நினைவு கூறுகின்றனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை நன்கு புரிந்து கொண்டனர் பிடலும், சேவும். நாட்டின் விவசாயிகளுக்கு நலன் பயக்கும் [நமது தெசத்தைப் போலவே கியூபாவும் ஒரு விவசாய நாடே. அதுவே உலகின் சர்க்கரைக் கிண்ணம்.] நில சீர்திருத்தங்களுக்கு அடுத்தபடியாக, அவர்கள் கவனித்தது கல்வித் துறையை. ஏனெனில் உயர்கல்விக்காக மாணவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. அந்நிர்பந்தத்திலிருந்து விடுபட ஒரு வழி உள்நாட்டில் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவது தான். 1959 க்கு முன்னர் 50-76% இருந்த கற்றவர் எண்ணிக்கை 1961 வாக்கில் 96% என உச்சம் தொட்டது.





இக்கால கட்டத்தில் தான் தான் வகித்து வந்த தொழிற் துறை அமைச்சர் பதவியோடு சேர்த்து அவருக்கு நிதித் துறையும் வழங்கப்பட்டது. அவர்- ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற- கியூப மத்திய வங்கிக்கு தலைவரானார். அத்தோடு நில்லாமல் அவர் உலகின் பிற நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் விதமாக, அரசு முறைப் பயணங்களை அனேக நாடுகளுக்கு மேற்கொண்டார். இப்பயணங்கள் அவரை உலகளாவிய அளவிற்கு அவரது ஆளுமையை எடுத்துச் சென்றது. உலக அளவில் சே முக்கியத்துவம் பெறத் துவங்கினார். 1964 டிசம்பர் மாதம் நியூயார்க்கில் நடை பெற்ற ஐக்கிய சபைகளின் கூட்டத்தில் கியூப பிரதினிதிக் குழுவுக்கு தலைமையெற்றுச் சென்றார். அங்கு அவர் சிறிதும் பயமின்றி ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளையும் அதனைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாத ஐக்கிய சபையின் கையாலாகாத தனத்தை கிழிகிழியேன கிழித்தார். உலகத் தலைவர்கள் இந்த இளைஞனின் துணிவைக் கண்டு வாயடத்துப் போயினர். ஆனால் கூடவே அமெரிக்காவின் வெறுப்பையும் சே சம்பாதித்துக் கொண்டார். சி.ஐ.ஏ.வின் கழுகுப் பார்வை இவரை வட்டமிட ஆரம்பித்தது.

1965ன் துவக்கத்தில் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள காங்கோ தேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு மக்களின் அடிமைத்தனமான அவல நிலை கண்டு உள்ளம் குமுறிப் போனார். அவர்களை ஒருங்கிணைத்து பயிற்றுவித்தால் அங்கு ஒரு கொரில்லப் புரட்சி சாத்தியம் என நம்பினார். அவரது நண்பரான எகிப்த்தின் அதிபர் கமால் நாசரோ, அந்த யோசனை சே நினைப்பதைப் போல நடந்திடும் நடைமுறை சாத்தியங்கள் குறைவு எனவும், வெற்றி வாய்ப்பு அற்றது எனவும் எச்சரித்தார். ஆனால் தனது கனவு நனவாகும் என முழுமையாக நம்பினார் சே. தனது முடிவில் பின்வாங்கவில்லை சே. ஒரு போராளியின் வரலாற்றின் பக்கங்களில் தோல்வியின் சரித்திரம் முதன் முதலாக எழுதப்படவிருப்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

சே V- கியூப புரட்சி-II

Sunday, May 8, 2011

வலுவிழந்த நிலையிலும் படிஸ்டா தைரியமாக இருந்ததற்கு ஒரு காரணம் அவரிடம் அதிக எண்ணிக்கையில் இருந்த படை வீரர்கள் தான். “ஆபரேஷன் வெரானோ” என்ற பெயரில் 12,000 வீரர்கள் சியரா மாஸ்டரா மலைப் பகுதியை சுற்றி வளைத்தனர். வெறும் சில நூறு வீரர்களை மட்டும் வைத்து அவர்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பிடலுக்கு. ஆனால் வெறும் என்ணிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆம். படிஸ்டாவின் படையினருள் பாதிப் பேர் போதிய பயிற்சியோ, போர் வீரருக்கான மனவலிமையோ இல்லாதவர்களாக இருந்தனர். நமது பாஷையில் சொல்வதானால் உப்புக்கு சப்பானி.

