
துஞ்சாத கண்களும்
துயிலாத இரவும்
உருட்டிய பகடையில்
விழுந்தது முதல் தாயம்
ஆட்டத்தை துவங்கியது இரவு.
உறங்காத இரவிற்குள்
சலனமின்றி உறங்கிய
கனவு ஏணிகள் வழியாய்
அசுரப் பாய்ச்சலில் நகர்வு.
எதிர்வந்த அரவங்களின்
வாய்தனில் அகப்படாமல்
தாண்டித் தாண்டி
தொடர்ந்தன கண்கள்
மூன்றாம் யாமத்தைத் தாண்டியும்
வெற்றி தோல்வியின்றி
தொடர்ந்த உருட்டல்களில்
எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு
இறுதியாய்
வைகறையின் வாயில் சிக்குண்டது.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(25.09.11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.