
ஒவ்வொரு நாளின் இருப்பிற்கும்
இறப்பிற்கும் இடையேயான
அந்திப் பொழுதுகளில்
பூத்து நடைபயில்வாய்
கடற்கரை மணலில்
அன்றைய பொழுதில்
என்னிடம் கூட சொல்லாமல்
கரை மணலில் உன் காற்தடமெழுதும்
கவிதைகளை வாசித்து வருமாறு
சிறகுகள் கட்டி வானத்தினின்று
கோடி கோடியாய் மழைத் துளிகளை
அனுப்பி வைத்தனர் தேவதைகள்
திடீரென...
தேவதை இளவரசிகளிட்ட வேலையை
செவ்வனெ செய்ய இறங்கி வந்த
சேவகர்கள் யாவரும் சாரல்களாகி- சிலர்
உன்மீது விழுந்து வழிகின்றனர்
சிறகுகள் முறிந்தும் குழைந்து சிரித்து
நனைக்கின்றனர் உன்னை முழுவதுமாய்
வேறு பலரோ உன் காற்தட கவிதைகள்
யாவற்றையும் கரைத்து தேவபாஷைகளில்
மொழிபெயர்த்து தம் எஜமானிகளுக்கு
அனுப்புகின்றனர் அவசர அவசரமாய்
நனைந்த உனக்கு
வாசித்த தேவதைகள்
வானவிற் குடையை பரிசளிக்கின்றனர்
தூரத்தில் நான் பார்த்திருக்க
இரட்டை வானவில்
விண்ணிலொன்றும்
மண்ணிலொன்றுமாய்.