ஏற்கனவே முறையான பயிற்சியோடு இருந்த புரட்சிப் படையினர் இவர்களை ஒரு கை பார்த்து விட்டனர். 11ஜூலை 1958ல் துவங்கிய இப்போர் ( லா பிளாட்டா என அது அழைக்கப்பட்டது.) ஆரம்பம் முதலே புரட்சிப் படையினரின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் போர்களில் தான் எதிர்பாராத திருப்பங்கள் சகஜம் ஆயிற்றே. போர் துவங்கி 19 நாட்களுக்குள் வெற்றிக் காற்று அரசுப் படையின் திசையில் வீசத் துவங்கியது. இறுதியில் பிடலின் சிறிய படை சிதறடிக்கப்பட்டது. வழியின்றி பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டது பிடலின் படை. சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் முடிவாகவில்லை அதில். (எந்தப் பேச்சு வார்த்தையில் தான் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது?!)
ஒன்றும் உதவாது எனத் தெரிந்ததும் படைவீரர்கள் மெதுவாக மீண்டும் மலைப் பகுதிக்கே திரும்பினர். மறுபடியும் பதுங்கல் வாழ்க்கை...

இரு மாத திட்டமிடலுக்குப் பிறகு மீண்டும் 21 ஆகஸ்டு 1958ல் வீரர்கள் நேரிடையாக நாட்டிற்குள்ளேயே களமிறங்கினர். ஆனால் கடந்த முறை அடைந்த தோல்விலிருந்து பாடம் கற்றிருந்தனர். அதனால் கொரில்லப் போர்த் தந்திரங்களை பயன்படுத்தினர். அது பிரிந்து தாக்குதல். நான்கு அணிகளாக பிரிந்து முன்னேறினர். அடுத்தடுத்த வெற்றி அவர்களுக்கு உற்சாகமளிக்க உத்வேகத்துடன் முன்னேறினர்.

சே இந்த கபளீகரம் நடந்த போது என்னப்பா செய்து கொண்டிருந்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது. சியரா மாஸ்டரா மலை பகுதியில் வாழ்ந்த மலைவாசிகளுக்கு ஒன்றுமே இல்லாததை கண்டார். அவர்களுக்கு பள்ளிகள், மின்சாரம், மருத்துவமனை என எதுவுமில்லை. அவற்றை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தை பிடலுக்குப் புரிய வைத்தார். மேலும் ஆயுதக்கள் தயாரிப்பதற்குத் தேவையான சிறிய தொழிற்சாலைகளை கட்டியதோடு படையினருக்குப் கொரில்லப் போர் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார். படையின் நான்கு அணியும் வெற்றியோடு முன்னெறிக் கொண்டிருந்த அதே வேளையில், சே தலைமையில் 3 அணி வரிசை [coloumns] சாண்டா கிளாரா நகரை நோக்கி முன்னெறியது. வழியில் மற்றுமொரு புரட்சிப் படையினரோடு முதலில் முட்டிக் கொண்ட போதும், பிறகு ஒன்றிணைந்து பொது எதிரியான படிஸ்டாவை எதிர்த்தனர்.
31 டிசம்பர் 1958ல் நடந்த சாண்டா கிளாரா போர் [Battle of Santa Clara] மிகவும் முக்கியமானது. கூட்டுப் படையின் அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்த படிஸ்டா கூடாரத்தை காலி செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டமெடுத்தார். கியூபாவிற்கு புதிய வருடமும் ஒரு புதிய வாழ்க்கையும் சேர்ந்தே பிறந்தது.

சேவுடனான கூட்டுப் படையிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் படிஸ்டா ஓடியது குறித்து கேள்விப்பட்ட மாத்திரத்தில் பிடலின் வேலை மிக எளிதானது. ஆயன் இல்லாத ஆடுகளாக முழித்தபடி திண்டாடிக் கொண்டிருந்தது அரசுப் படை. ஆங்காங்கே இருந்த படையினரை வழி நடத்திய தளபதிகளிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார் பிடல். அவருக்கு வழி விடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை பாவம். வருடத்தின் 2ஆம் நாளே சுமூகமாக அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறின. அவர்கள் அனைவரும் கியூபத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டனர். இத்தருணத்தில் சேவும் சரியாக அங்கு வந்து ஹவானாவில் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.








படங்கள்: 01. சாண்டா கிளாரா போருக்குப் பின் சே

02. ஹவானா நகரில் வெற்றிக்குப் பின்

சே IV- கியூப புரட்சி-I

Tuesday, May 3, 2011



கியூப புரட்சியானது பிடலின் தலைமையில் ஜூலை 26 இயக்கத்தின், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ”படிஸ்டா”வை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதப் போரட்டம். படிஸ்டா கிட்டத்தட்ட அமெரிக்காவின் கைப்பாவை. அவரது தலைமையில் ஒரு பொம்மை அரசின் பின்னால் இருந்து ஆட்டுவித்தது என்னவோ அமெரிக்கா தான். பிடலின் படையினருக்கு இது சீக்கிரம் கிடைத்த வெற்றியல்ல. சொல்லப் போனால் புரட்சி, மான்கடா ராணுவக் குடியிருப்பைத் தாக்கிய தருணத்திலிருந்தே, துவங்கி விட்டது. அத்தாக்குதல் நடந்த அன்றே சிலர் பிடிபட்டனர். அவர்களுள் ஒருவரான தளபதி ஏபல் சான்டாமரியா, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் பிடலும் அவரது தம்பியும் பிடிபட்டனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பிடல் தங்கள் தரப்பின் சார்பாக நான்கு மணி நேரம் வாதாடினார். எதற்கும் பலனில்லை. பிடலுக்கு 15 ஆண்டு சிறையும், தம்பி ரால்ப்-க்கு 13 வருட சிறை தண்டனையும் கிடத்தது. ஒரு எழுச்சியுடன் துவங்கிய ஒரு புரட்சி அப்படியே நீர்த்துப் போனது போல ஆனது. கனவுக் கோட்டைகள் தகர்ந்த கணங்கள் அவை. (அப்பொதெல்லாம் சே பிடலை சந்தித்திருக்கவில்லை).

ஆனால் நல்ல வேளையாக அரசியல் நிர்பந்தம் காரணமாக 1955ல் படிஸ்டா அரசியல் கைதிகளை விடுவித்தார். வெளிவந்த உடனே காஸ்ட்ரோ சகோதரர்கள், படிஸ்டாவிற்கு எதிரான புரட்சியின் அடுத்த கட்ட ஆயத்ததிற்காக மெக்ஸிகோ சென்றனர். அங்கே ஸ்பானிய புரட்சியில் பங்கு பெற்ற அல்பெர்டோ பெயோ [Alberto Bayo]வின் கீழ் பயிற்சி பெற்றனர். இந்த சூழலில் தான் சே பிடலை சந்தித்தார்.





பயிற்சிக்குப் பிறகு அடுத்த தாக்குதலுக்கு தயாரானது புரட்சிப் படை. வெறும் 82 வீரர்களுடன் டிசம்பர் 2, 1956ல் “கிரான்மா” என்ற படகில் கியூபத் தீவை நோக்கி புறப்பட்டனர். ஒரு தேசத்தின் மொத்த ராணுவத்தை எதிர்கொள்ள இவ்வளவு சொற்ப எண்ணிக்கையிலான வீரர்களுடன், எந்த தைரியத்தில் அவர்கள் கிளம்பினார்கள் என்பது அதிசயம் தான். பெயருக்கு ஏற்றார் போல படகு மிகவும் வயதாகி ஒழுகிக் கொண்டிருந்தது. கிரான்மா கிளம்பியது.

படகு, திட்டப்படி சேர வேண்டிய காலத்திற்கு 2 நாட்கள் பிந்தியே சேர முடிந்தது. அதனால் அங்கு இருந்த மற்றொரு குழுவுடன் இவர்களால் இணைய முடியவில்லை. கிரான்மா கரை சேர, வந்தவர்கள் யாவரும், சியரா மாஸ்ட்ரா மலைப் பகுதிக்குள் புகுந்தனர். ஆனால் படிஸ்டாவின் படையோ இவர்களை துவம்சம் செய்தது. சிதறி ஓடியவர்களுள், வெறும் 22 பேர் மட்டுமே திரும்பவும் சந்தித்தனர். இருந்ததே குறைவான வீரர்கள். அவர்கள் மேலும் தற்போது குறைந்து விட்டனர். இக்கட்டான காலம். இதற்கிடயே மாணவ படையினர் வேறு ஜோஸ் ஆண்டோனியோ எனும் மாணவர் தலைமையில் நடந்திய முற்றுக்கை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

நல்ல வேளையாக, அமெரிக்க அண்ணாச்சி தனது உதவிகளை கொஞ்சம் படிஸ்டாவின் அரசுக்கு குறைத்துக் கொண்டார். மேலும் கியூப தேசத்தின் மீது சில வாணிபத் தடைகளை அறிவித்தது. இது படிஸ்டாவிற்கு பெருத்த பின்னடைவானது. உள்ளூரில் இருந்த கம்யூனிஸ்டுகளும் தங்களது நீண்ட கால ஆதரவை 1958ன் மத்தியில் விலக்கிக் கொள்ள அவர் நிலை இன்னும் மோசமானது.




பிடல் முதலில் தாங்கள் இருந்த மலை பிரதேசம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் முதலில் கொண்டு வந்தனர். இதற்கு அவர் தம்பி ரால்பும், சேவும் பக்க பலமாக இருந்தனர். இக்கால கட்டத்தில் தான் சேவின் திட்டமிடும் திறனையும், சமயோசிதத்தையும், யுத்த அறிவையும் பிடல் புரிந்து கொண்டார். சே மெல்ல மெல்ல பிடலின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவரானார். இக்காலத்தில் பிடலின் எதிர்ப்பாளர்கள், படிஸ்டாவின் ஆதரவாளர்கள் பலரை கொல்ல வேண்டியதாயிற்று. ராணுவத்தை எதிர்க்க அவர்கள் தேர்ந்தெடுத்தது கொரில்லப் போர் முறை. அது கை மேல் பலனளித்தது. சேவிற்கு இதனை பற்றிய நுணுக்கங்கள் அத்துப்படி. அவரே முன்னின்று தனது சகாக்களுக்கு பயிற்சி அளித்தார்.

புரட்சியாளர்கள் தங்களுக்கென ஒரு வானோலி அலைவரிசையை நடத்தி, அரசுக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்தனர். அப்பொது அவர்களது படையில் ஏறக்குறைய 200 பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய படையினரோ 30,000-40,000 என அளவில் பிரம்மாண்டமானது. ஆயினும் புரட்சிப் படையை எதிர் கொண்ட ஒவ்வொரு தருணத்திலும், படிஸ்டாவின் படையினர் பின் வாங்க வேண்டியதாயிற்று. எண்ணிக்கையில் மிகுந்திருந்தாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சியற்றவர்களாகவே இருந்தனர். புரட்சிப் படையொ கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் இல்லை.

வாணிபத் தடை படிஸ்டா அரசுக்கு பெரும் இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றது. போர் விமானங்கள் பழுதடைந்தன. அவற்றை சரி செய்ய உதிரி பாகங்கள் அமெரிக்காவிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். நாட்கள் நகர நகர கியூப வான் படை வலுவிழந்தது. அதனால் மலைப் பிரதேசத்தில் இருந்த புரட்சிப் படையை எதிர்க்க முடியாமல் திணறிப் போனார் படிஸ்டா.



படங்கள் : 01. படிஸ்டா
02. அல்பர்டோ பேயோ
03. புரட்சியாளர்களுடன் பிடல்